search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு கேது
    X
    ராகு கேது

    உங்கள் வாழ்வில் நன்மைகளை வரவழைக்கும் ராகு-கேது பரிகார தலங்கள்

    உங்கள் வாழ்வில் நன்மைகளை வரவழைக்க, ராகு-கேதுக்களை வழிபாடு செய்வது நல்லது. ராகு-கேதுக்களின் தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள், தமிழகத்தில் ஏராளமான இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
    1-9-2020 அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெற்றது. இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்வில் நன்மைகளை வரவழைக்க, ராகு-கேதுக்களை வழிபாடு செய்வது நல்லது. ராகு-கேதுக்களின் தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள், தமிழகத்தில் ஏராளமான இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    சிதம்பரத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, காட்டுமன்னார்கோவில். இங்கு சவுந்தரநாயகி உடனாய அனந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு அஷ்டநாகங் களும், அதன் தலைவனான அனந்தனின் தலைமையில் வழிபட்டு பேறு பெற்றுள்ளன. எனவே இத்தல இறை வனை வழிபட்டால், ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் ஆகியவை நீங்கும்.

    நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில், ஆதிசேஷன் வழிபட்ட தலம் ஆகும். இங்கும் ராகு-கேது பெயர்ச்சியின் போது வழிபாடு செய்யலாம்.

    பரமக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் நயினார்கோயில் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள சவுந்தரநாயகி உடனாய நாகநாத சுவாமி ஆலயத்திலும் வழிபடலாம்.

    திருமீயச்சூர் என்ற ஊரில் உள்ள லலிதாம்பிகை கோவிலின் பிரகாரத்தில் 12 நாகர்கள் காணப்படுகின்றன. இதற்கு பாலாபிஷேகம் செய்தும், பரிகாரம் செய்யலாம்.

    கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் என்ற ஊரில் சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் இருக்கும் கல் கருடனின் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது.

    வேலூர் அருகே உள்ள சோளிங்கரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் பெத்தநாகபுடி என்ற ஊர் உள்ளது. இங்கு நாகவல்லி உடனாய நாதேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

    காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகே, மாகாளன் எனும் நாகம் லிங்கம் அமைத்து பூஜித்த கோவில் உள்ளது. இந்தக் கோவில் மூலவர், மகாகாளேஸ்வரர் என்பதாகும். இது ராகு-கேது பூஜித்த தலம் ஆகும்.

    சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனாய படம்பக்கநாதர் கோவில், ஆதிசேஷன் வழிபட்ட திருக்கோவிலாகும். இங்கு வழிபட்டாலும், ராகு-கேது தோஷம் விலகும்.

    கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளது கதிராமங்கலம். இங்குள்ள வனதுர்க்கை அம்மனை, காவிரியில் நீராடி வழிபட்டால் ராகுவால் உண்டான தோஷங்கள் நீங்கும்.

    சிவகங்கை அருகில் உள்ள காளையார்கோயிலுக்கு சென்று, அங்குள்ள மகமாயி அம்மன், கானக்காளையீஸ்வரர் ஆகியோரை வழிபடுங்கள். இதனால் ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

    நன்னிலத்தில் இருந்து குடவாசல் செல்லும் சாலையில் உள்ளது வாஞ்சி நாதேஸ்வரர் திருக்கோவில். இங்குள்ள நாக தீர்த்தத்தில் நீராடி, நாகநாதரையும், நாகராஜரையும் வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும்.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டு வந்தால், ராகு- கேதுவால் ஏற்பட்ட தடைகள் விலகும்.

    புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பேரையூர். இங்கு வீற்றிருக்கும் பிரகதாம்பாள் உடனாய நாகநாதரை, நாகலோகத்தில் இருந்த பாம்புகள் யாவும் வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகின்றது. இங்குள்ள 5 தலை நாகரை வணங்குவதும் நாக தீர்த்தத்தில் நீராடுவதும் விசேஷம்.

    திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பட்டீஸ்வரம் திருத்தலம் அருகில் உள்ளது மணக்கால் என்ற ஊர். இங்கு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனை வழிபட்ட ஆதிசேஷன் தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றான். இங்குள்ள சிவலிங்கத்தில், பாம்பு ஊர்ந்து சென்ற தடம் இருப்பதை இன்றும் காணலாம்.

    தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது, கத்தரிநத்தம். இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும், இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்திக்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.
    Next Story
    ×