search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இன்னம்பர் எழுத்தறிநாதர் கோவில்-
    X
    இன்னம்பர் எழுத்தறிநாதர் கோவில்-

    இன்னம்பர் எழுத்தறிநாதர் கோவில்- கும்பகோணம்

    கும்பகோணம் - சுவாமிமலை சாலையில் உள்ள புளியஞ்சேரிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் இன்னம்பர் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நமக்கெல்லாம் தமிழ் இலக்கணத்தை வடித்துக் கொடுத்தவர் குறுமுனி அகத்தியர். அந்த அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை எடுத்துரைத்தவர் திருஇன்னம்பரில் எழுந்தருளி இருக்கும் ஈசன். இங்குள்ள ஈசனின் திருநாமம் ‘ஐராவதேஸ்வரர்’ என்பதாகும். அகத்தியருக்கு தமிழ் இலக் கணத்தைப் போதித்ததால் ‘எழுத்தறிநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் அட்சரபுரீஸ்வரர். ‘அட்சரம்’ என்றால் ‘எழுத்து’ என்று பெயர்.

    சுதன்மன் எனும் சிவபக்தன், இன்னம்பர் எழுத்தறிநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தான். அவன் இன்னம்பர் ஆலயத்தின் நிர்வாகக் கணக்கு வழக்குகளை கவனிக்கும் பொறுப்பிலும் இருந்தான். ஒருமுறை அந்தப் பகுதியை ஆண்டு வந்த மன்னன், இன்னம்பர் கோவிலின் வரவு-செலவுக் கணக்குகளை ஆய்வு செய்ய நினைத்தான். ஆகையால் அந்த கணக்கு வழக்குகளை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு சுதன்மனுக்கு கட்டளையிட்டான். சுதன்மனும் ஆலயக் கணக்கை எடுத்துக்கொண்டு போய் மன்னனிடம் சமர்ப்பித்தான். ஆனால் அந்தக் கணக்கு வழக்கு களில் மன்னனுக்கு ஐயம் ஏற்பட்டது.

    “நாளை பகல் பொழுதுக்குள் என்னிடம் சரியாக இன்னம்பர் ஆலயக் கணக்குகளைச் சமர்ப்பித்தாக வேண்டும்” என்று உத்தரவிட்டான் மன்னன்.

    ‘எந்த இடத்தில் கணக்கில் தவறு செய்தோம்’ என்று தெரியாத நிலையில் மனக்குழப்பம் அடைந்தான் சுதன்மன். பின்னர் எழுத்தறிநாதரின் கருவறை முன்பாக அமர்ந்து சிவபெருமானை நினைத்து துதித்தான். தன் வேதனையை, தனக்கு வந்திருக்கும் துன்பத்தை நீக்க வேண்டும் என்று ஈசனை பிரார்த்தித்தான். மறுநாள் மன்னனைச் சந்திக்கச் சென்றான்.

    அவனைப் பார்த்து வியந்த மன்னன், “இன்று காலையிலேயே இன்னம்பர் ஆலயக் கணக்கு வழக்கு களை என்னிடம் மிகச் சிறப்பாக ஐயமுற விளக்கி விட்டீர்களே. இப்போது எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

    சுதன்மனுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழப்ப நிலையிலேயே அரசவையை விட்டு வெளியே வந்தவன், எழுத்தறிநாதரின் ஆலயத்திற்குள் ஓரிடத்தில் படுத்து கண்ணயர்ந்தான். அப்போது அவன் கனவில் தோன்றிய ஈசன், “அன்பனே! நான்தான் உன் உருவத்தில் மன்னனிடம் சென்று நீ எழுதவேண்டிய கணக்கை எழுதி ஆலயக் கணக்கு வழக்குகளை ஒப்படைத்தேன்” என்றுக் கூறி மறைந்தார்.

    இறைவனின் அருட்கருணையை நினைத்து, தன் கடைசிக் காலம் வரை இன்னம்பர் கோவிலிலேயே வழிபட்டு, சிவலோகப் பதவி அடைந்தான் சுதன்மன்.

    ஆலயத்தில் மூலவர் எழுத்தறி நாதர், மிகப்பெரிய லிங்க வடிவில் கம்பீரமாக, கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக ருத்திராட்சப் பந்தலின் கீழ் அருள்புரிகிறார். கருவறை கோஷ்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். முருகப்பெருமான், தட்சிண கயிலாய லிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சண்டேஸ்வரர், பைரவர் ஆகியோர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார்கள். இத்தல எழுத்தறிநாதரை 27 நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    ஈசனின் கருவறை விமானம் கஜபிருஷ்ட வடிவில் இருக்கிறது. விமானத்தின் கிழக்குப் புறம் ஈசன், அம்பாள், சுதன்மன் மற்றும் மன்னனின் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள பைரவரை தேய்பிறை அஷ்டமி நாட்களில் பால், பன்னீர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய் தாலோ, அல்லது நெய்தீபம், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டாலோ கடன் பிரச்சினை, நோய்கள் விலகும் என்கிறார்கள்.

    இங்குள்ள நடராஜர் சிலை கடலில் இருந்து கிடைத்ததாகக் கூறுகிறார்கள். இவரை மாத திருவாதிரை நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் இல்லத்தில் நிறையும். எழுத்தறிநாதரின் வாசல் அருகே நான்கு திருக்கரங்களுடன் தெற்கு நோக்கியபடி சவுந்தரநாயகி என்னும் நித்திய கல்யாணி அம்மன் திருமணக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இந்த அன்னையை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சைப்பழ தீபம் ஏற்றி குங்குமார்ச்சனை செய்து வழிபட்டால் வெகு விரைவில் தடைகள், தோ‌ஷங்கள் விலகி திருமணம் நடைபெறும்.

    ஆலயத்திற்கு கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கியபடி நான்கு திருக்கரங்களுடன் கையில் ஜெபமாலையை ஏந்தி தவக்கோலத்தில் மற்றொரு அம்பாளான ‘சுகந்த குந்தளாம்பிகை’ அருள்பாலிக்கிறாள். ‘அழகிய மணம் பொருந்திய கூந்தலைக் கொண்டவள்’ என்பது இதன் பொருள். ‘பூங்கொம்பு நாயகி’ என்றும் அன்னையை அழைக்கிறார்கள். மகா மண்டபத்தில் நவக்கிரகங்கள் உள்ளன. கஜலட்சுமி, பிட்சாடனர், காட்சி கொடுத்த நாதர், மகாலிங்கேஸ்வரர், காசி விஸ்வநாதர் - விசாலாட்சி சன்னிதிகளும் உள்ளன. செண்பக மரம் இந்த ஆலயத்தின் தல மரமாக உள்ளது.

    சுதன்மனுக்கும், அகத்தியருக்கும் முறையே கணக்கு, இலக்கணங்களை முறைப்படுத்தி இத்தல ஈசன் அருளியதால் இத்தலத்தில் அனுதினமும் வித்யாப்பியாசம் செய்விக்கிறார்கள். குழந்தைகளை அழைத்துவந்து அம்மையப்பனை வழிபட்டு, பின்னர் பூ காம்பினால் அல்லது நெல்லினால் சிவாச்சாரியார் குழந்தைகளின் நாக்கில் ‘ஓம் அட்சரபுரீஸ்வராய நமஹ’, ‘ஓம் அகத்தியாய நமஹ’, ‘ஓம் சரஸ்வதியே நமஹ' என எழுதுகிறார். இப்படிச் செய்வதால் குழந்தைகள் படிப்பில் இருக்கும் மந்தநிலை மாறி நன்றாக படிப்பார்கள் என்பது நம்பிக்கை. வித்யாப்பியாசம் என்பது இந்த ஆலயத்தில் அனுதினமும் நடைபெற்றாலம், சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாட்களில் குழந்தைகளை கூட்டி வந்து ஈசனை வழிபட்டு வித்யாப்பியாசத்தை தொடங்குவது அதிக அளவில் நடக்கிறது.

    அமைவிடம்

    கும்பகோணம் - சுவாமிமலை சாலையில் உள்ள புளியஞ்சேரிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் இன்னம்பர் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மிக அருகாமையில் திருப்புறம்பயம் சாட்சிநாதர் ஆலயமும் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து வடமேற்கே 6 கிலோமீட்டர் தூரம் சென்றால் இன்னம்பர் திருத்தலத்தை அடையலாம்.

    ஆலய பிரகார வலம்

    ஆலயத்தில் இருக்கும் பிரகாரத்தை வலம் வருவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இறைவனை வழிபட்டு முடித்ததும், ஆலயத்தை பிரகாரம் சுற்றி வருவார்கள். பரிகாரத்திற்காக பிரகாரம் சுற்றுவதும் வழக்கமாக இருந்தது. பிரகாரம் வரும் பொழுது ஓம்காரம் ஒலிக்க வேண்டும். உள்மன பாரம் குறைய வேண்டும். இறைநாமம் சொன்னாலே பலன்கள் பலமடங்கு கிடைக்கும். பிரகாரம் வலம் வரும் பொழுது மிக வேகமாக நடக்கக்கூடாது. அருகில் வருபவர்களிடம் தகாத சொற்களையும், குடும்பப் பிரச்சினைகளையும் சொல்லிக் கொண்டு வரக்கூடாது. தெய்வ சிந்தனையிலேயே வலம் வந்தால் தான் நினைத்தது நடக்கும். கால் இரண்டும் நடக்க, கையிரண்டும் ஏதோ செய்ய, மனம் வேறு சிந்திக்க, கண்கள் எதையோ பார்க்க நாம் கடமைக்கு பிரகாரம் வரக்கூடாது. கடவுள் சிந்தனையோடு வலம் வரவேண்டும். கோவிலை விட்டு வெளியில் வரும் போது கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்று சொல்லி கோபுரத்தை வணங்கிவிட்டு வீடு திரும்ப வேண்டும்.

    சூரிய பூஜை


    ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளானது, இந்திரனின் வெள்ளை யானை. ஐராவதம் என்ற பெயர் கொண்ட அந்த யானை, இத்தல இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றது. அதனால் இத்தல ஈசனுக்கு ‘ஐராவதேஸ்வரர்’ என்று பெயர். ‘இனன்’ என்றால் ‘சூரியன்’ என்று பொருள். சூரியன் இத்தல ஈசனை நம்பி வழிபட்ட ஊர் என்பதால், ‘இனன்நம்பூர்’ என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் இதுவே மருவி ‘இன்னம்பூர்’ என்றாகி, தற்போது ‘இன்னம்பர்’ என்று வழங்கப்படுகிறது. இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி 31-ந் தேதி, புரட்டாசி 12-ந் தேதி மற்றும் பங்குனி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மூலவர் எழுத்தறிநாதரின் மீது தன்னுடைய சூரியக் கதிர்களை வீசி, சூரிய பகவான் வழிபாடு செய்கிறார். இந்த நாட்களில் ஆலயத்தில் நடைபெறும் சூரிய பூஜை, திருவிழா போல் கொண்டாடப்படுகிறது.

    சிவ.அ. விஜய் பெரியசாமி
    Next Story
    ×