search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடும்பாடி சின்னம்மன் ஆலயம்
    X
    கடும்பாடி சின்னம்மன் ஆலயம்

    கடும்பாடி சின்னம்மன் ஆலயம் - சைதாப்பேட்டை

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் ஆலயம் சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயமாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் ஆலயம் சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயமாகும். இந்தப் பகுதி மக்களுக்கு சின்னம்மன்தான் இஷ்டதெய்வம், காவல் தெய்வம் எல்லாமே! அழகிய கோபுரத்துடன் திகழ்கிறது கோவில். நுழைவாயிலின் வலப்புறத்தில் மதுரை வீரனும், இடப்புறத்தில் காத்தவராயனும் காட்சி தருகின்றனர். உள்ளே... கருணையும், உக்கிரமும் பொங்க, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறாள் சின்னம்மன்.

    கடன் தொல்லைகள் தீர, கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்க, திருமண தடை நீங்க இந்த அம்மனை பிரார்த்தனை செய்கிறார்கள்.
    பக்தர்கள் ஆடி மாதம் பொங்கல் படையலிட்டும், அபிஷேகம் செய்தும், அம்மனுக்குப் புடவை சார்த்தியும், மஞ்சள் சரடு கட்டியும் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.

    கோவில் உள்ளே இருக்கும் புற்றுச் சன்னதி ரொம்பவே விசேஷமானது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். சின்னம்மனை வணங்கிவிட்டு, புற்றுக்கு பால் அல்லது முட்டை படைத்து வேண்டிக் கொண்டால் சகல தோஷங்களும் விரைவில் நீங்கும். சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சின்னம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள். வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு (ராகு காலம் நிறைவுறும் நேரம்) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து மனதாரப் பிரார்த்தித்தால், கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்!

    இங்குள்ள மக்கள் தங்கள் வீட்டில் எந்த விசேஷம் வைபவம் என்றாலும், இந்தக் கோவிலுக்கு வந்து அம்மனின் திருப்பாதத்தில் முதல் பத்திரிகையை வைத்துவிட்டே அடுத்தடுத்த வேலைகளைத் தொடங்குகின்றனர். அப்படி அழைத்தால், அந்த விழாவை அம்மனே முன்னின்று சிறப்பாக நடத்தி அருள்வாள் என பக்தர்கள் போற்றுகின்றனர். கோவிலில் வேப்ப மரமும், பனைமரமும் பல வருடங்களாக இருந்து வருகின்றன. வேப்ப மரத்துக்கு மஞ்சள் சரடு கட்டி, சின்னம்மனை வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!

    ஆடி மாதம் வந்துவிட்டால் சின்னம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் தினமும் வந்த வண்ணம் இருப்பார்கள். அமாவாசைக்குப் பிறகு வருகிற வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது பிரம்மோற்சவ விழா. இந்தப் பத்து நாட்களும், தங்களது பிரார்த்தனை நிறைவேறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொங்கல் படையலிட்டும் அபிஷேகம் செய்தும், அம்மனுக்குப் புடவை சார்த்தியும் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.

    இந்த நாளில் சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜை, திருவீதியுலா என அம்மனைக் காணக் கண் கோடி வேண்டும். 9-ம் நாள் விழாவில் திருவீதிவிழா, பொங்கல் படையல், அக்னிக் கரகம் எடுத்து ஆடுதல்... என ஊரே அமர்க்களப்படும். 10-வது நாள் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடைபெறும். கார்த்திகையில் 108 சங்காபிஷேகம் விமரிசையாக நடைபெறும்.

    கடும்பாடி சின்னம்மன் திருக்கோவிலில் அம்மன் சுயம்பு வடிவில் அருள்பாலிப்பதும், இவரை அணுகினால் கடன் தொல்லைகள் தீரவும், கணவன் மனைவி அன்னியோன்யமாய் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமையாய் வாழவும் திருமணத் தடை நீங்கவும் அனுக்கிரகம் செய்வார் என்பது சிறப்பு. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தல் அமோகமாய் இருக்கும். அம்மை நோய் கண்டவர்களுக்கு சங்கு தீர்த்தம் மருந்தாய் அமைகிறது.

    காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்துள்ளது.

    ஆடி மாத பிரம்மோற்சவ விழா

    சைதாப்பேட்டை கடும்பாடி சின்னம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. 11 நாட்களுக்கு இந்த பிரம்மோற்சவ விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு வகையான வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாத பிரம்மோற்சவ விழா ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

    1-8-2019 (வியாழன்) மாலை புற்றுமண் எடுத்து வருதல்.
    2-8-2019 (வெள்ளி) காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் கொடியேற்றம், மாலையில் யாளி வாகனம்.
    3-8-2019 (சனி) காலை பவளக்கால் விமானம், மாலையில் மயில் வாகனம்.
    4-8-2019 (ஞாயிறு) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் அன்னவாகனம்.
    5-8-2019 (திங்கள்) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் நாக வாகனம்.
    6-8-2019 (செவ்வாய்) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் சிம்ம வாகனம்.
    7-8-2019 (புதன்) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் யானை வாகனம்.
    8-8-2019 (வியாழன்) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் தொட்டி உற்சவம்.
    9-8-2019 (வெள்ளி) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் குதிரை வாகனம்.
    10-8-2019 (சனி) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் காமகோடி விமானம், அக்னி கரகம்.
    11-8-2019 (ஞாயிறு) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் சிம்ம வாகனம்.
    12-8-2 019 (திங்கள்) மாலையில் கந்தர்வ வாகனம்.

    தெய்வீக சக்தி நிறைந்த வேப்பிலை

    கருமாரிக்கும் இதர மாரியம்மன் அம்பிகைகளுக்கும் மிகவும் இஷ்டமான மரம் வேப்பமரம் தான். அரச மரத்தையும், வேப்பமரத்தையும் தெய்வீக மரங்கள் என்று சொல்வார்கள். அதனால் தான் அவைகளை தம்பதிகளாகக் கருதி ஒன்று சேர வளரச் செய்து திருமணமும் செய்விப்பார்கள். மரங்களில் வேப்ப மரத்தை சக்தியாகவும், அரச மரத்தை சிவமாகவும் கருதுவதுண்டு. மாரியம்மனுக்கு வாசனைப் பூக்களைவிட வேப்பிலை மிக பிடித்தமானது. நோய்களுக்கு மந்திரிக்க வேப்பிலை உபயோகிக்கிறார்கள். இம்மரத்தால் தெய்வத் திருவுருவங்கள் கூட செய்கிறார்கள்.

    வேப்பமரத்தை சக்தி அம்சமாக கூறுவானேன்? சூரியனால் கொடுக்கப்படுகிற சக்தியை வெகு மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்வது வேம்பு ஒன்றே என்று கருதப்படுகிறது. சூரிய சக்தியை கிரஹித்த வேப்பமரம் அதைக் கொண்டு எல்லா ஜீவராசிகளும் முக்கியமாக மனிதவர்க்கத்திற்கும் தொண்டு செய்து வருகிறது. சூரியனுடைய முக்கியமான அம்சங்களால் ஏற்பட்டது. உணர்ச்சிக்கு உஷ்ணம்போல ருசிக்கு கசப்பாகும்.

    இக்குணங்களை அடைந்துள்ள வேம்பில் உஷ்ணத்தை சாந்தி செய்யும்படியான குணமும் அடங்கியுள்ளது. அதனாலேயே அதை சக்தி என்றும், பெண் ரூபம் என்றும் சொல்கின்றனர். வேம்புக்கு பராசக்தி என்ற பெயரும் உண்டு. கிராம தேவதைகள் இருக்கும் இடமெல்லாம் வேப்ப மரத்தைக் காணலாம். கிராம தேவதைகள் நம் மீது சினம் கொள்ளாமல் எப்போதும் சாந்தமாகவே இருக்க வேப்பிலை உதவும். வேப்பம் பூவை உட்கொள்வதால் குடல் சுத்தமாகும். அஜீர்ணம் நீங்கும். வேம்பில் ஆயிரம் மருந்து உள்ளது என்பது முற்றிலும் உண்மை. அதனால் தான் ஆடி மாதம் அம்மன் திருத்தலங்களில் அதிக அளவில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

    Next Story
    ×