search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில்
    X
    மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில்

    மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில்

    மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆனந்தம், ஆறுதல், அமைதி இம்மூன்றையும் ஒருங்கே தரவல்ல தெய்வீகத் திருத்தலம்தான் மாங்காடு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியமையால் இத்தலம் “மாங்காடு” என்னும் காரணப் பெயர் பெற்றது.

    இந்த ஆம்ராரண்யத்தில், ஒற்றை மாமரத்தடியில், ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரிந்து, பின்னர் காஞ்சியிலே ஈசனை மணம் புரிந்து கொண்டதாக ஐதீகம். மாங்காடு தலத்திற்கு ஒரேயரு முறை வந்து விட்டால் போதும், அதன் பின்னர் நம்மையறியாமல் நம் மனம் மாங்காட்டிற்கு நம்மை செலுத்தும்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.

    இந்த மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாறு வருமாறு:-

    ஒரு சமயம் கயிலை மலையிலே தனித்திருக்கும் போது ஞானப் பூங்கோதையாம் எம் அன்னை சிறு குழந்தையைப் போல விளையாட்டாக சூரிய , சந்திரர்களான அந்தப் பித்தனின் கண்களை பொத்த, அதனால் சர்வ லோகங்களும் இருளில் மூழ்கி திண்டாடியது. மக்களும் தேவர்களும், கடவுட் பூஜையிலிருந்து வழுவினர்.

    இப்பாவம் அம்மையை சாராது என்றாலும், உலகத்தோர் உய்யும் பொருட்டும் அவர்கள் 32 அறங்களையும் சரியான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டும் அம்மையே உலகமக்களுக்கு அவற்றை நடத்தி காட்ட வேண்டி பூலோகத்திற்கு சென்று காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்து சிவ பூஜை செய்யுமாறும், பின் தாமே வந்து மணம் செய்தருளுவதாகவும் அருளினார் சிவபெருமான்.

    இறைவனின் ஆணைப்படி அம்மன் பூலோகத்தில் ஆம்ரவனமாம் இந்த மாங்காட்டுப்பதியிலே வந்து அவதரித்தாள். மாங்காட்டிலே காமாட்சியாய் அவதரித்த அன்னை ஈஸ்வரனை வேண்டி பல காலம் காத்திருந்தாள், பலன் ஏதும் இல்லாத காரணத்தாலும் ஐயனைக் காண வேண்டும் என்ற தாபத்தாலும் ஐந்து குண்டங்களில் அக்னி வளர்த்து நடு குண்டத்தில் ஊசி முணையில் ஒற்றைக் காலில் சிவனைக் காண கடுந்தவம் புரியத் தவக் கோலம் பூண்டாள்.
    இதனால் அம்மை இத்தலத்திலே “தபசு காமாட்சி” என்று அழைக்கப்படுகின்றாள்.

    ஐந்தணலிலே தன் இடக்காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி நடு அக்னியில் படும்படியும், வலது காலை இடது தொடைக்கு சற்றும் மேல் புறத்தில் இருக்குமாறும், இடது கரத்தை நாபிக் கமலத் திற்கு சற்று மேற்புறமாயும், வலது கரத்தில் ஜப மாலையுடன் தனது சிரசிற்கு மேலும், தனது அழகியத் திருக்கண்களை மூடிய கோலத்தில் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடுத் திருத்தலத்தில் உக்ர தவம் புரியலானாள் அம்மை.

    மாங்காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்த மகேஸ்வரி மேல் கருணை கொண்ட செஞ்சடையோன் அம்மைக்கு அருள் செய்ய வரும் போது, இதே தலத்தில் தன்னை பூசித்து வந்த அசுர குருவான சுக்கிராச்சாரியாருக்கு முதலில் காட்சி தந்தார். எனவே அம்மையை அசரீரியாக காஞ்சிக்கு செல்லுமாறும் தான் அங்கு வந்து மணம் புரிந்து கொள்வதாகவும் கூறினார்.

    ஆம்ரவனத்தில் தவம் இருந்த அம்மை , தன் நாயகன் சொல் கேட்டு அவரை அடைய காஞ்சி மாநகருக்கு சென்றாள். அங்கு மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வரலானாள். பின்னர் கம்பாநதியை பெருகிவரச் செய்து தழுவக்குழைந்த நாதராகி பங்குனி உத்திர நன்னாளில் அம்மையை மணம் செய்தருளினார் சிவபெருமான். இவ்வாறு மாங்காட்டிலே தவக்கோலம் காட்டிய பண்டாசுரனை அழித்த அம்பிகை அதனால் காஞ்சியிலே மணக் கோலம் காட்டி “கல்யாண காமாட்சி “ யாக அருள் பாலிக்கின்றாள்.

    பவளம் போல் மேனியனை மணந்து கொள்ளும் ஆர்வத்தில் ஏற்பட்ட அவசரத்தால், தான் தவத்திற்காக வளர்த்த குண்டங்களை அணைக்காமல் அம்மன் மாங்காட்டில் இருந்து காஞ்சி சென்று விட்டதால் அந்த தீயின் உக்கிரம் தாங்காமல் இத்தலத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் துயர் தாங்க மாட்டாமல் தவித்தார்கள் நிலங்கள் வற்றிப் போயின.

    அவர்களின் துன்பத்தை துடைக்கும் விதமாக ஆதி சங்கரர் மாங்காட்டுக்கு வந்தார். மக்கள் அவரிடம் தங்கள் குறைகளைக் கூற அவரும் தன் ஞான திருஷ்ட்டியால் உணமையை உணர்ந்து லோகத்தின் நலம் கருதி எட்டு மூலிகைகளினால் ஆன “அஷ்ட கந்தம்” அர்த்த மேரு என்னும் ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இதனால் தீயின் உக்கிரம் மறைந்து மக்கள் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.

    இந்த ஸ்ரீ சக்ரம் ராஜ யந்திரமாகும். அதாவது ஆமை (கூர்ம) வடிவத்தை அடித்தளமாகக் அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற்புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீ சக்ரம் உண்டாக்கப்பட்டுள்ளது.

    எட்டு மூலிகைகளால் ஸ்ரீ சக்கரத்தை ஆதி சங்கரர் உருவாகியதால் இதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஜவ்வாது சந்தனம், புனுகு போன்ற இன்ன பிறவும் சாற்றப்படுகின்றது. இத்திருக்கோவிலில் ஸ்ரீ சக்கரத்திற்கே முக்கிய வழிபாடு நடத்தப்படுகிறது. குங்கும அர்ச்சனை மிகவும் விசேஷமானது. பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றன.

    தபஸ் காமாட்சி மோன நிலையில் இருப்பதால், மூலஸ்தானத்திலிருந்த தவக்கோலத்திற்கு பதிலாக, ஓர் கையில் கிளியோடும் மறு கையில் கரும்போடும் கூடிய சாந்தமே உருவான “ஆதி காமாட்சி” அம்மனை மூலஸ்தானத்தில் காஞ்சிப் பெரியவர்கள் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். கிழக்குப் பார்த்த நிலையில் அம்பாள் இருந்தால், அங்கு அம்பாளுக்குத் தனிச் சன்னதி இருக்கும் என்பது மரபு.

    அவ்வாறே இங்கும் காமாட்சி அம்மனுக்கு பிரதானமான தனி சன்னதி உள்ளது. மாமரத்து அடியில் அம்மன் தவம் செய்ததால் தல விருட்சமாக மாமரம் உள்ளது.

    ஆகஸ்டு 4-ந்தேதி 1008 கலச அபிஷேகம் :


    குழந்தை பேறு, வேலை வாய்ப்பு போன்றவற்றை தரும் அற்புதமான தலமாகவும் மாங்காடு தலம் திகழ்கிறது. திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் பகல் 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. வெள்ளி மற்றும் பவுர்ணமியில் ஊஞ்சல் சேவை நடக்கிறது.

    நவராத்திரி 9 நாட்களும் அம்மன் வெவ்வேறு விதமாக காட்சித் தருவாள். இத்தலத்தில் எல்லா மாதமும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் உள்ளது. பவுர்ணமி தோறும் 9 கலசங்களில் 9 சக்திகளை ஆவாசனம் செய்து நடத்தப்படும் நவகலச ஹோமமும், புஷ்பாஞ்சலியும் மிகவும் பிரசித்தம்.

    தை மாதம் முதல் ஆடி மாதம் வரை வெள்ளிக் கிழமைகளில் 108 கலச அபிஷேகம் நடைபெறும். ஆகஸ்டு 4-ந்தேதி ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலச அபிஷேகம் நடைபெறும். இத்தலத்தில் ஆதியில் அம்மன் புற்றில் இருந்ததாக கருதப்படுகிறது.

    இங்குள்ள நவகன்னிகை சன்னதி சிறப்பு வாய்ந்தது. அம்மன் தவம் இருந்த போது இந்த நவ கன்னிகைகள்தான் காவல் புரிந்தனர்.

    இவர்களை வழிபட்டால் உடல் உபாதைகள் நீங்கி சுகபோகம் உண்டாகும். கோவில் வட திசையில் திருக்குளம் உள்ளது. பிரச்சினைகள் தீர, 18,27,108 என்ற எண்ணிக்கையில் எலுமிச்ச மாலை சாற்றி வழிபடலாம். புரட்டாசி பவுர்ணமியன்று நடக்கும் நிறைமணி தரிசனத்தில் கலந்து கொண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    எலுமிச்சம் பழத்தில் மகிமை :

    அம்மனிடம் பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் முதல் வாரம் வரும் போது மற்ற பூஜைப் பொருட் களுடன் இரண்டு எலுமிச்சை பழம் எடுத்து செல்ல வேண்டும்.

    அர்ச்சனை முடிந்ததும் அர்ச்சகர் ஒரு எலுமிச்சை பழத்தையும் மற்ற பிரசாதங்களையும் கொடுத்து அடுத்த வாரம் வரும் போது மறக்காமல் இந்த எலுமிச்சை பழத்தையும் வேறு இரண்டு எலுமிச்சம் பழங்களையும் எடுத்து வரச் சொல்வார்.

    வீட்டுக்கு எடுத்து வந்த எலுமிச்சம் பழத்தையே தேவி காமாட்சியாக வைத்து ஆறு நாட்களும் பூஜித்து வரவேண்டும். ஆறு வாரம் சென்று அம்மனை வழிபட்ட பின் ஏழாவது வாரம் பசும்பாலைக் குங்குமப்பூ, கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி மற்ற பூஜைப் பொருட்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.

    அர்ச்சனை செய்து நிவேதனம் முடிந்து பாலைத் திருப்பித் தருவார் அர்ச்சகர். பாலில் சிறிது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வைத்துக் கொண்டு மீதியை அங்குள்ள அனைவருக்கும் பகிர்ந்தளித்து விட்டு வீட்டிற்கு வந்து விட வேண்டும்.

    நம்முடைய பிரார்த்தனை ஆறு வாரத்திற்குள்ளாக நிறைவேறி விடும். நோய் நொடிகள் அகன்று ஆரோக்கியம் ஏற்படும்.

    Next Story
    ×