search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்
    X

    சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்

    சோழ சிம்மபுரம் என்பது மருவிச் சோளிங்கபுரம் என ஆயிற்று. நாளடைவில் சோளிங்கபுரம் என்பது பேச்சுவழக்கில் மருவி சோளிங்கர் என்றாகிவிட்டது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கோவில்கள் விபரம்

    1. கீழேயுள்ள கோவில் - உற்சவர் மட்டும்.
    உற்சவர் : பக்தவச்சலப் பெருமாள், தக்கான்.
    2. பெரிய மலை மீதுள்ள கோவில் - கடிகாசலம்
    பெருமாள்    : யோக நரசிம்மர், அக்காரக்கனி
    திருநிலை    : வீற்றிருந்த திருக்கோலம்
    திருமுக மண்டலம்    : கிழக்கு நோக்கியது
    தாயார்    : அமிர்தவல்லித் தாயார்
    விமானம்    : சிம்மகோஷ்டாக்ருதி விமானம்
    தீர்த்தம்    : அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்
    3. சிறிய மலை மீதுள்ள கோவில்
    மூலவர்    : யோக ஆஞ்சநேயர்-இவர் நான்கு திருக்கரத்தோடு கையில் சங்கு சக்கரத்தோடும் நரசிம்மரை நோக்கியவாறும் எழுந்தருளியுள்ளார். இங்கு ரங்கநாதர், சீதாராம லட்சுமணர் சந்நிதிகள் உள்ளன.

    சோழ சிம்மபுரம் என்பது மருவிச் சோளிங்கபுரம் என ஆயிற்று. நாளடைவில் சோளிங்கபுரம் என்பது பேச்சுவழக்கில் மருவி சோளிங்கர் என்றாகிவிட்டது.

    தொட்டாச்சார்யார் :

    அனைத்து திருமால் ஆலயங்களிலும் காணப்படும் சடாரி இத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் இருப்பது குறிப்பிட வேண்டிய சிறப்பு. வலப்புறத்தில் ஐம்பொன்னாலான கிருஷ்ண விக்ரகத்தையும் மற்றொருபுறம் சிறிய வடிவிலான வரதராஜப் பெருமாளையும் தரிசிக்கிறோம். தொட்டாச்சார்யார் எனும் பக்தர் வருடந்தோறும் காஞ்சி வரதராஜரின் கருட சேவையை தரிசிப்பது வழக்கம்.

    வயது முதிர்ந்த நிலையில் அவரால் காஞ்சிக்குச் செல்ல முடியாதபோது பெருமாளே தக்கான்குளத்தில் அவருக்கு கருட சேவையை காட்டியருளியதாக ஐதீகம். அதை நினைவுறுத்தும் வண்ணம் இங்கு கொலுவிருக்கும் வரதராஜப் பெருமாளை அருளாளர் என்றும் பேரருளாளர் என்றும் அழைக்கின்றனர். கருவறையை வலம் வரும்போது ஆண்டாள் சந்நதியை தரிசிக்கலாம். எதிரில் ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும் அருள்கின்றனர்.

    ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான திருவிழாக்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

    தலபுராணம் :

    பக்த பிரகலாதனுக் காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். விஸ்வாமித்திரர் இத் தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு வரம் பெற்றாராம். அதே போல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டும் எனும் ஆவல் கொண்டு அவர்கள் இங்கு தவமிருந்தனர்.

    ராமாவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் ஆஞ்சநேயரிடம், “இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை’’ என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ஸ்ரீராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார்” என்கிறது ஸ்தல புராணம்.

    கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை தரிசித்துப் பூரித்த ஆஞ்ச நேயரிடம், ‘நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக!’ என அருளினார்! அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

    கார்த்திகை மாதம் மட்டும் அபிஷேக நேரம் மாறும் :

    சோளிங்கர் தலத்தில் நரசிம்மர், அமிர்த வல்லிதாயார் மற்றும் ஆஞ்சநேயருக்கு நடத்தப்படும் அபிஷேகங்கள் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த அபிஷேக ஆராதனையை நேரில் கண்டு தரிசிப்பது மிகுந்த புண்ணியத்தைத் தர வல்லது.

    நரசிம்மருக்கும், அமிர்தவல்லி தாயாருக்கும் பால், பஞ்சாமிர்தம், தயிர், இளநீர், தேன் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்றமாத வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை அபிஷேகம் நடத்துவார்கள். ஆனால் கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமைகளில் இந்த அபிஷேகம் காலை 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்படும் என்று ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சார்யார் தெரிவித்தார்.

    கார்த்திகையில் நடைதிறக்கும் நேரம் :

    கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறந்து சுப்ரபாதம் பூஜை நடைபெறும். அது முடிந்ததும் தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 7மணி வரை தர்ம தரிசனத்துக்கு அனுமதி உண்டு.

    காலை 7 மணி முதல் 9 மணி வரை அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும். காலை 10 மணி முதல் பிற்பகல் 7 மணி வரை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    அதன் பிறகு பிரார்த்தனை உற்சவம் நடைபெறும்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும் என்பதால் சனிக்கிழமை இரவு 2 மணிக்கே பெரியமலை கோவில் நடையைத்திறந்து விடுவார்கள். ஞாயிற்றுகிழமை மாலை 6.30 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம்.

    சிறிய மலையில் உள்ள ஆஞ்சநேயரை கார்த்திகை வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணி வரை தரிசிக்கலாம். சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை தரிசிக்கலாம்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    விசேஷ உற்சவங்கள் விபரம் :

    சோளிங்கர் தலத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் உற்சவ விழாக்கள் விபரம் வருமாறு:-

    1. சித்திரை மாதம்:


    1.சித்திரை பெருந்திருவிழா, பத்து நாட்கள் நடைபெறும். தங்க கருட சேவை திருத்தேர். 2.இராமானுஜர் விழா 10 நாட்கள்.

    2.வைகாசி மாதம்:

    1.நரசிம்ம ஜெயந்தி, 2.வசந்த உற்சவம், 3.வைகாசி கருட சேவை தொட்டாசார் சவை, 4.நம்மாழ்வார் விழா 10 நாட்கள்.

    3.ஆனி மாதம்

    1.கோடைத்திருநாள் (3நாட்கள்),2.பரதத்துவ நிர்ணயம் கருட சேவை,3.ஆதிகேசவப்பெருமாளுக்கு வருஷ திருநட்சத்திரமான திருவோண விழா.



    4.ஆடி மாதம்

    1.ஆண்டாள் திருவாடிப்பூர விழா 10 நாட்கள் திருவாடிப் பூரத்தன்று திருக்கல்யாண புறப்பாடு. 2.ஆடி பவுர்ணமி கஜேந்திர மோட்சம் கருடசேவை. 3.ஜேஷ்டாபிஷேகம்(கவசம் களைந்து திரு அபிஷேகம் நடந்து பின் கவசம் அணிதல்).

    5.ஆவணி மாதம்

    1.திருப்பவித்ரோற்சவம்-7நாட்கள். பெரியமலையில் நடை பெறும்.2, ஸ்ரீஜெயந்தி- மறுநாள் உரியடி கண்ணனுக்கும் பெரு மாளுக்கும் நான்கு வீதி புறப்பாடு.

    6.புரட்டாசி மாதம்

    1.நவராத்திரி உற்சவம் 10-நாட்கள் பெருமாள், தாயார் இரு வருக்கும். 2. விஜயதசமி, குதிரை வாகனம்.

    7.ஐப்பசி மாதம்

    1.டோலோற்சவம் எனும் ஊஞ்சல் திருவிழா 5 நாள் நடை பெறும். 2.மணவாள மாமுனிகள் 10 நாள் உற்சவம்.3,கடை வெள்ளிக்கிழமை. 4,தீபாவளி ஆஸ்தானம். 5,வனபோஜனம்.

    8.கார்த்திகை மாதம்

    1. பெரியமலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சிறியமலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் உற்சவ புறப்பாடு. திருமஞ்சனம் முதலிய விசேஷம். 2.கார்த்திகை தீபத் திருவிழா- சொக்கப்பனை கொளுத்துதல்.3, திருமங்கையாழ்வார் 10 நாள் உற்சவம்.4, அனுமன் ஜெயந்தி சின்னமலையில் ஸ்ரீஆஞ்ச நேயருக்கு விசேஷ உற்சவம்.

    9. மார்கழி மாதம்:

    1. பகல் பத்து திருநாள், 2. வைகுண்ட ஏகாதசி, 3. முக்கோடி துவாதசி தீர்த்தவாரி உற்சவம், 4. இராப்பத்து திருநாள். இறுதி நாளில் நம்மாழ்வார் பரமபதம் புகும் திருவடி தொழும் விழா, 5. ஆண்டாள் மார்கழி நீராட்டம் 3 நாள் நடைபெறும். 6. ஜனவரி முதல் தேதி திருப்படித் திருவிழா

    10. தை மாதம்:

    1. பொங்கல்-சங்கராந்தி ஆண்டாள் திருக்கல்யாணம், 2. கனுப்பாரி (பரி) வேட்டை, 3. கிரி பிரதசட்னம், 4. தைப்பூசம், 5. தை அமாவாசை தொடங்கி தெப்பல் உற்சவம் 3 நாள் நடைபெறும்.

    11. மாசி மாதம்:

    1. தவன உற்சவம், 3 நாள், 2. மாசி உத்திரரடத் திருநாள் 10 நாள். (சுவாமி தொட்டாசார்- அவதார உற்சவம்), 3. மாசி மகம்- தெப்பல் உற்சவம் 3 நாள்.

    12 பங்குனி மாதம்:

    1. யுகாதி (அ) தெலுங்கு வருடப்பிறப்பு உற்சவம். பஞ்சாங்க சிரவணம், 2. பெரியமலையில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணம்.

    எப்படி செல்வது?

    சோளிங்கர் தலமானது வேலூர் மாவட்டத்தில் உள்ளது. திருத்தணி-சித்தூர் நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்ல அரக்கோணத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு.

    ஆலயத்தை தொடர்பு கொள்ள...

    சோளிங்கர் நரசிம்மர் ஆலய முகவரி:-
    உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
    அருள்மிகு லட்சுமி (யோக)
    நரசிம்ம சுவாமி திருக்கோவில்,
    சோளிங்கர்-631 102. வேலூர் மாவட்டம்.
    போன் : 04172- 262225, 263515.
    Next Story
    ×