search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    இன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் அருளும் விசாக விரத வழிபாடு

    தேவர்கள் மட்டுமின்றி உலக உயிர்கள் அனைத்தும் உயர்வு பெறும் வகையில், சிவபெருமான் நடத்திய திருவிளையாடலால் முருகப்பெருமான் வந்துதித்த நாள் வைகாசி விசாகம்.
    சிவபெருமானின் வடிவமாகவே அவதரித்தவர், முருகப்பெருமான். சூரபதுமன் மற்றும் அவனது சகோதரர்களின் கொடுமை தாங்க முடியாமல் தேவர்கள் அவதிப்பட்டனர். இந்திரலோகத்தைக் கைப்பற்றிய சூரபதுமன், அங்கிருந்த தேவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தான். இந்திரன் மட்டும் தப்பித்து ஒரு மூங்கில் வனத்தில் தாமரை தண்டில் புகுந்து சிவபெருமானை நினைத்து தவம் இயற்றி வந்தான். மற்ற தேவர்களும் சிறையில் துன்பங்களை அனுபவித்தபடியே சிவபெருமானை மனமுருக வேண்டிவந்தனர்.

    இதையடுத்து அவர்களுக்கு நன்மை செய்ய நினைத்த சிவபெருமான், தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார். அவற்றை அக்னி தேவன், கங்கை நதியில் கொண்டு போய் சேர்த்தார். அங்கிருந்து அந்த ஆறு தீப்பொறிகளையும், சரவணப்பொய்கை நோக்கி நகர்த்தினார், வாயுதேவன். அப்படி சரவணப் பொய்கையில் சேர்ந்த அந்த ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. இதுவே ஆறுமுகப்பெருமான் அவதரித்த கதையாகும். முருகப்பெருமான் இப்படி அவதரித்த அந்த நன்னாள்தான் வைகாசி விசாகம் ஆகும். சிறப்பு மிக்க அந்த நாளில், உலகம் முழுவதும் இருக்கும் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்படும்.

    தேவர்கள் மட்டுமின்றி உலக உயிர்கள் அனைத்தும் உயர்வு பெறும் வகையில், சிவபெருமான் நடத்திய திருவிளையாடலால் முருகப்பெருமான் வந்துதித்த நாள் வைகாசி விசாகம். எனவே சைவ வழியில் நின்று வழிபடும் மக்கள் அனைவருக்கும் வைகாசி விசாகத் திருநாள் ஒரு புண்ணிய நாளாகவே இருக்கிறது. வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால், இந்த உலகத்தில் வாழும் மக்களுக்கு நல்ல வளமான வாழ்க்கை அமையும். பகை விலகும். பாசம் பெருகும். எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால், குலம் தழைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு ஆகும்.

    விரதம் இருப்பது எப்படி?

    அன்றைய தினம் அதிகாலையில் விநாயகப்பெருமானை வழிபட்டு, வீட்டின் பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைக்க வேண்டும். அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கு வைத்து, அதில் ஐந்து வித எண்ணெய் ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சமர்ப்பித்து, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் நைவேத்தியமாக படைத்து, கந்தசஷ்டி கவசத்தை பாட வேண்டும்.

    இந்த நன்னாளில் முருகப்பெருமானை நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் நடைபெறும் அனைத்து காரியங்களும் நன்மையானதாகவே நடைபெற இறைவன் அருள்புரிவான். பசும் பாலால் அபிஷேகம் செய்தால் ஆயுள் கூடும். பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால், பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் கைகூடும். சர்க்கரையால் அபிஷேகம் செய்தால், சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால், இனிய சந்ததிகள் பிறக்கும். எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், எம பயம் நீங்கும்.

    மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால், மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், திக்கட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும். அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், சரும நோய் அத்தனையும் தீர்ந்து போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேன் அபிஷேகம் செய்து பார்த்தால், தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

    திருமணமான தம்பதியரை, ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவார்கள். அந்த 16 வகையான செல்வங்களில் முதன்மையானதாக இருப்பது குழந்தைச் செல்வம்தான். அப்படிப்பட்ட குழந்தைச் செல்வத்தை அருள்வதில், முருகப்பெருமானுக்கு நிகர் எவரும் இல்லை. குழந்தை பாக்கியத்திற்காக இன்றும் கோவில் கோவிலாக ஏறி இறங்குபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுபோன்றவர்கள், வைகாசி விசாக நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    Next Story
    ×