என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களைக் கண்டு நம்பிக்கை கொண்டு இஸ்லாத்திற்குச் சிலர் திரும்பினார்கள்.
    மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களைக் கண்டு நம்பிக்கை கொண்டு இஸ்லாத்திற்குச் சிலர் திரும்பினார்கள்.

    ஈஸா (அலை) அவர்களை, சிலுவையில் அறைந்துவிட்டார்கள் என்று நம்பிய ஒரு கூட்டத்தினர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமல் வணத்திற்குரிய இறைவன் மூன்று என்று கூறி வந்தனர். இன்னும், ‘அல்லாஹ் தனக்கென ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்’ என்று ஒரு கூட்டத்தினர் கூறினர்.

    இப்படியான அபாண்டமான ஒரு கூற்றைக் கேட்டு இறைவன் படைத்த ஒவ்வொரு படைப்பும் பதறியது. வானங்கள் வெடித்து, பூமி பிளந்து, மலைகள் சிதறுண்டுவிடுமென்றாகியது. வழிப்பாட்டிற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். ஒரு மகனை ஏற்படுத்திக் கொள்வது என்பது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது.

    வானங்களிலும் பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம் அவனுக்கே அடிமை. அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான், அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான். இறுதி நாளில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர். எவர்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டு நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அனைவரின் நேசத்தையும் ஏற்படுத்துவான். காரியங்கள் அனைத்துக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

    ஈஸா (அலை) அவர்களிடம், அல்லாஹ் “மர்யமுடைய மகன் ஈஸாவே, ‘அல்லாஹ்வையன்றி உம்மையும் உம் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று கேட்டான். அதற்கு ஈஸா (அலை), “நீ மிகவும் தூய்மையானவன், எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்.

    என் மனதில் உள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்தில் இருப்பதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றையும் நன்கு அறிபவன். நீ எனக்குக் கட்டளையிட்டபடியே மனிதர்களுக்குப் போதித்தேன். ‘என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் கூறவில்லை.

    நான் மக்களுடன் உலகில் வாழ்ந்த காலத்தில் அவர்கள் திரித்துச் சொல்லாதபடி நான் பார்த்துக் கொண்டேன். அதன் பிறகு நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் அவர்கள் எப்படி வழிதவறினார்கள் என்பதை நீயே அறிவாய். நீயே எல்லாப் பொருட்களின் மீதும் சாட்சியாக இருக்கிறாய். நீ அவர்களை, தண்டிப்பதற்கும் மன்னிப்பதற்கும் முற்றிலும் உரிமையுள்ளவன்” என்று கூறினார்கள்.

    முகமது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தின் (சமுதாயத்தின்) சிறப்புகளை அறிந்த ஒவ்வொரு நபியும் ‘தம்மையும் முகமது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். அந்த வகையில் ஈஸா (அலை) அவர்களுக்கு மட்டும்தான் அந்த பாக்கியத்தை இறைவன் அருளினான். ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே தீரும். ஈஸா (அலை) இன்னும் மரணிக்கவில்லை, அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார்கள்.

    உலக முடிவு நாள் நெருங்கும்போது ஈஸா (அலை) ஒரு மனிதராக இவ்வுலகில் இறங்கி இறைவனின் வேதத்தை மெய்ப்பிக்க வருவார்கள். இவ்வுலகத்தில் வாழ்ந்து மரணிப்பார்கள்.

    வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் ஈஸா (அலை) மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அதே வேதமுடையவர்கள் ஈஸா (அலை) அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பர். யுக முடிவு நாளில் உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும்.

    ஈஸா நபியை இறைவன் என்று அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போரை இறுதி நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாக இறைவன் வைப்பான் என்றும், அல்லாஹ் மூவரில் ஒருவன் என்று கூறுபவர்கள் நிராகரிப்பாளர்களாகவே இறைவன் கருதுவதாகவும் திருக்குர்ஆனில் வந்துள்ளது. அல்லாஹ்வின் பக்கம் திரும்பி பாவ மன்னிப்புத் தேடுபவர்களை இறைவன் மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.

    வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனே எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையோன்.

    திருக்குர்ஆன் 4:171, 19:88-96, 5:116-120, 4:159, 3:55, 5:72-78

    - ஜெஸிலா பானு.
    உண்மையில் ஈஸா (அலை) அவர்களை அவர்கள் கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை.
    மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களைக் கண்டு நம்பிக்கைக் கொண்டவர்கள் சிலரும், நிராகரித்தோர் பலரும் இருந்தனர்.

    ஈஸா (அலை) அவர்கள் இறைவன் ஒருவனே, அவனையே வணங்குங்கள், அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று போதித்தபோது, தவறானவரின் மகன் என்றும், தன் தந்தை யாரென்று அறியாதவர் செய்யும் போதனைகளை ஏற்க முடியாதென்றும் யூதர்கள் அவதூறு கூறினர். தவ்ராத்தை சரிவரப் பின்பற்றாத பனீ இஸ்ராயிலர்களோ, இன்ஜீல் பற்றி ஈஸா (அலை) எடுத்துரைப்பதன் மூலம் அவர்கள் பின்பற்றிய தவ்ராத்தை பின்பற்றவிடாமல் தடுத்து வழிகொடுக்கிறார் என்று புரளியைக் கிளப்பினர். இத்தகைய நிராகரிப்பாளர்கள் மிகவும் கர்வம் கொண்டவர்களாக, போதனைகளைப் புறக்கணித்ததோடு, ஈஸா (அலை) அவர்களை, பொய்யர், சூனியக்காரர் என்று கேலி செய்து கொலை செய்யவும் திட்டம் தீட்டினர்.

    ஈஸா (அலை) அவர்களை ஏற்றுக் கொண்டதாகப் பொய் சொன்ன யஹூதாவை, பனீ இஸ்ராயீலர்கள் அழைத்து, அவர்களது கொலை திட்டத்தில் சேர்த்துக் கொண்டனர். ஈஸா (அலை) அவர்களின் நடவடிக்கை பற்றி பனீ இஸ்ராயீலர்களுக்குத் தகவல் கொடுத்துக் கொண்டு இருந்தார் யஹூதா.

    ஈஸா (அலை) அவர்களைச் சூழ்ந்து கொண்டு சிறைப் பிடிப்பதென்று தீர்மானித்து, யஹூதாவை முன் சென்று ஈஸா (அலை) அவர்கள் இருந்த அறையில் இருக்கிறார்களா என்று பார்க்க அனுப்பினார்கள். அந்த நொடியில் அல்லாஹ் பெருங்கருணை கொண்டு ஈஸா (அலை) அவர்களை வானத்தில் உயர்த்திக் கொண்டான். தீங்கிழைக்க நினைப்பவர்களிடமிருந்து தமது நபியை காப்பாற்றினான்.

    ஈஸா (அலை) அவர்களைக் காட்டிக் கொடுக்க வந்த யஹூதாவின் முகத்தோற்றத்தை அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களின் தோற்றத்திற்கு ஒப்பாக மாற்றிவிட்டான். அதை உணர்ந்த யஹூதா என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றபோது அந்த அறையில் நுழைந்த பனீ இஸ்ரேயிலர்கள் ஈஸா (அலை) அவர்களின் சாயலில் இருக்கும் யஹூதாவை ஈஸா (அலை) என்று நம்பி சிறைப்பிடித்தனர். அவனை இழுத்துச் சென்று இழிவுப்படுத்தினர். மேலும் அவரைச் சிலுவையில் அறைந்து கொலையும் செய்தனர்.

    உண்மையில் ஈஸா (அலை) அவர்களை அவர்கள் கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை. அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களை வானத்திற்கு உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமை மிக்கவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.

    திருக்குர்ஆன் 3:54-55, 4:156-158

    - ஜெஸிலா பானு.

    அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்.
    மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் மிகத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தான். பல அதிசயங்களை ஈஸா (அலை) அவர்களை நிகழ்த்தச் செய்தான் இறைவன். அவர்கள் நிகழ்த்திக் காட்டியபோதும் மிகச் சிலரே ஈஸா (அலை) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டனர்.

    அல்லாஹ்வின் பாதையை ஏற்று, தம்முடன் சேர்ந்து மற்றவர்களுக்குப் போதிக்கத் தமக்கு உதவுபவர்கள் யாரென்று மக்களிடம் ஈஸா (அலை) கேட்டபோது சீடர்கள் ஹவாரிய்யூன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டதாக சாட்சியளித்தனர்.

    ஈஸா (அலை) தமது சீடர்களை நோன்பிருக்கச் சொன்னார்கள். அதன்படியே சீடர்களும் முப்பது நாட்கள் நோன்பிருந்தார்கள். கடைசி நாள் முழுவதும் நோன்பிருந்து இஃப்தார் நேரம் நெருங்கும்போது அதாவது நோன்பு திறக்கும் நேரத்தை நெருங்கும்போது ஹவாரிய்யூன் சீடர்கள் ஈஸா (அலை) அவர்களிடம், “ஈஸாவே! இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவை இறக்கி வைக்க முடியுமா?” என்ற ஒரு கோரிக்கையை வைத்தனர்.

    உடனே ஈஸா (அலை) “இறைவனின் சக்தியையா சந்தேகிக்கிறீர்கள்? நீங்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இவ்வாறு சந்தேகிக்க மாட்டீர்கள்” என்று பதிலளித்தார்கள்.

    அதற்கு ஹவாரிய்யூன் “நிச்சயமாக இல்லை. நாங்கள் எங்கள் வயிறு நிறைய மட்டுமல்ல எங்கள் மனது நிறையவும் தான் அப்படியான உணவை வேண்டினோம்” என்று பதிலளித்தனர்.

    அதற்கு ஈஸா (அலை) “உங்களுக்காக நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். ஆனால் சில நிபந்தனையின் பேரில்தான் அத்தகைய சொர்க்கத்து உணவு கிடைக்கும்” என்று சொன்னார்கள்.

    “அது என்ன நிபந்தனைகளாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இந்த அதிசயத்திற்கு நாங்களே சாட்சியாக இருப்போம்” என்றும் உறுதியளித்தனர் ஹவாரிய்யூன் சீடர்கள்.

    உடனே ஈஸா (அலை) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்களுக்கு உணவை இறக்குவாயாக. நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய். அது எங்களுக்கும், எங்களில் முன் சென்றவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்” என்று வேண்டுகிறார்கள்.

    அல்லாஹ்வும் ஈஸா (அலை) அவர்களின் பிரார்த்தனையை ஏற்கிறான். “உங்களுக்கு நீங்கள் கேட்டதை இறக்கி வைக்கிறேன். ஆனால் அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், இறைநம்பிக்கையில் இருந்து விலகினால், வாக்கு மாறியவர்களுக்குத் தக்க தண்டனையை அளிப்பேன்” என்று எச்சரித்து, உணவை சொர்க்கத்திலிருந்து அனுப்பினான்.

    மீனும், அப்பமும், இதர கனி வகைகளும் வந்தன. இறைவன் அனுப்பிய உணவைக் கொண்டு நோன்பை நிறைவு செய்தார்கள்.

    அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்.

    திருக்குர்ஆன் 3:52, 5:111-115

    - ஜெஸிலா பானு.
    அல்லாஹ் பல்வேறு காலகட்டங்களில் அந்தந்த காலத்தின் சமுதாயத்தினருக்கேற்ப அவனது தூதர்களை அனுப்பினான்.
    அல்லாஹ் பல்வேறு காலகட்டங்களில் அந்தந்த காலத்தின் சமுதாயத்தினருக்கேற்ப அவனது தூதர்களை அனுப்பினான். அத்தூதர்களில் சிலரை, சிலரைவிட மேன்மையாக்கி இருக்கின்றான். இறைத்தூதர் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான், சிலருக்கு உயர்ந்த பதவிகளை வழங்கி உயர்த்தி இருக்கின்றான். மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களுக்கு மிகத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தான். ‘ரூஹுல் குதுஸி’ எனும் பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு பல அதிசயங்களை மக்கள் முன் நிகழ்த்த செய்தான்.

    ஆனால் பனி இஸ்ராயீலர்களில் ஒரு பிரிவினர் ஈஸா (அலை) செய்வதெல்லாம் சூனியமும் மாய மந்திரமும்தான் என்று கூறி நிராகரித்தனர். அவர்களை இறைத்தூதராக ஏற்கவில்லை. இருப்பினும் ஈஸா (அலை) நம்பிக்கை இழக்காமல் இறைக் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துக்கூறிக் கொண்டே இருந்தார்கள்.

    மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அல்லாஹ்வின் வார்த்தைகளான ‘தவ்ராத்தை’ மிக நுணுக்கமாக ஈஸா (அலை) மக்களுக்கு விளக்கியதோடு, தனக்கு வழங்கப்பட்டிருந்த இன்ஜீல் வேதம், அதனை மெய்ப்படுத்துகிறது என்பதையும் விவரித்தார்கள்.

    ஈஸா (அலை) அவர்களை நம்பிய ஒரு பிரிவினரின் இதயங்களில் இறைவன் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினான். ஆனால் அவர்கள் இறைக்கட்டளையில்லாமல் அவர்களாக துறவித்தனத்தை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகப் புதிதாகத் தாமாகவே உண்டாக்கிக் கொண்டார்களே தவிர அல்லாஹ் அவர்கள் மீது அதனை விதியாக்கவில்லை.

    துறவித்தனத்தை அவர்கள் சரிவரப் பேணவில்லையென்றும், அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர் என்றும் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அல்லாஹ்வையும் அவனது தூதர் ஈஸா (அலை) அவர்களையும் நம்பியவர்களையும்கூட நிராகரிப்பாளர்கள் வழிகெடுத்தனர். வட்டி வாங்குவதை இறைவன் விரும்புவதில்லை, அதை அல்லாஹ் தடை செய்துள்ளான் என்று ஈஸா (அலை) எடுத்துரைத்தும் இறை நிராகரிப்பாளர்கள் வட்டி வாங்கி அப்பாவி மக்களின் சொத்துக்களை விழுங்கிக் கொண்டிருந்தனர்.

    ஈஸா (அலை), மக்களிடம் தொழுகையை நிலைநாட்ட வலியுறுத்தியும், ஸகாத் என்ற தர்மத்தைச் செய்ய வேண்டுமென்று போதித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தங்களின் சொத்துகளை அழிக்கச் சொல்லப்படும் திட்டமாக அப்போதனைகளைக் கருதி, நம்பிக்கை கொண்ட அநேகரையும் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் தடுத்தனர்.

    ஈஸா (அலை) தன் மக்களிடம் “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னால் வந்த நபி மூஸா (அலை) அவர்கள் கொண்டு வந்த வேதம் ‘தவ்ராத்தை’ மெய்ப்பிப்பவனாகவும், எனக்குப் பின்னர் வரவிருக்கும் ‘அஹமது’ என்னும் பெயருடைய தூதர் வரவிருக்கும் நற்செய்தியைக் கூறவும் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் ஒரே இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்கக் கூடாது. வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை” என்று வலியுறுத்தினார்கள்.

    அல்லாஹ் நாடியிருந்தால், ஈஸா (அலை) பனீ இஸ்ராயீலர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்த பின்னர் அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர். அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களும் இருந்தனர், நிராகரிப்போரும் இருந்தனர்.

    அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான். நன்மை செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகின்றான்.

    திருக்குர்ஆன் 2:253, 4:160-161, 5:46, 57:27, 61:6, 9:31

    - ஜெஸிலா பானு.
    நமது வாழ்க்கையே ஓர்அமானிதம் தான் என்றால் அது மிகையல்ல. இதுகுறித்து திருக்குர்ஆன் (23:8) இவ்வாறு கூறுகிறது:
    ‘அமானத்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘அமானிதம்’ என்று பொருள். இன்று மனிதர்களிடையே காணப்படும் பெரும் பிரச்சினையே இந்த அமானிதப்பண்பு தான். ஒருவர் நம்மை நம்பிக்கொடுத்ததை திரும்ப அப்படியே ஒப்படைப்பது ‘அமானிதம்’ என்று சொல்லப்படும்.

    நபிகள் நாயகம் சொன்னார்கள்: ‘எவரிடம் அமானிதப்பண்பு இல்லையோ அவரிடம் ஈமான் எனும் இறை விசுவாசப்பண்பும் இல்லை’.

    இஸ்லாமை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் ‘ஈமான்’ எனும் இறை விசுவாசம் மிக மிக அவசியமான ஒன்று. அதை இழந்து ஒருவரால் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும்?. அப்படித்தான் அந்த அமானிதத்தையும் நம்மால் நிச்சயம் இழந்து நிற்க முடியாது என்பதை உளப்பூர்வமாக உணர்த்தவே ஒப்பிட்டுக்கூறியுள்ளார்கள் நபிகளார்.

    அமானிதம் என்பது ஒருவரின் பொருளை பாதுகாப்பதில் மட்டும் இல்லை. ஒருவரது சொல், செயல், பாவனை, பழக்க வழக்கம் என அனைத்திலும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் அமானிதம் என்பது.

    ‘ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதங்களிலும் மோசடி செய்யாதீர்கள்’ என்கிறது திருக்குர்ஆன் (8:27).

    அமானிதத்திற்கு எதிர்ச்சொல் ‘மோசடி’ என்பதை இந்த வசனம் தெள்ளத்தெளிவாய் தெரிவிக்கிறது. அமானிதம் என்பது எவ்வகையிலும் தவறவிடாமல், தவறிவிடாமல் கட்டாயம் கடைப்பிடித்து நிறைவேற்ற வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.

    நபி வரலாற்றில் ஒரு செய்தி: ஒருமுறை நபித்தோழர் ஒருவர் ‘நாயகமே! மறுமைநாள் எப்போது ஏற்படும்?’ என்று கேட்டார்.

    ‘அமானிதம் வீணடிக்கப்பட்டால் அப்போது மறுமைநாளை எதிர் பார்’.

    ‘வீணடித்தல் என்றால் அது எவ்வாறு?’ மறுபடியும் வினவினார்.

    ‘அமானிதத்தை வீணடிப்பதே அது’ என விளக்கம் அளித்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    இன்றைய நமது வியாபாரங்கள் எப்படி உள்ளன?. கலப்படம், ஏமாற்றல், பதுக்கல், விலையேற்றம், மோசடி என எண்ணற்ற வணிகக்குற்றங்களை பல இடங்களில் காணமுடிகிறது. அவற்றை நாம் தான் அல்லாஹ்வை அஞ்சி அடியோடு களைய முற்படவேண்டும். ஏனெனில் வணிகமும் ஓர் அமானிதம் தான் என்பதை ஏனோ நம்மில் பலர் மறந்துவிடுகின்றனர்.

    நபிகளார் வணிகர்களுக்கு இவ்வாறு நல்வழி காட்டியுள்ளார்கள்:

    ‘உண்மையுரைத்து, அமானிதத்துடன் நடந்துகொள்ளும் நல்லதொரு வியாபாரி மறுமையில் நபிமார்கள், நல்லோர்கள், தியாகிகள் இவர்களுடன் சேர்ந்திருப்பார்கள்’.

    திருக்குர்ஆன் வசனம் (4:58) இப்படி எச்சரிக்கிறது:

    ‘நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும், உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்’.

    நபியவர்களுக்கு மக்கா நகரில் வாழ முடியாத நிலை ஏற்பட்ட போது, மதீனா நகருக்குச்செல்ல திட்டமிட்டார்கள். இரவோடு இரவாக நபிகளார் புறப்படத் தயாரானபோது, தம்மிடம் யூதர்கள் கொடுத்துவைத்திருந்த பொருட்கள் எவை?, அவை யாருக்குரியது? என்ற விவரங்களை தன்னுடன் இருந்த ஹசரத் அலி (ரலி) அவர்களிடம் தெளிவுபடுத்திச்சொல்லி விட்டுத்தான் சென்றார்கள்.

    இன்றைக்கு நமது நிலை எப்படியிருக்கிறது..? நீதி, நேர்மை, நியாயம் என்பதெல்லாம் பிறகுபார்த்துக் கொள்ளலாம் என்று தைரியம் கொள்வது, இறையச்சமின்மையின் வெளிப்பாடுதானே தவிர வேறு ஒன்றுமில்லை. ‘தக்வா’ எனும் ‘இறை அச்சம்’, இறை பயம் இல்லாதவரை எந்தவொரு செயல்பாடுகளும் நமக்கு மதிப்பற்ற,பொறுப்பற்ற ஒன்றுதான்.

    அமானிதத்தைப் பேணுவது என்பது அடுத்தவர்கள் கொடுத்து வைத்த பொருட்களில் மட்டும் இல்லை; நமது அன்றாட சொற்களிலும்கூட உண்டு.

    ‘உங்களிடம் ஒருவர் பேசிவிட்டுச் செல்கிறபோது இருவருக்கும் இடையிலான அந்தப்பேச்சும் ஓர் அமானிதமே’ என்றார்கள் அண்ணல் நபியவர்கள்.

    இந்த நபிமொழி நமக்கொரு பேருண்மையைச் சொல்கிறது. அதாவது, இருவருக்கு இடையிலான பேச்சுக்கள் அவரவர் அனுமதியின்றி மூன்றாம் நபரிடம் நகரும் போதுதான் பெரும் பிரச்சினைகள் வெடித்துக் கிளம்புகின்றன.

    அதுபோல, கணவன்-மனைவி இருவருக்கும் இடையிலான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது இறைவனிடம் மிகுந்த கோபத்திற்குரியது என்று அண்ணலார் சொல்லியது கவனிக்கத்தக்கது. எனவே, எப்போதும் நாம் நமது பேச்சுவார்த்தைகளில் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.

    நயவஞ்சகனின் முதல் மூன்று தீய அடையாளங்களில் ஒன்று, ‘நம்பிக்கை வைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்’ என்பதாகும். இன்றைக்கு நம்மிடையே இத்தகைய நயவஞ்சக முகமூடியர்கள் தானே உலவி வருகின்றனர். எனவே நாம் எங்கேயும் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

    சொல்லப்போனால், நமது வாழ்க்கையே ஓர்அமானிதம் தான் என்றால் அது மிகையல்ல. இதுகுறித்து திருக்குர்ஆன் (23:8) இவ்வாறு கூறுகிறது:

    ‘ஓரிறை நம்பிக்கையாளர்கள் திட்டமாக வெற்றியடைந்து விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தம் அமானிதங்களையும், தம் வாக்குறுதிகளையும் பேணுகிறவர்கள்.

    இன்றைக்கு வெற்றியைத் தேடித்தானே மனிதன் ஓடோடிக் கொண்டிருக்கின்றான்; அவன் தேடும் அந்த அற்புத வெற்றி வேறெங்கும் வெளியுலகில் இல்லை. எல்லாம் அவனுக்குள்ளேயே தான் இருக் கிறது.

    அதுவும் அன்றாடம் அவன் அனுசரிக்க வேண்டிய அமானித பண்பாட்டு விழுமியங்களுக்குள் தான் மறைந்திருக்கிறது.

    வாருங்கள்... அமானிதங்களைப் பேணுவோம்!

    மாமனிதங்களைப் போற்றுவோம்!

    மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.
    அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். அவனையே வணங்குங்கள் என்று ஈஸா (அலை) மக்களுக்குப் போதித்தார்கள்.
    பனீ இஸ்ராயீலர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைத்தூதராக வந்த ஈஸா (அலை) பல அத்தாட்சிகளை மக்களிடையே காட்டினார்கள். ஒரு பறவையின் உருவத்தைக் களிமண்ணால் உண்டாக்கி அதில் ஊதினார்கள், அது அல்லாஹ்வின் அனுமதியைப் பெற்று உயிருடைய பறவையானது.

    “எனக்கு முன்பு வந்த ‘தவ்ராத்தை’ மெய்ப்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், இத்தகைய அத்தாட்சிகளை உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்காக நான் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவனுடைய தூதராகிய என்னைப் பின் பற்றுங்கள். அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். அவனையே வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும்” என்று ஈஸா (அலை) மக்களுக்குப் போதித்தார்கள்.

    ஈஸா (அலை) “அல்லாஹ்வின் பாதையை ஏற்று, மற்றவர்களுக்கும் போதிக்க எனக்கு யாராவது உதவி செய்வீர்களா?” என்று கேட்டார்கள்.

    அதற்கு அவருடைய சிஷ்யர்களான ஹவாரிய்யூன் “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட நாங்கள், அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட முஸ்லிம்களாக, அல்லாஹ்வுக்காக உங்கள் உதவியாளர்களாக இருக்கிறோம். அல்லாஹ் அருளிய வேதத்தை நாங்கள் நம்புகிறோம். அல்லாஹ்வின் தூதரான தங்களையும் பின்பற்றுவோம்” என்று திடமாகக் கூறினர்.

    நபி மூஸா (அலை) அவர்களின் காலத்தில் எப்படி சூனியக்காரர்கள் நிறைந்திருந்து, மக்கள் திசை மாறியதை மூஸா (அலை) அல்லாஹ்வின் அருளைக் கொண்டு முறியடித்தார்களோ, அதுபோல மருத்துவர்கள் நிறைந்திருந்து, குணமாக்க முடியாத நோய்களை ஈஸா (அலை) அல்லாஹ்வின் அனுமதி பெற்று குணப்படுத்திக் காட்டினார்கள். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் சுகமாக்கினார்கள், சக்தி படைத்த அல்லாஹ்வின் அருளைப் பெற்று இறந்தோரையும் ஈஸா (அலை) உயிர்ப்பித்தார்கள்.

    மக்களுக்குப் பல தெளிவான அத்தாட்சிகள் காட்டப்பட்டபோதும் ஒரு சாரார் ஈஸா (அலை) அவர்களை நிராகரித்து “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறினர்.

    பனீ இஸ்ராயீலர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இறைத்தூதர்கள் கொண்டு வந்த அத்தாட்சிகளை அனுபவித்தார்களே தவிர, அதனை அவர்களின் மனம் விரும்பவில்லை. அவர்கள் கர்வம் கொண்டு புறக்கணித்தார்கள்.

    நிராகரித்தோர் ஈஸா (அலை) அவர்களைக் கொல்லத் திட்டமிட்டு சதி செய்தார்கள். அல்லாஹ்வும் அவ்வாறே செய்தான். அல்லாஹ் சதிகாரர்களுக்கெதிராக சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.

    திருக்குர்ஆன் 3:47-54, 5:110-111

    - ஜெஸிலா பானு.
    அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’ எனக் கூறுகிறான், உடனே அது ஆகிவிடுகிறது.
    தாய்- தந்தை இருவருமில்லாமல் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான். ஆதம் (அலை) அவர்களின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா (ஏவாள்) (அலை) அவர்களை இறைவன் படைத்தான். தந்தை இல்லாமலே மர்யம் (அலை) அவர்களுக்கு ஈஸா (அலை) அவர்களைப் பிறக்கச் செய்தான். அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’ எனக் கூறுகிறான், உடனே அது ஆகிவிடுகிறது.

    அப்படிப் படைக்கப்பட்ட ஈஸா (அலை), தன் தாயைப் பற்றி அவதூறு பேசியவர்களின் வாயை மூட, குழந்தையாக இருக்கும்போதே சாட்சியாகப் பேசினார்கள். தாம் ஓர் இறைத்தூதர் என்று பேசியவுடன் மக்களால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பலர் அக்குழந்தை பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் குழப்பத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் அந்நாட்டு மன்னன் ஒரு கனவு கண்டதால் பனீ இஸ்ராயீலர்களின் மதகுருக்களை அழைத்து அந்தக் கனவின் பலனை பற்றிக் கேட்டபோது அல்லது வானத்தில் தோன்றிய ஒரு புதிய நட்சத்திரத்தைக் கண்டு அதனைப் பற்றிய பலனை அவர்கள் பார்த்தபோது ‘நல்வழிகாட்டுவதற்காக ஓர் இறைத்தூதர் பெத்லஹெமில் பிறந்துவிட்டார்’ என்று மதகுருக்கள் சொன்னார்கள். அதைக் கேட்ட அந்நாட்டு மன்னன் ஆத்திரமடைந்து, அக்குழந்தையால் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று அஞ்சி, அக்குழந்தையை உடனே கொல்ல உத்தரவிட்டான்.

    மர்யம் (அலை) அவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி எகிப்துக்குச் சென்றார்கள். சிறு வயதிலேயே சின்னச் சின்ன அற்புதங்களை ஈஸா (அலை) அவர்கள் செய்வதைப் பார்த்த மக்கள், கவன ஈர்ப்பு பெற்றார்கள். சிலர் அதனை அற்புதமென்று வியந்தனர். சிலர் அதனைச் சூனியமென்று விலகினர்.

    இறைவன் மர்யம் (அலை) அவர்களுக்கு வாக்களித்தபடி ஈஸா (அலை) அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் அளித்தான். ‘தவ்ராத்’ வேதத்தைக் கற்று வைத்திருந்த ஈஸா (அலை) அவர்கள், வாலிப வயதை அடைந்தபோது அல்லாஹ் ‘இன்ஜீல்’ என்ற வேதத்தை அளித்து நபியாக்கினான். அதுமட்டுமின்றி ஈஸா (அலை) அவர்களுக்கு ‘ரூஹுல் குதுஸி’ என்னும் பரிசுத்த ஆத்மாவைக் கொடுத்து வலிமையாக்கி இருந்தான்.

    தமது சொந்த ஊருக்கே மர்யம் (அலை) அவர்களும் ஈஸா (அலை) அவர்களும் திரும்பினர். மர்யம் (அலை) அவர்களின் மீதான மாபெரும் அவதூறு காலம் சென்ற பிறகும் நிலவி வந்தது.  மர்யம் (அலை) அவர்களின் மீது  காலம் சென்ற பிறகும்  அவதூறு பேசியவர்களும் நிராகரிப்பாளர்களும் சபிக்கப்பட்டவர்களானார்கள்.

    திருக்குர்ஆன் 3:59, 19:30-38, 3:47-48, 2:87, 4:156

    - ஜெஸிலா பானு.
    ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நேற்று அதிகாலை வரை நடந்தது.
    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது, முஸ்லிம்களின் புண்ணியதலமான ஏர்வாடி தர்கா. இங்கு புகழ்வாய்ந்த சந்தனக்கூடு திருவிழா நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. விழாவையொட்டி முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர் கொண்டு வந்த தண்ணீரால் தர்கா முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. சந்தனக்கூட்டின் அடித்தளத்தை ஆசாரி சமூகத்தினர் செய்து கொடுத்தனர். அடிக்கூடு, நடுக்கூடு, மேல்கூடு ஆகியவற்றை யாதவர்களும், ஆதிதிராவிடர்களும் அலங்கரித்தனர்.

    அதைத்தொடர்ந்து தீப்பந்தங்களுக்காக சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்த துணிகளில் ஆதிதிராவிடர்கள் வழங்கிய நேர்ச்சை எண்ணெய் ஊற்றி சந்தனக் கூடுக்கு வழிகாட்டியாக தீப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு அழகுபடுத்தப்பட்ட சந்தனக்கூடு நேற்று முன்தினம் இரவு ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் குடியிருக்கும் தைக்கா பகுதியில் இருந்து யானை, குதிரைகளில் இளம்பச்சை கொடிகள் ஏந்தி வர தர்காவை நோக்கி புறப்பட்டது.

    ஊர்வலத்தில் மேளதாளம் முழங்க அனைத்து மத பக்தர்களின் ஆட்டம், பாட்டத்துடன் சந்தனக்கூடு வந்தது. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த சந்தனக்கூடு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து தர்காவை வந்தடைந்தது. தொடர்ந்து வெள்ளிப்பேழையில் வைத்து எடுத்து வரப்பட்ட புனித சந்தனம் மகானின் சமாதியில் பூசப்பட்டது.
    ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் 842-வது தேசிய ஒருமைப்பாட்டு சந்தனக்கூடு ஊர்வலம் இன்று அதிகாலை நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகிலும் சந்தனக் கூடுவுக்கு மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவில் கடந்த மாதம் ஆகஸ்டு 4-ந்தேதி மவுலுது (புகழ் மாலை) ஓதப்பட்டு சந்தனக் கூடு விழா துவங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு யானை மற்றும் குதிரை ஊர்வலத்துடன் சென்று தர்காவில் போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து சந்தனம் கரைக்கும் நிகழ்ச்சி நல்ல இபுறாகிம் மஹாலில் நடந்தது.

    ஏர்வாடி சந்தனக்கூடு உருவாக்குவதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்பதால் ஆண்டுதோறும் மதநல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர். யாதவர் மற்றும் முத்தரையர் சமூகத்தினர் சந்தனக் கூட்டை இழுத்து வந்தனர். ஊர்வலத்தில் ஆதி திராவிட சமூகத்தினர் புத்தாடை அணிந்து, தீப்பந்தங்களை பிடித்தும், பிறைக் கொடி ஏந்தி, பெண்கள் வழி நெடுகிலும் குலவையிட்டு வந்தனர்.

    காலை ஐந்து மணிக்கு மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்கா வளாகத்தை வந்தடைந்தது. தர்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.

    தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி, போர்வையை போர்த்தினர். அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.

    வரும் செப்.3-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. நேற்று இரவு மாவட்ட கலெக்டர் நடராஜன் தர்காவிற்கு வந்து பாதுஷா நாயகம் அடக்கஸ்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். விழா ஏற்பாடுகளை கோர்ட் கமிசனர் செய்தார்.

    அல்லாஹ்தான் படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன். அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன.
    மர்யம் (அலை) அவர்கள் ஈஸாவை கருக்கொண்டார்கள். அதன் காரணமாக அவர் உடலில் மாறுதலை உணர்ந்தார்கள். கர்ப்பிணிக்குரிய அடையாளங்கள் தென்பட ஆரம்பித்ததும், அவர்கள் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள வேறிடத்திற்குச் சென்று தங்கிவிடுகிறார்கள்.

    பின்பு அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்ட பிரசவ வேதனை மர்யம் (அலை) அவர்களை ஒரு பேரீச்சை மரத்தின் கீழ் கொண்டு வந்தது.

    சுற்றார் மதிக்கும்படியான நல்ல குடும்பத்தில் பயபக்தியுடையவராக இருந்த தமக்குக் கணவரில்லாமல் குழந்தை பிறக்க இருப்பதை எண்ணி கலங்கினார்கள். ‘நானும், என் குழந்தையும் என்னவெல்லாம் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியான கேள்விகளை எதிர்கொள்வதற்கு முன் நான் இறந்து, முற்றிலும் மக்களால் மறக்கப்பட்டவளாகிவிடக் கூடாதா?’ என்று பிரசவ வேதனையில் தமக்குத் தாமே அரற்றிக் கொண்டிருந்தார்கள்.

    வலி தாங்க இயலாமல் அரற்றி பேரீச்சை மரக்கிளையைப் பிடித்துக் கொண்டார்கள். குழந்தை பிறந்தது.

    அப்போது அவருக்கு கீழிருந்து ஒரு குரல் கேட்டது “மர்யமே! கவலைப்படாதீர்கள். உங்கள் கவலைகளை இறைவன் தீர்த்து வைப்பான். உங்களுக்குக் கீழேயே ஒரு சின்ன ஆற்றை உங்களுக்காக இறைவன் உண்டாக்கியிருக்கின்றான். இந்தப் பேரீச்சை மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்குங்கள். அது கொய்வதற்குப் பக்குவமான பழங்களை உங்கள் மீது உதிர்க்கும். அவற்றை உண்டு, ஆற்று நீரைப் பருகி, கண் குளிர்ந்து இருங்கள். பின்னர், யாரேனும் உங்களிடம் ஏதாவது கேள்வி் கேட்டால், பேசினால், அல்லாஹ்வுக்காக நீங்கள் நோன்பிருப்பதாக நேர்ந்திருப்பதால் அன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன் என்று சொல்லிவிடுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டது.

    பெற்றெடுத்த குழந்தையுடன் தம் ஊருக்கே தம் சமூகத்தாரிடம் திரும்பினார்கள் மர்யம் (அலை).

    அல்லாஹ்தான் படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன். அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே துதி (தஸ்பீஹு) செய்கின்றன. அவனே யாவற்றையும் மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.

    திருக்குர்ஆன் 19:23-27, 59:24

    - ஜெஸிலா பானு.
    அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’ எனக் கூறுகிறான், உடனே அது ஆகிவிடுகிறது.
    இம்ரான், இப்ராஹிம் (அலை), தாவூத் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்தவர். இம்ரான்- ஹன்னா தம்பதியருக்கு பிறந்த மர்யமை, பைத்துல் முகத்தஸில் தங்கி, சேவை செய்ய அர்ப்பணிக்க வேண்டுமென்று ஹன்னா நேர்ச்சை செய்திருந்தார்.

    ஹன்னா கருவுற்றிருந்தபோதே கணவர் இம்ரான் இறந்து விட்டார். நேர்ச்சை செய்திருந்தபடி தாய் ஹன்னா மகள் மர்யமை தனது சகோதரியின் கணவர் ஜக்கரிய்யா (அலை) அவர்களிடம் ஒப்படைத்தார். இறைவனின் விருப்பப்படி ஜக்கரிய்யா (அலை) மர்யமை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

    இறைவனிடமிருந்து கனி வகைகளும் உணவும் வரும் அளவுக்கு இறைவனின் அருளைப் பெற்றிருந்தார் மர்யம் (அலை).

    ஒருநாள் மர்யம் கிழக்கு பக்கமுள்ள இடத்தில் தம் குடும்பத்தினர் இல்லாது தம்மை மற்றவர்கள் பார்க்காத வண்ணம் ஒரு திரையை அமைத்து தன்னை மறைத்து இருந்தபோது மர்யமிடத்தில் ஜிப்ரீல் (அலை) மனித உருவில் தோன்றினார். ஜிப்ரீல் (அலை) என்பது இறைவனால் அனுப்பப்பட்ட மலக்கு. அவரைக் கண்டதும் மர்யம் (அலை) பயந்தவராக, “நாம் உம்மைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீர் பயபக்தியுடையவராக இருந்தால் என்னை நெருங்காதீர்” என்று எச்சரிக்கைவிடுக்கும் விதமாகக் கூறினார்.

    அதற்கு மலக்கான ஜிப்ரீல் (அலை) “மர்யமே! நான் உம்முடைய இறைவனின் தூதன். உங்களுக்கு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்துள்ளோம். உங்களுக்கு ஒரு பரிசுத்தமான மகனை அல்லாஹ் உங்களுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளான், உங்களுக்கு ஒரு மகன் பிறக்கப்போகிறான். உலகத்திலுள்ள பெண்களையெல்லாம்விட நீங்கள் மேன்மையானவராக அல்லாஹ் உங்களையே தேர்ந்தெடுத்துள்ளான்.

    உங்களைத் தூய்மையாகவும் ஆக்கியுள்ளான். அந்தக் குழந்தையின் பெயர் மஸீஹ், அதாவது மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கவராகவும் இறைவனுக்கு நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். அவர் ஒரு நபியாக நல்லொழுக்கமுடைய சான்றோர்களில் ஒருவராக இருப்பார். அதுமட்டுமின்றி அவர் குழந்தையாகத் தொட்டிலில் இருக்கும்போதும், பால்யம் தாண்டி முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்” என்று விளக்கினார்.

    அதற்கு மர்யம் “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகாமலும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்? என்று கேட்டார்.

    அதற்கு ஜிப்ரீல் (அலை), “அல்லாஹ்வுக்கு இது மிகவும் சுலபமானதே. அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’ எனக் கூறுகிறான், உடனே அது ஆகிவிடுகிறது. தாய்- தந்தை இருவருமில்லாமல் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைக்கவில்லையா? அதுபோல் தந்தை இல்லாமல் குழந்தை ஈஸா பிறப்பார்” என்று விளக்கினார்.

    மர்யமிற்குத் தேவையான அத்தனையும் மஸ்ஜித்-அல்-அக்ஸாவில் அதாவது பைத்துல் முகத்தஸ் பள்ளியில் கிடைக்கச் செய்தான் இறைவன். மர்யம் எல்லா நேரங்களிலும் இறைவனுக்கு 'ஸுஜுது' அதாவது தம் சிரம் தரையில் படும் வகையில் தாழ்த்தி வணங்கிக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தி ருகூஃ செய்து கொண்டும் இருந்தார்கள்.

    மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்.

    திருக்குர்ஆன் 3:42-47, 3:59, 19:16-22

    - ஜெஸிலா பானு.
    ‘யஹ்யா’ என்றால் வாழ்பவர் என்று பொருள். யஹ்யா (அலை) இறைவழியில் கொல்லப்பட்டிருந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்தார்கள். அவருடைய உபதேசங்களை மதிக்காதவர்கள் மடிந்து அழிந்தனர்.
    நபி ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு மகன் பிறக்கிறான். இறைவனின் கட்டளையின் படி அந்தக் குழந்தைக்கு யஹ்யா என்று பெயர் வைத்தார்கள்.

    யஹ்யாவை நல்லமுறையில் வளர்க்கிறார் ஜக்கரிய்யா (அலை). மக்களுக்குப் போதனை செய்வதையும் நல்லுபதேசம் செய்வதையும் யஹ்யா (அலை) பார்த்தே வளர்ந்தார்கள். மர்யம் (அலை) அவர்களின் நற்செயல்களையும், அவர்கள் பள்ளியில் தங்கியிருந்து ஆற்றும் பணிகளையும் பார்த்து வளரும் யஹ்யா (அலை) அவர்கள் மற்ற குழந்தைகளைப் போல் விளையாடுவது, மிருகங்களைச் சீண்டுவது என்றில்லாமல் ஆழ்ந்து 'தவ்ராத்' வேதத்தைப் படித்துக் கற்றார்கள்.

    மிகவும் இரக்க சிந்தனை கொண்ட யஹ்யா (அலை) தம் உணவை பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் தந்துவிட்டு இலை தழைகளைச் சாப்பிட்டு வாழ்ந்தார்கள். வாலிப வயதில் இயல்பாகப் பெண்கள் மீதிருக்கும் ஈர்ப்பைத் தவிர்த்து பரிசுத்த தன்மையை அடைந்தார்கள். தம்மைக் காத்துக் கொள்ள மிகவும் பயபக்தியுடையவராக இறைச்சிந்தனை மட்டும் உள்ளவராகத் திகழ்ந்தார்கள். கண்ணியமானவராக அவரது பெற்றோருக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார்கள். அவர் பெருமை அடிப்பவராகவோ, அல்லாஹ்வுக்கு மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.

    அல்லாஹ்வின் அருளின்படி யஹ்யா (அலை) அவர்களும் நபித்துவத்தைப் பெற்றார். தந்தை மகன் இருவரும் நபியாக எந்நேரமும் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராகவும், மக்களுக்கு நல்லுபதேசம் செய்பவராகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். காலையிலும் மாலையிலும் தொழுது அல்லாஹ்வை ஆசையோடு வணங்கி, உள்ளச்சம் கொண்டவர்களாக பாவ மன்னிப்பு கோரி அழுபவராக இருந்ததோடு, பனீ இஸ்ராயீலர்களை நல்வழிப்படுத்த முற்பட்டார்கள்.

    இறைவழியில் கொல்லப்பட்டார் ஜக்கரிய்யா (அலை). ஆனாலும் யஹ்யா (அலை) அவருடைய உபதேசங்களை நிறுத்தவில்லை. ஏக இறைவனை மட்டும் வணங்கும்படியும் அவனுக்கு இணை வைக்காமல் இருப்பது குறித்தும் போதித்தார். “இறைவன் எல்லாவித பாவங்களையும் மன்னித்தாலும் மன்னிப்பான் ஆனால் இணை வைத்தலை மன்னிக்கவே மாட்டான்” என்று சொன்னதோடு தொழுகை, நோன்பு, தர்மம் பற்றியெல்லாம் போதித்து அல்லாஹ்வை எந்நேரமும் நினைக்கும்படியும், புகழும்படியும், நன்றி செலுத்தும்படியும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

    அவர் வாழ்ந்த இடத்தின் மன்னர், அவருடைய சகோதரனின் மகளை விரும்பி மண முடிக்க இருந்தார். ஆனால் தவ்ராத்தின்படி, இறைவனின் கட்டளையின்படி தமது சகோதரனின் மகளைத் திருமணம் செய்து கொள்வது தவறான உறவுமுறையென்று யஹ்யா (அலை) செய்த பிரச்சாரம் மன்னரையும் அவர் மணம் முடிக்க விரும்பிய பெண்ணையும் எட்டியது. அப்பெண் தன்னுடைய இச்சைக்கு மன்னரை உற்படுத்தி யஹ்யா (அலை) அவர்களின் தலையை வேண்டுகிறாள். மன்னரும் தான் அடையவேண்டிய பெண்ணின் வாக்குக்கிணங்க யஹ்யா (அலை) அவர்களின் தலையை வெட்டி பாவத்தில் மூழ்கிவிடுகின்றனர்.

    ‘யஹ்யா’ என்றால் வாழ்பவர் என்று பொருள். யஹ்யா (அலை) இறைவழியில் கொல்லப்பட்டிருந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்தார்கள். அவருடைய உபதேசங்களை மதிக்காதவர்கள் மடிந்து அழிந்தனர்.

    அவர் பிறந்த நாளிலும், அவர் இறந்த நாளிலும், மறுமையில் அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும்.

    “எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் மனிதர்களிடத்தில் நியாயமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. அவர்கள் புரிந்த செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் பயனற்றவையாக அழிந்துவிடும். அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமில்லை”

    திருக்குர்ஆன் 21:90, 19:7-15, 3:21-22

    - ஜெஸிலா பானு.
    ×