என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    புனிதமிகு ரமலானில் நாம் நற்காரியகங்களில் ஈடுபடுவதை போலவே நம்மைச்சுற்றி நடைபெறும் தீயகாரியங்களையும் கட்டாயம் தடுக்க முயற்சிக்க வேண்டும்.
    நற்காரியங்கள் தூண்டப்படுவதை போல் தீயகாரியங்கள் தடுக்கப்படவும் வேண்டும். தீமைகள் தடுக்கப்படாமல் நன்மைகளுக்கு அர்த்தமில்லை. நாமும் தீமைகளிலிருந்து விலக வேண்டும். நம் சகோதர்களை விலக்கவும் வேண்டும். இது பற்றி இறைமறை கூறுவதைப்பாருங்கள்:

    (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதை கொண்டு (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றவர்கள். (திருக்குர்ஆன் 3:104)

    எவரேனும் யாதொரு நன்மையானவற்றுக்கு சிபாரிசு செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்குண்டு. (அவ்வாறே) யாதொரு தீய விஷயத்திற்கு யாரும் சிபாரிசு செய்தால் அத்தீமையில்  இருந்தும் அவருக்கொரு பங்குண்டு. அல்லாஹ் அனைத்தையும் முறைப்படி கவனிப்பவனாக  இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:85)

    தீமையை விட்டு விலக்கிக்கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையை கொடுத்தோம். (திருக்குர்ஆன் 7:165)

    தீமைகள் கேடுவிளைவிப்பவை தீமையைத் தூண்டுவதும் தீமைதான் தீமையை தடுப்பதும் ஒரு நற்காரியம் தான் என்றெல்லாம் மேற்கண்ட வான்மறை வசனங்கள் கூறுகின்றன. எனவே நாம் தீமையான காரியங்களில் ஈடுபடும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செடிகளிடையே வளர்ந்து விட்ட ஒரு முள் செடி எவ்வளவு அபாயகரமானதோ, அது போன்றது தான் நம்மிடமுள்ள நமது தீமைகள். அவை கொஞ்சம் கொஞ்சமாக நம்மையே அழித்துவிடும்.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வெறுப்பான காரியத்தை கண்டால் தன் கையால் அதை தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் (பேசித்)தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் வெறுக்கட்டும். (நூல்:முஸ்லிம்)

    இன்னொருமுறை நபிகளார் இப்படி சொன்னார்கள்: (மக்களே) நிச்சயமாக நீங்கள் நன்மைகளை ஏவுங்கள் தீமைகளை விலக்குங்கள். (இல்லையெனில்) இறை வேதனை உங்கள் மீது இறங்கும், பிறகு உங்களது பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கப்படாது. (நூல்:திர்மிதி)

    ஆக தீமை என்பது மிகவும் மோசமான ஒன்று. நமது பிரார்த்தனைகளையே இறைவனிடம் அங்கீரமில்லாமல் செய்து விடுகின்றது என்றால் அது எவ்வளவு மோசமானது. எனவே தீமைகளை தடுப்பதில் கட்டாயம் தீவிரம் காட்ட வேண்டும். இல்லையெனில் நன்மைகளை செய்வதில் மட்டும் நற்பலன் முழுமையாக கிடைப்பதில்லை.

    புனிதமிகு ரமலானில் நாம் நற்காரியகங்களில் ஈடுபடுவதை போலவே நம்மைச்சுற்றி நடைபெறும் தீயகாரியங்களையும் கட்டாயம் தடுக்க முயற்சிக்க வேண்டும். முன்னதாக நாமும் கெட்ட செயல்களிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

    எனவே இனியேனும் நாம் தீமைகளை தீவிரமாக களைவோமாக..

    மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
    சோதனை என்பது நம்மைச்சுற்றி இருக்கவே செய்கிறது. சோதனைகளிலிருந்து இறைத்தூதர்களும், அறைநேசர்களும் தப்பிக்கவில்லை. எனவே இறைவன் நமக்கு வழங்கும் சோதனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    ஆனந்தமாக வாழ்ந்து வரும் வாழ்வில் இடையே திடீரென சிரமங்கள் சில வருவதுண்டு. துன்பம் வந்தவுடன் ஏனோ மனிதன் சட்டென துவண்டு போய் விடுகிறான். அதை எதிர் கொள்வதற்கு அவனால் முடிவதில்லை. இதனால் தான் இஸ்லாம் இது போன்ற நோன்புகளை நமக்கு கடமையாக்கி “சில சிரமங்களை தாங்கிக் கொள்” என நமக்கு பயிற்சியளிக்கிறது. இனி இறைமறை கூறுவதை கேளுங்கள்:

    (நம்பிக்கையாளர்களே) பயம், பசி மேலும் பொருட்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளை கொண்டு நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம். (நபியே இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்கங்களை) சகித்து கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.  (சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்ட போதிலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம் என கூறுவார்கள். (திருக்குர்ஆன் 2:155,156)

    உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 8:28)

    எனவே சோதனை என்பது நம்மைச்சுற்றி இருக்கவே செய்கிறது. சோதனைகளிலிருந்து இறைத்தூதர்களும், அறைநேசர்களும் தப்பிக்கவில்லை. எனவே இறைவன் நமக்கு வழங்கும் சோதனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    ஒருமுறை நபிகளார் கூறினார்கள்: ‘ஆச்சர்யம் தான். ஒரு இறைவாசிக்கு (நல்லதோ, கெட்டதோ) என்ன ஏற்பட்டாலும் அவனுக்கு நல்லது தான். எப்படி என்றால்  அவனுக்கு நல்லது நடந்தால் நன்றி செலுத்துவான். இது அவனுக்கு நல்லது தானே. அவனுக்கு கெட்டது நடந்தால் பொறுமையாக இருப்பான். இதுவும் அவனுக்கு நல்லது தானே’. (நூல்:முஸ்லிம்)

    ஆகவே சோதனைகளை கண்டு நாம் சுருண்டுவிடத்தேவையில்லை. அதை பக்குவமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி சோதனைகள் வரும் நேரத்தில் நாம் சொல்ல வேண்யதெல்லாம்‘இன்னா லில்லாஹிவ இன்னா இலைஹிராஜிஊன்’ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம் என்பதைத் தவிர வேறில்லை).

    ‘இன்னாலில்லாஹி’ என்பது நாம் மரணச்செய்தியை கேட்கும் போது மட்டும் கூற வேண்டிய வார்த்தையல்ல. சிறுசிறு சிக்கல்கள், சிரமங்கள், சங்கடங்கள் என சோதனைகள் நம் வாழ்வில் நிகழும் போதெல்லாம் சொல்ல வேண்டிய ஒரு சொல் தான் அது. அப்படி கூறுவதன் மூலம் அல்லாஹ் விரைவில் நமக்கு நல்லதொரு சூழ்நிலையை உடனடியாக ஏற்படுத்திக் தருவான் என்பது அனுபவப்பூர்வமான உண்மை.

    எனவே, இப்புனித ரமலானில் சோதனைகள் எதுவானலும் அவற்றை மனப்பூர்வமாக ஏற்று நற்சாதனைகளாக மாற்றிடுவோமாக.

    மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
    நற்செயல் என்பதற்கு அளவுகோல் என்று எதுவுமில்லை. எனவே இப்புனித நோன்பு காலத்தில் இயன்றவரை அதிகமதிகம் நற்செயல்கள் பல புரிந்து நற்பேறுகள் பற்பல பெறுவோமாக.
    நல்ல காரியம் என்று எது வந்தாலும் அதை நாம் முன்னின்று செய்ய வேண்டும். நல்ல காரியங்கள் என்றைக்கும் நல்ல காரியங்கள் தான்.

    நற்செயல்களை செய்வதற்கு நீங்கள் முந்திக்கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 2:148)

    எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை செய்கின்றார்களோ அவர்களின் (நற்) கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 3:57)

    எவரேனும் வருத்தப்பட்டு (பாங்களில் இருந்து) விலகி நற்செயல்களை செய்தால் (அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான்)
    ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 3:89)

    ஆணாயினும் பெண்ணாயினும் எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களை செய்கின்றார்களோ அவர்கள் தான் சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் அற்ப அளவுக்கு அநீதி செய்யப்பட மாட்டார்கள் (திருக்குர்ஆன் 4:124)

    எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களை செய்கின்றார்களோ அவர்களுடைய் கூலிகளை அவன் அவர்களுக்கு முழுமையாக அளித்து தன் அருளால் மென்மேலும் அவர்களுக்கு அதிகப்படுத்துவான் (திருக்குர்ஆன் 4:173)

    மேற்கண்ட இறைமறை வசனங்கள் நல்ல காரியங்களை செய்ய வேண்டும். அதுவும் உடனடியாக செய்ய வேண்டும் அதுதான் இறையருளை பெறவும் சொர்க்கத்தை பெறவும் காரணமாக இருக்கும் என்பதை அறிய முடிகிறது.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: எவர் ஒரு நற்காரியத்தை செய்யத் தூண்டுகிறாரோ, அவர் அந்தக்காரியத்தை செய்தவர் போன்றவராவார் (நூல்:முஸ்லிம்)

    ஒருமுறை நபிகள் நாயகம் என்னிடம் இப்படி கூறினார்கள்: அபூ தர்ரே, நீர் எந்தவொரு நற்காரியத்தையும் இழிவாக கருதாதீர். அது உன் நண்பனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும சரியே. (நூல்:முஸ்லிம்)

    நண்பர்களை காணும் போதெல்லாம் மலர்ச்சியுடன் முகத்தை வைத்துக்கொண்டால் கூட போதும் அதுவும் ஒரு நற்செயல் தான் என்கிறார்கள் நமது நபிகள் நாயகம்.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: ஒருவர் ஒரு பாதைவழியே சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் முள் மரக்கிளை ஒன்று நடப்பவர்களுக்கு இடையூறளித்து கொண்டிருந்தது. அதைக்கண்ட அவர் அவ்வழியிலிருந்து அம்முள்கிளையை அகற்றிப்போட்டார். இந்த நற்செயலின் காரணமாக இறைவன் அவருக்கு நன்றி கூறி அவரது பாவங்களை மன்னித்து கவனத்தில் நுழைய செய்தான்.

    ஆக நற்செயல் என்பதற்கு அளவுகோல் என்று எதுவுமில்லை. எனவே இப்புனித நோன்பு காலத்தில் இயன்றவரை அதிகமதிகம் நற்செயல்கள் பல புரிந்து நற்பேறுகள் பற்பல பெறுவோமாக.

    மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

    அமானிதம் எனும் பாதுகாப்பு தன்மை அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒன்று. குறிப்பாக ரமலான் நோன்புகள் ஒவ்வொன்றும் நமக்கு அமானிதம் தான்.
    அமானிதம் எனும் பாதுகாப்பு தன்மை அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒன்று. குறிப்பாக ரமலான் நோன்புகள் ஒவ்வொன்றும் நமக்கு அமானிதம் தான்.

    இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விட வேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்பு கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான், நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு(இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான். நிச்சயாக அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 4:58)

    எனவே அமானிதம் என்பது நமக்கு மிகவும் முககியமான ஒன்று. ஒருவரிடம் நம்பத்தன்மை இல்லையென்றால் அவரிடம் நாம் எப்படி எதார்த்தத்துடன் நடந்து கொள்ள முடியும்?. எனவே தான் இந்த அமானிதம் முதல் முக்கியத்துவம் பெறுகிறது.

    இதனால் தான் நபிகள் நாயகம் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று : பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறுசெய்வான், நம்பிக்கை வைத்தால் மோசடி செய்வான்.(நூல்:புகாரி)

    எனவே நம்பிக்கை என்பது நமக்கு மிகமிக முக்கியமான ஒன்று. அந்த நம்பிக்கையை இந்த நோன்பு கற்றுத்தருகிறது. ஒருவர் நோன்பு வைத்திருக்கிறார், அவர் நினைத்தால் யாருக்கும் தெரியாமல் உண்ணலாம். பருகலாம். ஆனால் அவர் அப்படியெல்லாம் செய்வதில்லை. காரணம் அல்லாஹ் தன்னை நம்பி இந்த நோன்பை ஒப்படைத்துள்ளான். அதை நாம் சரியாக முறையாக நிறைவேற்ற வேண்டும் என்ற அவனது அமானிதத் தன்மை தான்.

    இந்த தன்மை தான் இன்றைக்கு மிக அவசியமானதாக இருக்கிறது. நட்பு, கடன், கல்வி, குடும்பம், வணிகம் என அனைத்திலும் நம்பகத்தனம் அவசியமாகிறது. அவற்றில் சற்று சந்தேகம் வந்து விட்டால் பிறகு அது நீடித்து நிலைப்பது என்பது முடியாத ஒன்று தான், ஆகவே தான்  அண்ணலார் இப்படி எச்சரித்தார்கள். அமானிதத் தன்மை இல்லாதவர் ஈமான் எனும் இறைவிசுவாசமற்றவர்.

    ஒரு முஸ்லீமுக்கு இறை விசுவாசம் என்பது முக்கியமான ஒன்று. அதன் இருப்பை அவரது அமானிதத் தன்மை தான் தீர்மானிக்கிறது. இப்படியானால் ஒரு முஸ்லீமிடம் கட்டாயம் அமானிதம் இருக்க வேண்டும் என்பதை விட அந்த அமானிதத்துடன் இருப்பவர் தான் முழு முஸ்லீமாக இருக்க முடியும் என்பதையும் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.

    இன்றைக்கு எல்லாத்துறைகளிலும் மோசடிகள் பெருகிக்போனதற்கு என்ன காரணம்? அந்த அமானிதங்கள் அனைத்து குறைந்து போனதும் அழிந்து போனதும் தான் காரணம்.

     எனவே நமது ஈமானை அடையாளப்படுத்தும் மனித குலத்தை நேர்மைப்படுத்தும் அமானிதத்தை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது.ஆகவே புனிதநோன்பு கற்றுத்தரும் அமானிதங்களை கட்டாயம் கற்போம். கடைசி வரை கட்டிக்காப்போம்.

    மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
    நபிகள் நாயகம் கூறினார்கள்: ஆதாமின் அனைத்து பிள்ளைகளும் தவறு செய்பவர்கள் தான், அவர்களில் பாவ மன்னிப்பு தேடுபவர்கள் தான் மிகச் சிறந்தவர்கள்.
    இன்று முதல் ‘மஃபிரத்’எனும் நடுப்பத்து நாட்கள் ஆரம்பம். எனவே இந்நாட்களை அதிகமதிகம் நாம் மன்னிப்பை தேட பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    ‘அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்னுடைய) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கின்றான்’.(திருக்குர்ஆன் 2:221)

    ‘அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன்2:199)

    ‘உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சுவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானம், பூமியின் விசாலத்தை போன்றது. (அது) இறைஅச்சம் உடையவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டுள்ளது’. (திருக்குர்ஆன் 3:133)

    எவரேனும் ஒரு தீமையைச்செய்து அல்லது தமக்குத்தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக ) அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பாரானால் அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார். (திருக்குர்ஆன்: )

    மானக்கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்து விட்டாலும் அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தனக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத்தேடுவார்கள். அல்லாஹ்வை தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும் அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ)காரியங்களில் நீடித்திருக்கவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 3:135)

    மேற்கொண்ட இறைவசனங்கள் அனைத்தும் நாம் நமது பாவங்களுக்காக நிச்சயம் அல்லாஹ்விடத்திலே பாவ மன்னிப்பு தேட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: ஆதாமின் அனைத்து பிள்ளைகளும் தவறு செய்பவர்கள் தான், அவர்களில் பாவ மன்னிப்பு தேடுபவர்கள் தான் மிகச் சிறந்தவர்கள்.

    ரப்பி ஃபிர்லீ வதுப் அலைய்ய, இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம் அல்லது அஸ்தஃபிருல்லாஹ், அல்லதீ லா இலாஹி அல்லது சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, அஸ்தஃபிருல்லாஹ் வஅதுபு இலைஹி என்று இம்மூன்றில் ஏதேனும் ஒன்றை ஓதலாம். தமிழிலும் நமது குற்றங்களை அல்லாஹ்விடம் மனம் விட்டு கூறி தன்னை மன்னிக்கும் படி அழுது புலம்பி தவ்பா செய்ய வேண்டும். நிச்சயம் அல்லாஹ் நம்மை மன்னிப்பதற்கு தயாராகத்தான் இருக்கிறான் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

    நமது பாவங்களுக்காக நாம் வருத்தப்படுவதும் கூட ஒரு தவ்பா தான் என்ற நபிகளார் கூறியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. எனவே இந்த ரமலானில் நமது பாவங்களுக்காக வருத்தப்பட்டு இறைவனிடத்தில் நாம் அதிகமதிகம் பாவ மன்னிப்பு தேடுவோமாக

    மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
    ‘தக்வா’ எனும் இறையச்சம் நமக்கும், நமது செயல்களுக்கும் அவசியமான ஒன்று. “இறையச்சமில்லாத எந்தவொரு செயலும் இறைவனிடம் அங்கீகாரம் பெறுவதில்லை” என நபிகளார் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
    ‘தக்வா’ எனும் இறையச்சம் நமக்கும், நமது செயல்களுக்கும் அவசியமான ஒன்று. “இறையச்சமில்லாத எந்தவொரு செயலும் இறைவனிடம் அங்கீகாரம் பெறுவதில்லை” என நபிகளார் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

    “உங்களால் இயன்றவரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்” (திருக்குர்ஆன் 64:16)

    “உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர்”. (திருக்குர் ஆன்49: 13)

    “எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (சரியான ஒரு)வழியை உண்டாக்குவான். அவருக்கு அவர் எண்ணியிராத புறத்திலிருந்து  அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்”. (திருக்குர்ஆன் 65:3)

    “ஈமான் கொண்டவர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையை) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்: இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களை போக்கி உங்களை மன்னிப்பான். ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்”. (திருக்குர்ஆன் 8:59)

    மேற்கண்ட இறைவசனங்கள் அனைத்தும் இறைவனுக்கு நாம் கட்டாயம் அஞ்சி வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அவர்களுக்கு தான் அல்லாஹ்விடத்தில் உயர்வான கண்ணியம் இருக்கிறது என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    நபிகள் நாயகத்தின் இறுதிப்பேருரை மிகவும் பிரபலமான ஒன்று, அந்த உரையை அண்ணலார் இப்படித்தான் ஆரம்பித்தார்கள்:‘நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிச் கொள்ளுங்கள். ஐவேளை தொழுங்கள். ரமலானில் நோன்பு வையுங்கள். உங்கள் பொருட்களுக்கான ஜகாத்தை கொடுத்து விடுங்கள். உங்கள் தலைவருக்கு கட்டுப்படுங்கள். (இப்படிச்செய்தால்) உங்களது இறைவனின் கவனத்தில் நீங்கள் நுழைவீர்கள்’(நூல்:திர்மிதி)

    நபிகளாரின் பிரார்த்தனைகளில் மிகப்பிரபலமான பிரார்த்தனை இது:

    ‘நேர்வழியையும், இறையச்சத்தையும் பத்தினித்தனத்தையும், பிறரிடத்தில் கையேந்தாத நிலையையும் இறைவா உன்னிடத்தில் நான் கேட்கிறேன்‘.(நுல்:முஸ்லீம்)

    ஆக எல்லாவற்றிலும் தக்வா எனும் இறையச்சத்தை தான் அல்லாஹ்யும், அவனது தூதரும் முன்னிலைப்படுத்தி இருப்பதிலிருந்தே அதன் முக்கியத்துவம் நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும். இதனால் தான் நோன்பை பற்றி குர்ஆன் கூறும் போது ‘இதன் மூலம் நிச்சயம் நீங்கள் இறையச்சத்தை பெறுவீர்கள்’ என்ற உறுதியளிக்கிறது.

    எனவே புனித நோன்புகளை நோற்று இனிய இறையச்சத்தை இனிதே நாம் பெற்றிடுவோமாக.

    மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
    ‘நம்பிக்கையாளர்களே (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 2:153)
    புனித ரமலான் போதிக்கும் பண்புகளில் மிகமுக்கியமான ஒன்று பொறுமை. ‘ஸப்ர்’ எனும் பொறுமை குணம் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று.

    ‘(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையை கடைப்பிடித்து தொழுது(இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால் நிச்சயமாக இது உள்ளச்ச முடையவர்களுக்கே அன்றி ( மற்றவர்களுக்கு) மிகப்பளுவாகவே இருக்கும்.(திருக்குர்ஆன் 2:45)

    ‘நம்பிக்கையாளர்களே (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 2:153)

    மேற்கண்ட வான்மறை வசனங்கள் இரண்டும் பொறுமையின் அவசியத்தையும்,  அதன் பலன்களையும் விவரிக்கின்றன. நாம் கடைபிடிக்கும் இந்த நோன்பு உண்மையிலேயே நாம் பொறுமையாய் இருப்பது எப்படி என்ற பாத்தை நமக்கு நன்கு கற்றுத்தருகிறது.

    இதனால் தான் இந்த மாதத்திற்கு ‘பொறுமையின் மாதம்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    “நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் போது உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்து விட்டால் ‘ நான் நோன்பாளி’ என கூறுங்கள்” என நபிகளார் சொல்லிக்கொடுத்தார்கள் என்றால் இந்த நோன்பு எவ்வளவு சிறப்பு மிக்கது என்று நாம் அறிய முடிகிறதல்லவா. எனவே நாம் இந்த பொறுமையின் மாதத்தில் வீண் சண்டை, சச்சரவுகளை விட்டு முற்றும் விலகியிருக்க வேண்டும். நம்மை மீறி நம்மிடம் யாராவது சண்டைக்கு வந்தாலும் பொறுமையுடன் அதை கையாள வேண்டும் என்றும் நபிகளார் நமக்கு கற்றுத்தருகிறார்கள்.

    புனித நோன்பை வைத்து கொண்டு ஒருவர் பொறுமையிழந்து விட்டால் அதை விட அவருக்கு கைசேதம் வேறு என்னவாக இருக்கப்போகிறது?

    அதனால் தான் நபிகள் நாயகம் இந்த பொறுமையை ‘ஈமான்’ எனும் இறை விசுவாசத்தின் ஒரு பகுதி என்று கூறினார்கள். எனவே இந்த பொறுமையை மீட்டெடுப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும.

    அதுவும் இந்த பொறுமை என்பது இறையச்சமுள்ளவர்களின் குணங்களில் ஒன்று என்று பின்வரும் வான்மறை வசனம் வாசித்து காட்டுகிறது..

    “கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையை கடைப்பிடித்தவர்களும் ஆகிய (இவர்கள் தான் நல்லோர்கள்). இவர்கள் தாம் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள் தான் இறையச்சமுடையவர்கள்” (திருக்குர்ஆன் 2:177)

    நோன்பு நோற்பதின் மூலம் நாம் இறையச்சத்தை பெறுவதை போலவே நமது மனதை அடக்கி பொறுமை காப்பதன் மூலமும் இறையச்சத்தை நாம் பெறலாம் என்றறிய முடிகிறது. எனவே பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வாறே பொறுத்தவர் தம் மனதையும் ஆள்வார் என்பதும் உண்மை. இத்தனை சிறப்பு மிக்க பொறுமையை இனியேனும் நாம் நாள்தோறும் கடைப்பிடிப்போமாக.

    மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3
    நபிகள் நாயகம் கூறினார்கள்: நீங்கள் சஹர் செய்யுங்கள் நிச்சயமாக சஹர் (உணவு) சாப்பிடுவதில் ‘பரகத்’ எனும் அபிவிருத்தி இருக்கிறது. (நூல்:புகாரி)
    அதிகாலை ‘அல்லாஹு அக்பர்’ என் ‘பாங்கு’ (தொழுகைக்கான அழைப்பு) சொல்லப்படுவதற்கு முன் ‘சஹர்’ எனப்படும் காலை உணவை உண்டு முடித்திட வேண்டும். எதுவுமே சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் நோன்பு வைப்பது நல்லதல்ல.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: நீங்கள் சஹர் செய்யுங்கள் நிச்சயமாக சஹர் (உணவு) சாப்பிடுவதில் ‘பரகத்’ எனும் அபிவிருத்தி இருக்கிறது. (நூல்:புகாரி)

    நபிகள் நாயகம் கூறினார்கள்:சஹர் உணவு சாப்பிடுவது தான் நமக்கும்  வேதக்காரர்களுக்கும் மத்தியிலுள்ள நோன்புகளை வித்தியாசப்படுத்திச் காட்டக்கூடியதாகும். (நூல்:முஸ்லீம்)

    ஆக, சஹர் உணவு என்பது மிக முக்கியமான ஒன்று. இறையருள் இறங்கும் நேரம் அது. அதை நாம் மிகச்சரியாக பயன்படுததிக்கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் எழுந்திருப்பதும், காலைக் கடன்களை முடித்து உணவு சாப்பிடுவதும கடினம் தான். என்றாலும் சஹர் செய்ய வேண்டும் என்று நபிகளார் கூறி விட்ட பிறகு சஹர் செய்வதை விட்டு விடுவது கூடாது. காரணம் சில சிரமங்களின் பின்னணியில் தான் பல இன்பங்கள் ஒளிந்திருக்கின்றன. எனவே பின்னாட்களில் சிரமப்படாமலிருப்பதற்காக இந்நாட்களில் கொஞ்சம் சிரமங்களை ஏற்றுக்கொள்வது தான் நமக்கு நல்லது.

    இறையச்சமுள்ளவர்களை பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது அவர்கள் சஹர் நேரங்களில் எழுந்து அழுது, தொழுது அல்லாஹ்விடத்தில் மன்றாடி மன்னிப்பு போட்டு துஆ செய்வார்கள் என்று குறிப்பிடுகிறது. இதோ அதுபற்றிய திருக்குர்ஆன் வசனம்:

    “பொறுமையாளர்களாகவும், உண்மையே பேசுகின்றவர்களாகவும்,(இறைவனுக்கு) முற்றிலும் வழிபட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கின்றவர்களாகவும், “சஹர்” நேரங்களில் (வைகறைப்பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்பு கோருகின்றவர்களாகவும் இருக்கின்றனர்(திருக்குர்ஆன் 3:17)

    சஹர் நேரம் என்பது சாதாராணமான ஒரு நேரமல்ல. குறிப்பாக இறைவணக்கத்திற்கும் இறைவனோடு தொடர்பு கொள்வதற்கும் ஏற்றமான நேரமும் அது தான்.

    குர்ஆன் ஓதுவது, திக்ர் செய்வது, தஹஜ்ஜத் தொழுகை தொழுவது, பாவ மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்வது போன்ற நல்ல பல நற்காரியகங்களில் நம்மை நாம் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

    சஹர் நேரம் என்பது சாப்பிடுவதற்கு மட்டும் உரிய நேரமல்ல. நல்ல பல வணக்கங்களை செய்வதற்கும் தான். எனவே பொன்னான இந்த நேரத்தை அதுவும் ரமலானில் உள்ள சஹர் நேரத்தை நிச்சயம் மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    சஹர் உணவை நாம் வகை வகையாக உண்ணுவதைப் போல நமது வணக்கங்களையும் அந்த சஹர் நேரத்தில் செய்ய வேண்டும்.

    எனவே ரமலானில் வைகறைபொழுதுகளை பொறுப்புணர்வுகளுடன் பேணிப்பாது காத்து நடந்திடுவோமாக

    மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3



    புதிதமான இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான செயல்பாடுகளில் தர்மமும் ஒன்று. நாம் செய்யும் தர்மங்கள் தான் நம்மை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன.
    புதிதமான இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான செயல்பாடுகளில் தர்மமும் ஒன்று. நாம் செய்யும் தர்மங்கள் தான் நம்மை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன. எனவே நாம் நமது தர்மங்களை என்றென்றும் நிறுத்தி விடக்கூடாது.

    நம்பிக்கையாளர்களே (தர்மம் செய்யக்கருதினால்) நீங்கள் சம்பாதித்தவைகளிலிருந்தும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்துவெளியாக்கிய (தானியம். கனிவர்க்கம் ஆகிய)  செலவு செய்யுங்கள். அவைகளில் கெட்டவைகளை கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்)எவைகளை நீங்கள் (வெறுப்புடன்) கண்மூடியர்களாக அன்றி வாங்கிக் கொள்ளமாட்டீர்கள்( ஆகவே நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாக கொடுக்காதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன். மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன்2:267)

    “(நீங்கள் தர்மம் செய்தால்) சைத்தான் உங்களுக்கு வறுமையை கொண்டு பயங்காட்டி மானக்கோடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால் அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன்னுடைய மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கிறான் அன்றி அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவனும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்“. (திருக்குர்ஆன் 2:268)

    “( நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் செய்யும் படி தூண்டக்கூடும்) ஆயினும் அதனை நீங்கள் மறைத்தே கொடுப்பது, அதுவும் அதனை ஏழைகளுக்கு கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை (பயக்கும்). மேலும் அது (அதாவது இருவகை தர்மமும்) உங்களுடைய பாவங்களுக்கு பரிகாரமாவும் ஆகும். நீங்கள் செய்யும் (வெளிப்படையான மற்றும்) மறைவான அனைத்தையும் அல்லாஹ் மிகவும் நன்கறிவான்”. (திருக்குர்ஆன் 2:274)

    மேற்கண்ட மூன்று வசனங்களும் நாம் தர்மம் செய்வது எப்படி. அது எதிலிருந்து, அது எவ்வாறு என்பது குறித்து மிகத்தெளிவாக கூறிக்காட்டுகிறது. இதனால் தான் தர்மம் அது (தவறான நம்) தலைவிதிகளை தடுத்து நிறுத்தும் என்று நபிகளார் கூறி நமக்கு நல்வழி காட்டினார்கள். தர்மம் என்பது பணத்தை கொடுப்பதில் மட்டும் இல்லை. நற்காரிகங்களை செய்வதும் ஒரு வகைளில் தர்மம் தான்.

    உன் நண்பனை சந்திக்கும் போது நீ உன் நண்பனை பார்த்து புன்முறுவல் பூப்பதும் கூட ஒரு தர்மம் தான். என்று நபிகளார் கூறியிருப்பது இங்கு நாம் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும். எனவே இப்புனித நாட்களில் அதிகமதிகம் நாம் தர்மங்களை செய்து இறைஅருளைப்பெறுபோமாக.

    மவுலகி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3
    “உங்கள் இறைவன் கூறுகிறான் என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள் நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்” (திருக்குர்ஆன் 40:60).
    துஆ எனும் பிரார்த்தனை மிகவும் அவசியமான ஒன்று. ‘ஒரு இறை விசுவாசியின் ஆயுதம் அவனது பிரார்த்தனை தான்’ என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் கூர்ந்து சிந்திக்கத்தக்க ஒன்று.

    “உங்கள் இறைவன் கூறுகிறான் என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள் நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்” (திருக்குர்ஆன் 40:60).

    “(நபியே) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி கேட்டால் (நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்)என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்’. ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்(திருக்குர்ஆன்2:186)

    நாம் செய்யும் எந்தவொரு பிரார்த்தனையும் நிச்சயம் வீண் போவதில்லை. அது கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதியோடு செய்யும் போது தான் அது இறைவனிடத்தில் முழு அங்கீகாரம் பெறும்.

    “இறைவா  நீ நாடினால் எனக்கு மன்னிப்பு வழங்கு! நீ நாடினால் எனக்கு இரக்கம் காட்டு! நீ நாடினால் எனக்கு உணவளி! என்றெல்லாம் நீங்கள் துஆ செய்யாதீர்கள் கட்டாயம் நமது துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதியான உள்ளத்துடன் துஆ செய்யுங்கள்”. (நூல்:புகாரி) என்று நபிகளார் கூறி இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

    இன்னொரு முறை நபிகளார் இப்படி கூறினார்கள்: ‘அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியத்திற்குரியது இந்த துஆவைத்தவிர வேறெதுவும் இல்லை’. (நூல்:திர்மிதி)

    இதனால் தான் ‘பிரார்த்தனை அது ஒரு வணக்கம்’ என்று நபிகளார் கூறிச்சென்றுள்ளார்கள். எனவே துஆவை நாம் அலட்சியமாக கருதக்கூடாது. உதட்டிலிருந்து வரும் வார்த்தைகளை விட உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளுக்கு இறைவனின் சிம்மாசனத்தை தட்டும் அபார சக்தி உண்டு.

    ‘சிரமமான காலங்களில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டுமா? அப்படியானால் சிரமமற்ற காலங்களில் நீங்கள் பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள்’ (நூல்:திர்மிதி) என்று நபிகள் நாயகம் கூறியதும கூர்ந்து கவனிக்கத்தக்கது.

    நபிகளார் கூறினார்கள்: ‘மூவரின் துஆ கட்டாயம் மறுக்கப்படாது: நோன்பு நோற்றவர் நோன்பு திறக்கும் நேரத்தில் செய்யும் துஆ, நீதமாக தலைவரின் துஆ, பாதிக்கப்பட்டவரின் துஆ.(நூல்:திர்மிதி)

    இறைவனோடு தொடர்பு கொள்வதற்கு நமது பிரார்த்தனைகள் தான் முக்கியப்பாதையாய் இருக்கின்றன. அதிலும் முதன்மை பெற்றவர்கள் நோன்பு நோற்ற நிலையில் பிராத்தனை செய்யும் இந்த நோன்பாளிகள் தான் என்பதையும் இந்த நபிமொழி நமக்கு நன்கு உணர்த்திக் காட்டுகிறது.

    எனவே இந்த நோன்பு காலங்களில் ஆதிகமதிகம் நாம் துஆ  செய்து கொண்டேபிருப்போமாக.

    மவுலகி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

    தினமும் நாம் குர்ஆனை ஓதுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நபிமொழி நமக்கு உணர்த்திக்காட்டுகிறதல்லவா?. எனவே தினமும் குர்ஆன் ஓதுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    திருக்குர்ஆன் இறங்கிய மாதம் இது. எனவே தினமும் நாள் தவறாமல் குர்ஆனை நாம் கட்டாயம் ஓதி வரவேண்டும். இதர காலங்களில் நாம் ஓதும் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து பத்து நன்மைகள் என்றால் ரமலானில் ஒன்றுக்கு எழுபது நம்மைகள். அப்படியானால் திருக்குர்ஆன் முழுவதும் எத்தனை ஆயிரம் எழுத்துக்கள் உள்ளன. அதற்கு எத்தனை ஆயிரம் நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் நிதானமாக யோசித்து பார்க்க வேண்டும்.

    தண்ணீர் பட்டால் எப்படி இரும்பு துருவித்து விடுகிறதோ, அவ்வாறு தான் இந்த இதயமும் துரு விடித்து விடும் என்றார்கள் நபிகள் நாயகம். உடனே தேழர்கள் கேட்டார்கள் தூதரே அதை நீக்குவது எப்படி? அதிகமாக மரணத்தை நினைப்பதும், அதிகமாக குர்ஆன் ஓதுவதும் தான் அதற்கு ஒரே வழி என்று பதிலளித்தார் நபிகளார் அவர்கள்(நூல்: பைஹகி)

    தினமும் நாம் குர்ஆனை ஓதுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நபிமொழி நமக்கு உணர்த்திக்காட்டுகிறதல்லவா?. எனவே தினமும் குர்ஆன் ஓதுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: ’குர்ஆனை ஓதுங்கள் நிச்சயமாக அது தன்னை ஓதக்கூடியர்களுக்கு மறுமை நாளில் ஷஃபா அத் எனும் பரிந்துரை செய்யக்கூடியதாக வரும்’. (நூல்; முஸ்லீம்)

    மறுமை நாள் என்பது ‘எனக்கு என்ன ஆகுமோ?’ என்று ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டிருக்கும் போது உதவிக்கு யாரும் வரமாட்டார்ள்.  அந்த நெருக்கடியான நேரத்தில் சட்டென வந்து உதவி செய்யும் ஒன்று தான் இந்த குர்ஆன்?

    நபிகள் நாயகம் கூறினார்கள்: குர்ஆனை மனப்பாடமாக ஒதுவது ஆயிரம் மடங்கு சிறந்தது. ஆனால் குர்ஆனை பார்த்து ஓதுவது இரண்டாயிரம் மடங்கை விட சிறந்தது.(நூல்: பைஹகி)

    எனவே குர்ஆனை நாம் ஓத வேண்டும் அதுவும் பார்த்து ஓத வேண்டும். அது தான் சிறப்பிலும் சிறப்பு.

    மேலும் நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘எவர் குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்கிறாரோஅவரது பெற்றோர்கள் நாளை மறுமையில் கிரீடம் அணிவிக்கப்படுவார்கள். அதன் ஒளி சூரீயனை விட மிகப்பிரகாசமாக இருக்கும்’(நூல்: அஹ்மது)

    எனவே, குர்ஆன் ஓதுவது மட்டும் சிறப்பல்ல அதன் படி நாம் செயல்படவும் வேண்டும். அது தான் நாம் குர்ஆனுக்கு செய்யும் முதல் மரியாதை.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘குர்ஆனை கற்று அதை பிறருக்கும் எவர் கற்றுக் கொடுக்கிறாரோ அவர் தான் உங்களில் சிறந்தவர்’. (நூல்: புகாரி)

    நிறைவாக நாம் ஓதி செயல்பட வழிவகுத்துத்தந்த குர்ஆனை நாம் மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே குர்ஆனுக்கு நாம் செய்யும் நிறைவு கடமையாகும். அதை இந்த ரமலானில் செய்வது தான் கூடுதல் சிறப்பு. வாருங்கள் குர்ஆனை ஓதலாம்.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3
    இஸ்லாமிய மக்கள் நேற்று தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தி நோன்பு கடைப்பிடித்தனர். மாலையில் நோன்பு கஞ்சி தயாரித்து அதனுடன் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு நோன்பு திறந்தனர்.
    ரமலான் மாதத்தில் ஆண்டுதோறும் ரமலான் பிறை கண்டு நோன்பு தொடங்குவது வழக்கம். நோன்பின் முடிவில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

    அந்தவகையில் ரமலான் நோன்பு நேற்று முதல் கடைப்பிடிக்கப்பட்டது.

    தற்போது கொரோனா தொற்று நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவில் அமலில் உள்ளதால் மத வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ரமலான் நோன்பு நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

    தற்போதைய சூழ்நிலையில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்ச வேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் இஸ்லாமிய மக்கள் நேற்று தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தி நோன்பு கடைப்பிடித்தனர். மாலையில் நோன்பு கஞ்சி தயாரித்து அதனுடன் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு நோன்பு திறந்தனர்.

    ×