search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேஷ ராசி
    X
    மேஷ ராசி

    மேஷ ராசிக்காரர்கள் திருமண யோகம்

    குருவுக்கு உரிய பூஜைகளும், பரிகாரங்களும் செய்தால் திருமண யோகத்தை வெகுவிரைவில் முடிக்க முடியும். குரு பெயர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் மேஷ ராசிக்காரர்கள் முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
    குரு பகவான் கடந்த 29-ந்தேதி அதிகாலை தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். தனுசு ராசியானது குரு பகவானின் சொந்த வீடாகும். இதனால் இந்த ஆண்டு குரு பார்க்கும் இடங்களில் பலம் அதிகமாகும். சுப நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்க வாய்ப்புள்ளது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் திருமண யோகம் எந்த அளவுக்கு தேடி வரும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    குரு பகவான் மேஷ ராசியில் 9-வது இடத்துக்கு வந்துள்ளார். இது அதிக வெற்றிகளை தேடி வரும். இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் தேடி வர வாய்ப்புள்ளது. மேஷ ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன் காரணமாக வாரிசுகளுக்கு நல்ல முறையில் திருமணத்தை செய்து கொடுக்க முடியும் என்ற உற்சாகம் உண்டாகும்.

    குருவுக்கு உரிய பூஜைகளும், பரிகாரங்களும் செய்தால் திருமண யோகத்தை வெகுவிரைவில் முடிக்க முடியும். குரு பெயர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் மேஷ ராசிக்காரர்கள் முருகப்பெருமானை வழிபட வேண்டும். குறிப்பாக திருச்செந்தூர் முருகன் தலம் குரு அம்சத்துக்குரிய தலமாக திகழ்வதால் திருச்செந்தூருக்கு சென்று வழிபட்டு வந்தால் கைமேல் பலன் உடனடியாக கிடைக்கும்.

    சென்னையில் இருப்பவர்கள் சிறுவாபுரி முருகனை வழிபட்டால் சுப காரியம் கைகூடுவதை அனுபவப்பூர்வமாக உணரலாம். மற்ற மாவட்டங்களில் இருப்பவர்கள் தங்கள் பகுதியில் மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபடலாம். பொதுவாக மேஷ ராசிக்கு உரியவர்கள் ராமேசுவரம் சென்று வழிபட வேண்டும் என்று குறிப்புகள் உள்ளன. ஆனால் தற்போதைய குரு பகவானின் நகர்வு காரணமாக முருகன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலங்களுக்கு சென்று வருவது நல்லது.

    மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அருமையான பலன்களை வாரி வழங்கும் வகையில் உள்ளது. மனமகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. திருமண வயதில் உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலையில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மதிப்பு உண்டாகும். உறவினர்களின் ஆதரவு தேடி வரும்.

    ஆனால் இந்த பலன்களை பெற பெண்கள் குருவின் அருளை ஒவ்வொரு வியாழக்கிழமையும் தேடி செல்ல வேண்டும். தசாபுத்திக்கு ஏற்ற வழிபாடு செய்ய வேண்டும் என்பதால் வியாழன் தோறும் மேஷ ராசி பெண்கள் குரு வழிபாட்டை செய்வது நல்லது. சிவாலயங்களுக்கு செல்லும்போது தட்சிணாமூர்த்தியை தவறாமல் வழிபட வேண்டும். அர்ச்சனை செய்ய வேண்டியது அவசியமாகும்.

    வியாழக்கிழமைகளில் சீரடி சாய்பாபாவை உரிய முறையில் வழிபடுவதும் மேஷ ராசி பெண்களுக்கு கை கொடுக்கும். அதோடு ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவது நல்லது. பவுர்ணமி நாட்களில் வீட்டின் அருகில் அம்மன் ஆலயங்களுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

    மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கிருத்திகை ஆகிய 3 நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லையில் உள்ள உச்சிஷ்ட மகா கணபதி ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேரளா மாநிலம் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அந்த ஆலயத்தில் உள்ள சக்கரத்தில் அமர்ந்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது. பொதுவாக மேஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் விநாயகர் மற்றும் முருகரை அதிகம் வழிபட வேண்டும். விநாயகர் அருளை பெற பிள்ளையார்பட்டிக்கு சென்று வரலாம்.

    இக்கோவிலில் உள்ள வலம்சுழி விநாயகர் மிகவும் விசேஷமானவர். மூலவர் குடவரைக்குள் 6 அடி உயரம் கொண்டு, இரண்டு கைகளுடன் காட்சி அளிக்கிறார். விநாயகரின் வலது கையில் சிவலிங்கம் காட்சியளிக்கிறது. இவர் வடக்கு திசையை நோக்கி வீற்றிருக்கிறார். விநாயகரின் துதிக்கை வலம்புரியாக உள்ளதும், அவர் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருப்பதும், இடது கரத்தை கடிஹஸ்தமாக தொடையில் வைத்திருப்பதும் இவரது சிறப்பு தோற்றமாகும்.

    இந்த கோவிலுக்கு ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது. அதாவது, கஜமுகாசுரனைக் கொன்ற விநாயகர், அந்த பாவம் தீர, ஈசனை இத்தலத்தில் பூஜிப்பதாக புராணக் கதைகள் கூறுகின்றன. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினால் கல்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப நலம் போன்ற சகல பாக்கியங்களும் கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இந்த கோவிலுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. 1,600 ஆண்டுகளுக்கு முன் குடைவரைக் கோவிலாகக் கட்டப்பட்ட பிள்ளையார்பட்டி ஆலயம், ஒன்பது நகரத்தார் ஆலயங்களுள் ஒன்றாகும். மேலும் விநாயகப் பெருமான் ஓங்கார வடிவில் அருள்புரியும் அற்புதத் தலம் இது. இந்த கோவில் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட முதல் குடவரைக் கோவில் என்றும் கருதப்படுகிறது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் சங்கடகர சதுர்த்தி மிகச் சிறப்பாக பூஜிக்கப்படுகிறது. மேலும் ஆவணி மாதம் 10-ம் நாள் சதுர்த்தி திருவிழா நடைபெறும். ஒன்பது நாட்களுக்கு முன்பாகவே காப்புகட்டி கொடி ஏற்றம் செய்து திருவிழா தொடங்கும். சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி, ஆலய உட்பிரகாரத்தை வலம் வருவார். ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்த கொள்வார்கள்.

    மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமாள் திருவீதி உலா வருவார். அன்று சிவகாமசுந்தரியின் ஊடலை நீக்க நடராஜர் செய்யும் முயற்சிகள் காண கண்கொள்ளா தவையாக இருக்கும். இதனை ஏராளமான பக்தர்கள் திரளாகக் கண்டு மகிழ்வர். பிள்ளையார் பட்டிக்குச் செல்ல காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தூரமும், மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரமும், திருப்பத்தூரில் இருந்து 9 கி.மீ. தூரமும் பயணம் செய்ய வேண்டும். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கு கோவிலைச் சுற்றிலும் விடுதிகள் உள்ளன. சிவகங்கை, திருப்பத்தூர் காரைக்குடி ஆகிய ஊர்களிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு பஸ் வசதிகள் உள்ளன.

    விநாயகர் தவிர திருச்செந்தூர் சென்று முருகனை வழிபடுவதும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும். குறிப்பாக சஷ்டி திதி நாட்களில் வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். சஷ்டி தினத்தன்று உங்கள் பகுதியில் உள்ள முருகன் ஆலயத்துக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடுங்கள். இந்த பரிககாரம் நிச்சயமாக திருமணத்தை கைகூடச் செய்யும்.

    முடிந்தவர்கள் தானதர்மங்கள் செய்யலாம். மேஷ ராசியில் பிறந்த பெண்கள் ஆலய வழிபாடு முடிந்த பிறகு திருநங்கைகளுக்கு உதவி செய்வது மிகவும் நல்லது. இதனால் குடும்பத்தில் செல்வ செழிப்பு உண்டாகும். திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை வழிபட விரும்புபவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்வது நல்லது. முன்பு திருச்செந்தூரில் கோவிலுக்கு சொந்தமான தங்கும் அறைகள் அதிகம் இருந்தன. தற்போது சீரமைப்பு பணிகள் காரணமாக அவை குறைந்து விட்டது. தனியார் விடுதிகளில்தான் தங்கும் நிலை உள்ளது. அதை கவனத்தில் கொண்டு முன்னேற்பாடு செய்து செல்லுங்கள்.

    வியாழக்கிழமை திருச்செந்தூரில் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. முருகப்பெருமானை வழிபட்ட பிறகு திருச்செந்தூர் ஆலய பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இன்னொரு விஷயத்தையும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். திருச்செந்தூருக்குச் சென்று கடலில் நீராடி முருகனை தரிசிக்கும் முன்பு அருகிலுள்ள மூவர் (மவுன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமி) சமாதிக்கு சென்று வணங்க வேண்டும். அதன்பிறகே முருகரை காண செல்ல வேண்டும்.

    பரிகாரம் செய்பவர்கள் மூவர் சமாதிக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். அங்கு விளக் கேற்றுவது நன்மை தரும். மூலவரை தரிசனம் செய்து விட்டு மறக் காமல் பஞ்சலிங்கத்தையும் வழிபடுங்கள். தரிசனம் முடித்து பிரகாரம் வந்து வலமிருந்து இடமாகச் சென்று மேதா குரு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும். சூரசம்ஹார போரில் இங்கிருந்து முருகருக்கு குரு ஆலோசனை வழங்கியதால் இது குருவின் இருப்பிடம் ஆகும். ஆலங்குடி போன்று குருப்பெயர்ச்சிக்கு இங்கும் பெரிய விஷேசமாக இருக்கும். இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ஆமை வாகனத்தில் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி அருள்புரிகின்றார்.

    செல்வம், ஆன்ம பலம் செழிக்க இவரை அவசியம் வணங்குதல் வேண்டும். பின் வெளிப்பிரகாரம் வந்து மீண்டும் வலமிருந்து இடமாகப் பிரகாரம் சுற்றினால் ராஜகோபுரம் நோக்கி விநாயகர் வீற்றிருப்பார் அவரை தரிசித்து கடந்து சென்றால் சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் அவரை தரிசித்து அருகில் சகஸ்ர லிங்கமாய் அருள்பாலிக்கும் சிவபெருமானை தரிசித்து விட்டு வந்த வழியே திரும்பி பிரகாரம் வர வேண்டும்.

    அங்கே பெருமாள் நாராயணன் சன்னதி உண்டு. பெருமாளை தரிசித்து விட்டு வெளியே வருகிற வழியில் கொடிமரம் அருகே முருகருக்கு நன்றி சொல்லி அருகில் கல்யாண விநாயகரை வணங்கி தரிசனத்தை முடிக்கலாம்!

    ஆதித்ய குருஜி
    Next Story
    ×