search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம்
    X
    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம்

    புனித தோமையாரிடம் திருமுழுக்கு பெற்றவர்கள் தங்கிய தலம்

    புனித தோமையாரிடம் திருமுழுக்கு பெற்ற சில கிறிஸ்தவ குடும்பங்கள் கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதியில் வில்லுக்குறி மாடத்தட்டுவிளை ஊரில் தங்கினார்கள்.
    குமரி மாவட்டம் வில்லுக்குறி மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா மற்றும் 104-வது ஆண்டுவிழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆலயம் மிகவும் பழமையான வரலாறு கொண்டது ஆகும்.

    புனித தோமையாரிடம் திருமுழுக்கு பெற்ற சில கிறிஸ்தவ குடும்பங்கள் கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதியில் வில்லுக்குறி மாடத்தட்டுவிளை ஊரில் தங்கினார்கள். இவர்கள் தான் மாடத்தட்டுவிளையில் குடியமர்த்தப்பட்ட முதல் கிறிஸ்தவ பூர்வீக குடிமக்கள் ஆவார்கள்.

    கல்வெட்டு

    இங்கு காணப்படும் விளக்குத்தூண் கல்வெட்டு இவர்களின் தொன்மைக்கு சான்றாகும். இந்த கல்தூண் இப்போது ஆலயத்தின் வடமேற்கு மூலையில் நிற்கிறது. இந்த கல்வெட்டில் காணப்படும் எழுத்துக்கள் கல்வெட்டின் தொன்மையை உறுதி செய்கிறது. ஆகவே, இங்கு சுமார் 652 ஆண்டுகளுக்கு முன்பே புனித செபஸ்தியார் ஆலயம் இருந்தது என்பதை உறுதியாக கூறலாம்.

    மாடத்தட்டுவிளை புனித ெசபஸ்தியார் ஆலயம் கோட்டார் பங்கின் கீழ் கொல்லம் இயேசு சபை கல்லூரியின் கண்காணிப்பில் செயல்படத் தொடங்கியது.

    கி.பி.1644-ம் ஆண்டு ரோம் இயேசு சபை அதிபருக்கு அருட்தந்தை ஆந்திரேயாஸ் லோப்பன் கோட்டார் பங்கில் அடங்கி உள்ள கிளை பங்குகள் பற்றி புள்ளி விவரம் அனுப்பி உள் ளார். அதில் மாடத்தட்டுவிளை மலைப்பகுதியில் உள்ளது என்றும், பாதுகாவலர் புனித செபஸ்தியார் என்றும், அப்போது 350 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்ற செய்தியை தருகிறார். வராப்புழை மறை மாவட்டத்தில் இருந்து கொல்லம் தனி மறைமாவட்டமாக செயல்படத் தொடங்கியதும் மாடத்தட்டுவிளை கோட்டார் பங்கில் இருந்து கி.பி. 1853-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி முதல் காரங்காடு பங்கின் கிளையானது.

    தனி பங்கானது

    பின்னர், கி.பி.1918-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி காரங்காட்டில் இருந்து பிரிந்து மாடத்தட்டுவிளை தனி பங்கானது. இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் புனித செபஸ்தியார் உருவச்சிலை ரோமாபுரியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். இந்த சிலை உலகம் முழுவதும் காணப்படும் பொதுவான தோற்றத்தில் இருந்து வேறுபட்டு இடது கை மார்பிலும், வலது கை உடலோடு ஒட்டிய நிலையிலும் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.

    கி.பி.1923-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி புனித செபஸ்தியாரின் உடலில் இருந்து சிறிய எலும்புத்துண்டை கொல்லம் ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர் அருளிக்கமாக மாடத்தட்டுவிளை ஆலயத்துக்கு வழங்கி பக்தர்களின் வணக்கத்திற்கு வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியாரின் திருநாளான ஜனவரி 20-ந் தேதியும், ஆலயத்தின் 9-ம் திருவிழாவின் போதும் பக்தர்களின் பார்வைக்கும், வணங்குவதற்காகவும் ஆலயத்தில் வைக்கப்பட்டு வருகிறது. திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித ெசபஸ்தியாரின் திருப்பண்டத்தை முத்தமிட்டு புனிதரின் ஆசி பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×