
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தேவாலயங்கள், வீடுகள் தோறும் அழகிய கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கடை வீதிகளில் புத்தாடைகள், கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள், கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள், பனிபடர்ந்த சூழலில் அழகிய வெண்பனி பூச்சுடன் உயர்ந்த கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் குடில்களை கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
புதுச்சேரியில் தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா தேவாலயம், மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி தேவாலயம் (சம்பா கோவில்), துய்மா வீதியில் உள்ள புனித மேரி தேவாலயம் (கப்ஸ் கோவில்), அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம், வில்லியனூர் லூர்து அன்னை ஆலயங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
இதையொட்டி தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த தேவாலயங்கள் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.