search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    முதல்தர கிரிக்கெட் - 129 ஆண்டு கால சாதனையை முறியடித்தது பெங்கால் அணி
    X

    அரை சதமடித்த பெங்கால் வீரர்

    முதல்தர கிரிக்கெட் - 129 ஆண்டு கால சாதனையை முறியடித்தது பெங்கால் அணி

    • ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் பெங்கால் அணி 773 குவித்து டிக்ளேர் செய்தது.
    • பெங்கால் அணி சார்பில் அந்த அணியில் 9 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர்.

    பெங்களூரு:

    ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால், ஜார்க்கண்ட் அணிகள் இடையிலான காலிறுதி ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

    முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 577 ரன்கள் எடுத்திருந்தது. மனோஜ் திவாரி 54 ரன்களுடனும், ஷாபாஸ் அகமது 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 773 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பெங்கால் அணியில் அபிஷேக் ராமன் (61 ரன்), கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (65), சுதிப் கராமி (186), அனுஸ்துப் மஜூம்தார் (117), மனோஜ் திவாரி (73), அபிஷேக் போரெல் (68), ஷபாஸ் அகமது (78) ரன்கள் எடுத்தனர். இதேபோல், சயான் மொண்டல் 53 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், முதல்தர கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு அணியில் 9 வீரர்கள் குறைந்தது 50 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்பு 1893-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணிக்கு எதிரான முதல்தர போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 8 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. இந்த 129 ஆண்டு கால சாதனையை பெங்கால் அணியினர் தகர்த்து புதிய சாதனை படைத்தனர்.

    மூன்றாம் நாள் முடிவில் ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.

    Next Story
    ×