search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அர்ஷ்தீப் சிங், சாகர் அபார பந்துவீச்சு: தென் ஆப்பிரிக்காவை 106 ரன்னில் கட்டுப்படுத்தியது இந்தியா

    • முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து திணறியது
    • பார்னெல் 24 ரன்களும், கேசவ் மகராஜ் 41 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர்.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

    டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 9 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன. கேப்டன் பவுமா, ரோசோ, டேவிட் மில்லர், ஸ்டப்ஸ் ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். 2வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    கேசவ் மகராஜ்

    இதைத்தொடர்ந்து சற்றுநேரம் தாக்குப்பிடித்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போக்கு காட்டிய மார்க்ராம், 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பார்னெல் 24 ரன்களும், கேசவ் மகராஜ் 41 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது. ரபாடா 7, நோர்ட்ஜே 2 ரன்கள் சேர்க்க, தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது.

    இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தீபக் சாகர், ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×