search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    குல்தீப் யாதவ் திருப்புமுனையை ஏற்படுத்தினார்- கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு
    X

    குல்தீப் யாதவ் திருப்புமுனையை ஏற்படுத்தினார்- கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு

    • நாங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேனை வைத்திருக்க விரும்புகிறோம்.
    • அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஒருவர் 5-வது வரிசையில் பேட்டிங் செய்யும் போது அது நம்பிக்கையை அளிக்கிறது.

    கொல்கத்தா:

    இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 39.4 ஓவரில் 215 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நுவானிது பெர்னாண்டோ 50 ரன்னும், குசல் மென்டிஸ் 34 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. 86 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது. அதன் பின் லோகேஷ் ராகுல் (64ரன்), ஹர்த்திக் பாண்ட்யா (36ரன்) ஜோடி பொறுப்புடன் விளையாடியது.

    இந்தியா 43.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    இந்த போட்டி நெருக்கமான விளையாட்டாக இருந்தது. இதுபோன்ற விளையாட்டுகள் நிறைய கற்று கொடுக்கிறது. லோகேஷ் ராகுல் நீண்ட காலமாக 5-வது வரிசையில் விளையாடி வருகிறார். அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஒருவர் 5-வது வரிசையில் பேட்டிங் செய்யும் போது அது நம்பிக்கையை அளிக்கிறது.

    தொடக்க வரிசையில் ஒரு இடது கை ஆட்டக்காரர் இருப்பது நன்றாக இருக்கும். ஆனால் வாய்ப்பு கொடுக்கப்பட்ட வீரர்கள் கடந்த ஒரு வருடத்தில் நிறைய ரன்களை எடுத்துள்ளனர். நாங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேனை வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் எங்கள் வலது கை பேட்ஸ்மேன்களின் தரம் எங்களுக்கு தெரியும்.

    3-வது ஒரு நாள் போட்டிக்கான ஆடுகளத்தை பார்ப்போம். மேலும் மற்றொரு ஒருநாள் தொடரும் வர உள்ளது. எனவே ஏதாவது மாற்றங்களை செய்ய வேண்டுமா என்று பார்ப்போம்.

    இப்போட்டியில் குல்தீப் யாதவ் திருப்புமுனையை ஏற்படுத்தினர். இந்த நேரத்தில் அவர் ஒரு பந்து வீச்சாளராக மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். இது அணிக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இலங்கை கேப்டன் ஷனகா கூறும் போது, இப்போட்டி எங்கள் கையில் இருந்தது. ஆனால் போதிய ரன்களை எடுக்க தவறி விட்டோம். ஆரம்பத்தில் 280 ரன்கள் பற்றி விவாதித்தோம். ஆனால் குல்தீப் யாதவ் நன்றாக பந்து வீசினார் என்றார்.

    இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.

    3-வது மற்றும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    Next Story
    ×