search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி - தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி - தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

    • டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா இழந்தது.
    • ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் ஆஸ்திரேலியா உள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    மும்பையில் நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமனில் இருக்கிறது.

    இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும். இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    2-வது போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. 117 ரன்னில் சுருண்டது பரிதாபமே. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேப்பாக்கத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளயைாட வேண்டும். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சில் வலுவாக திகழ்கிறது. கடந்த ஆட்டத்தில் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இதேபோல ஆடம் சம்பா, அபோட் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். டிராவிஸ் ஹெட், மிட்சேல் மார்ஷ் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தனர். கேப்டன் ஸ்டீவ் சுமித்தும், வார்னரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது.

    அதேநேரம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட்டை போலவே ஒருநாள் தொடரையும் வென்று விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர்நோக்கி உள்ளனர். இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டேடியம் நிரம்பி வழியும் என்று கருதப்படுகிறது.

    Next Story
    ×