search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மேகமூட்டமான சூழலை சாதகமாக்கப்போவது யார்? கொழும்பில் இன்று மதியம் இந்தியா- பாகிஸ்தான் பலப்பரீட்சை
    X

    மேகமூட்டமான சூழலை சாதகமாக்கப்போவது யார்? கொழும்பில் இன்று மதியம் இந்தியா- பாகிஸ்தான் பலப்பரீட்சை

    • லீக் ஆட்டம் மழையால் இந்தியா பேட்டிங் செய்ததுடன் முடிவடைந்தது
    • இன்று மழைக்கு 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 48.5 ஓவரில் 266 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மழை பாதிப்புக்கு மத்தியில் அரங்கேறிய அடுத்த லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை ஊதித்தள்ளியது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் (82 ரன்), ஹர்திக் பாண்ட்யா (87 ரன்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்கவில்லை. அவர்கள் இருவரும், 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் விக்கெட் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். அந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டும், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் மட்டும் விக்கெட் கைப்பற்றவில்லை. பீல்டிங் மெச்சும் வகையில் இருக்கவில்லை.

    இந்திய அணியின் ரன் குவிப்பு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும். தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமானதாகும்.

    அத்துடன் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கிலும் ஒருசேர முன்னேற்றம் காண வேண்டியதும் தேவையான ஒன்றாகும். குழந்தை பிறந்ததால் நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தை தவிர்த்து தனது மனைவியை அருகில் இருந்து கவனிக்க மும்பை வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியினருடன் இணைந்து இருக்கிறார்.

    இதேபோல் காயம் காரணமாக முதல் 2 ஆட்டங்களில் இடம் பெறாத விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் முழு உடல் தகுதியை எட்டி அணியினருடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். பும்ரா, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புவதால் முகமது ஷமி, இஷான் கிஷனுக்கு இடம் கிடைப்பது கடினம்தான்.

    உலக தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. குறிப்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சு எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை எளிதில் தோற்கடித்தது. இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டாலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கலக்கினர். சூப்பர் 4 சுற்றில் 193 ரன்னில் வங்காளதேசத்தை சுருட்டிய பாகிஸ்தான் அணி 39.3 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் பாபர் அசாம், இப்திகர் அகமது, இமாம் உல்-ஹக், முகமது ரிஸ்வானும் பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்பும் நல்ல நிலையில் உள்ளனர். மேகமூட்டமான சூழல் நிலவுவது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும்.

    இந்த போட்டி இந்தியாவின் பேட்டிங்குக்கும், பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கும் இடையேயான போராக வர்ணிக்கப்படுகிறது. மொத்தத்தில் நெருக்கடியை எந்த அணி சிறப்பாக கையாள்கிறதோ அந்த அணியின் கையே ஓங்கும்.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

    பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பல்லகெலேயில் மோதிய லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டம் ரத்தானதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×