என் மலர்
தரவரிசை
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா, பரணி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் விமர்சனம்.
சமூக அக்கறையுடன் இருக்கும் சசிகுமார், மக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களுக்கு குரல் கொடுக்கிறார். குறிப்பாக சாதியை கடுமையாக எதிர்கிறார். அஞ்சலி, பரணி மற்றும் பெரியவர் ஒருவர் சசிகுமாருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். சாதியற்ற இளம் தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சசிகுமாருக்கு தான் சார்ந்த சாதியிலிருந்து கடும் எதிர்ப்பு வருகிறது. இதனால் சொந்த தாய்மாமா உள்பட யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள்.

இவ்வாறு இருக்கையில், தன்னை தேடி வந்து யாராவது பெண் கொடுத்தாலே போதும் என்ற மனநிலையில் இருக்கிறார் சசிகுமார். இந்த சூழலில், சசிகுமார் சாதியைச் சேர்ந்த பெண்ணான அதுல்யா ரவியை அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்தன்று இரவு சசிகுமாருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சி என்ன? சாதியற்ற இளம் தலைமுறை என்ற சசிகுமாரின் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் சசிகுமார், நாடோடிகள் முதல் பாகத்தை போன்று அதே துறுதுறு நடிப்புடன் வருகிறார். சமுத்திரகனியின் கருத்துகளை பேச இவரைவிட யாரும் செட் ஆக மாட்டார்கள் என தோன்றும் அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். சசிகுமார்-அஞ்சலி இடையேயான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

செங்கொடி எனும் கதாபாத்திரத்தில் வரும் நாயகி அஞ்சலி, போராட்டத்தில் இறங்கி குரல் கொடுக்கும் தைரியமான பெண்ணாகவும், சசிகுமாருக்கு பக்கபலமாகவும் இருக்கிறார். சசிகுமாருக்கும் இவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.
இதேபோல், பரணியின் கதாபாத்திரத்தை எதார்த்தமாக வடிவமைத்துள்ள விதம் சிறப்பு. காதலர்களாக வரும் அதுல்யா ரவி, இசக்கி மற்றும் போலீசாக வரும் திருநங்கை நமீதா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

சாதி ஒழிப்பு என்பதை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்துள்ள சமுத்திரகனி, ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப் பற்றி விரிவாகப் பேசாமல், நாட்டில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் படத்தில் புகுத்தி இருப்பது பின்னடைவாக அமைகிறது.
ஜஸ்டின் பிரபாகரின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. இருப்பினும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கின்றது. ஏகாம்பரத்தின் நேர்த்தியான ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.
மொத்தத்தில் ‘நாடோடிகள் 2’ சாதிக்கு எதிரான சாட்டையடி.
வில் ஸ்மித், மார்டின் லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் படத்தின் விமர்சனம்.
வில் ஸ்மித்தும் மார்டினும் சேர்ந்து கடந்த பாகங்களில் போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல் மற்றும் அதில் ஈடுபட்ட நபர்களை கண்காணித்து கைது செய்து வந்தார்கள். தற்போது இவர்கள் ஓய்வு எடுக்கலாம் என்று முடிவு செய்து இருக்கும் நிலையில், முன் விரோதம் காரணமாக அர்மாண்டோ ஆர்ம்ஸ் வில் ஸ்மித்தை கொல்ல முயற்சிக்கிறான்.
இதில் வில் ஸ்மித் படுகாயம் அடைகிறார். சிகிச்சை முடிந்து வரும் வில் ஸ்மித், நண்பர் மார்டினுடன் இணைந்து தன்னை கொல்ல வந்ததன் பின்னணியையும் அவர்களை பிடிக்கவும் அழைக்கிறார். ஆனால், மார்டினோ வர மறுக்கிறார்.

இறுதியில் வில் ஸ்மித், மார்டினுடன் இணைந்து எதிரிகளை கண்டுபிடித்தாரா? அவர்களின் பின்னணி என்ன? என்பது படத்தின் மீதிக்கதை.
ஏற்கனவே வெளியான முந்தைய பாகங்களை விட இப்படத்தில் ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் கவனம் செலுத்தி ரசிக்கும் படி இப்படத்தை கொடுத்திருக்கிறார்கள். வில் ஸ்மித், மார்டின் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இம்முறை ஆக்ஷனை விட காமெடியில் அசத்தி இருக்கிறார்கள்.

தற்போது பிரபலமான வசனங்களை சேர்த்து தமிழில் டப்பிங் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு. ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார்கள் இயக்குனர்கள் அடில் எல் அர்பி மற்றும் பிலால் பலாஹ். ரோப்ரெச் ஹேவர்ட் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. லார்ன் பால்ஃப் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்’ ஆக்ஷன் அதிரடி.
விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டகால்டி’ படத்தின் விமர்சனம்.
மும்பையில் சின்ன திருட்டு செய்து வருகிறார் நாயகன் சந்தானம். இந்நிலையில், தொழிலதிபராக இருக்கும் ஒருவர், தனக்கு தோன்றிய ஒரு பெண் உருவத்தை வரைந்து, அந்த பெண்ணை எங்கு இருந்தாலும் கொண்டு வர சொல்லி ஊரில் இருக்கும் ரவுடிகளுக்கு உத்தரவிடுகிறார்.
அந்த பெண்ணின் புகைப்படம் பெரிய ரவுடியாக இருக்கும் ராதாரவியிடம் வருகிறது. ஒரு பிரச்சனையில் ராதாரவி, சந்தானத்தை கொல்ல நினைக்கிறார். அப்போது இதிலிருந்து தப்பிக்க ராதாரவியிடம் அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் எனக்கு தெரியும் என்று சந்தானம் கூறுகிறார்.

இந்த பெண்ணை குறிப்பிட்ட நாளில் என்னிடம் ஒப்படைத்தால் உன்னை கொல்லாமல் விட்டுவிடுகிறேன். மேலும் பணம் தருவதாகவும் ராதாரவி கூறுகிறார். இதையேற்ற சந்தானம், தெரியாத பெண்ணை கண்டுபிடித்தாரா? ராதாரவியிடம் ஒப்படைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். டைமிங் காமெடி, ஒன் லைன் காமெடியென கலகலப்பூட்டி இருக்கிறார். முழு படத்தையும் தாங்கி செல்கிறார் சந்தானம். இவருடன் கூட்டணி அமைத்திருக்கும் யோகிபாபுவின் காமெடியும் பெரியளவிற்கு கைகொடுத்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா சென், கொடுத்த வேலையை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாக செய்திருக்கிறார். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நாயகி ரித்திகாவை, ஏமாற்றி அழைத்து வரும் காட்சி ரசிக்க வைக்கிறது. அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ராதாரவி.

வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் விஜய் ஆனந்த், திரைக்கதையில் இன்னும் காமெடி காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். சந்தானம் - யோகி பாபு கூட்டணியை சிறப்பாக கையாண்டிருக்கிறார். தீபக்குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. விஜய் நரேனின் இசையும், பின்னணி இசையையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘டகால்டி’ காமெடி கலாட்டா.
ராஜா கஜினி இயக்கத்தில் ரோஷன் உதயகுமார், கோமலி, எரா, ரவிஷங்கர், பிரியங்கா நடிப்பில் வெளியாகி இருக்கும் உற்றான் படத்தின் விமர்சனம்.
ரோஷன் உதயகுமார், கானா சுதாகர் இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள். கானா சுதாகரின் அக்கா பிரியங்கா அதே கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். ரோஷன் உதயகுமார், கானா சுதாகர் இருவரையும் பிரியங்கா தனது மகன்கள் போல பாதுகாத்து வளர்க்கிறார்.
எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் நாயகன், கல்லூரி மாணவர் தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெறுகிறார். இதனால் ஏற்படும் பகையில், ரோஷனுக்கு எதிரிகள் முளைக்கிறார்கள். ஊர் பெரிய மனிதராக வரும் வேல.ராமமூர்த்திக்கு ரோஷனை பிடிக்காமல் போகிறது. அந்த பகுதியில் பெரிய ஆளாக வலம் வரும் ரவிஷங்கர் ரோஷனை பாதுகாக்கிறார்.

இதற்கிடையே ரோஷன் படிக்கும் கல்லூரியை இருபாலருக்குமான கல்லூரியாக மாற்றுகிறார்கள். அங்கு படிக்க வரும் நாயகி கோமலி மீது ரோஷன் காதல் வயப்படுகிறார். கோமலியின் தந்தை மதுசூதனன் இதனை எதிர்க்கிறார். இந்த பகைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ரோஷனை துரத்துகிறது. அதை நாயகன் எவ்வாறு சமாளிக்கிறார். அவரது காதல் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.
நாயகன் ரோஷன் உதயகுமார் தமிழுக்கு நல்ல அறிமுகம். டான்ஸ், சண்டை, காதல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அறிமுக படத்திலேயே நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார். நாயகி கோமலி அழகு பதுமையுடன் இருக்கிறார். கல்லூரி மாணவி வேடத்திற்கு அழகாக பொருந்தி இருக்கிறார்.

ரோஷனின் நண்பர்களாக வரும் கானா சுதாகர், கோதண்டம், மதுமிதா உள்ளிட்டோரும் வில்லன்களாக வரும் வேல.ராமமூர்த்தி, மதுசூதனன், காதல் சரவணன் உள்ளிட்டோரும் நேர்த்தியாக நடித்துள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கு உதவும் கதாபாத்திரத்தில் ரவிஷங்கர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் பிரியங்காவும் கண்களாலேயே தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
கல்லூரியை களமாக வைத்து காதலால் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ராஜா கஜினி சொல்லி இருக்கிறார். முதல் பாதியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக படத்தை கொண்டு போனவர், இரண்டாம் பாதியில் சென்டிமெண்ட் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க படம் வேகம் எடுக்கிறது.

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. முதல் பாதியில் வரும் கல்லூரி பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. ஹாலிக் பிரபுவின் ஒளிப்பதிவு கச்சிதம்.
மொத்தத்தில் ‘உற்றான்’ கல்லூரி அரசியல்.
அசோக் தியாகராஜன் இயக்கத்தில் அபி சரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மாயநதி’ படத்தின் விமர்சனம்.
சிறு வயதிலேயே தாயை இழந்த நாயகி வெண்பா, தந்தை ஆடுகளம் நரேன் அரவணைப்பில் வளர்கிறார். நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் வெண்பா. பிளஸ் 2 படிக்கும் வெண்பாவிற்கு ஆட்டோ டிரைவராக வருகிறார் நாயகன் அபி சரவணன். இந்நிலையில், காதல் பிரச்சனையில் ஒருவர் வெண்பா மீது ஆசிட் வீச வருகிறார். இதிலிருந்து வெண்பாவை அபி சரவணன் காப்பாற்ற, இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.

இந்த காதல் வெண்பாவின் படிப்பிற்கு தடையாக அமைகிறது. பல காதல் தோல்விகளை சந்தித்த அபி சரவணன் இந்த காதலாவது நிலைக்க வேண்டும் என்பதற்காக வெண்பாவை உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இறுதியில் வெண்பாவின் டாக்டர் கனவு நிறைவேறியதா? அபி சரவணன், வெண்பா இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? இவர்களின் காதல் விஷயம் வெண்பாவின் தந்தை ஆடுகளம் நரேனுக்கு தெரிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அபி சரவணன், ஹீரோவாக இருந்தாலும் நாயகியின் வாழ்க்கைக்கு வில்லனாக அமைந்திருக்கிறார். ஆட்டோ டிரைவராக நடிப்பில் கவனிக்க வைக்கிறார். படத்திற்கு பெரிய பலம் நாயகி வெண்பாவின் நடிப்பு. முழு கதையையும் தன் தோளில் தாங்கி செல்கிறார். அபி சரவணனின் காதல், அப்பாவின் பாசம், டாக்டராக வேண்டும் என்ற கனவு என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
அபி சரவணனின் நண்பராக வரும் அப்புக்குட்டி, வெண்பாவின் தந்தையாக வரும் ஆடுகளம் நரேன் ஆகியோர் அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்கள்.

மருத்துவரான அசோக் தியாகராஜன், சினிமா மீது உள்ள காதலால் இப்படத்தை இயக்கி இருக்கிறார். படிப்பில் சிறந்து விளங்கும் பெண்ணின் வாழ்க்கையில் காதல் நுழைந்தால் அவர்களின் எதிர்காலம் எப்படி செல்லும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
பவதாரிணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஸ்ரீனிவாசின் ஒளிப்பதிவோடு சேர்ந்து பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மாயநதி’ தெளிந்த நீரோட்டம்.
யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, யோகி பாபு, பாண்டியராஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணா’ படத்தின் விமர்சனம்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் வீரமாக செயல்பட்டவர்களை போலீசாக்கி அவர்களுக்கு டாணா என்று பெயர் வைக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு தலைமுறையாக போலீசாகி வருகிறார்கள். இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தவர் பாண்டியராஜன். இவர் உயரம் குறைவாக இருப்பதால் போலீசுக்கு தேர்வாகாமல் போகிறார். இதனால் தன்னுடைய மகன் வைபவை போலீசாக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால், அவருக்கு உணர்ச்சி வசப்பட்டாலோ, கோபப்பட்டாலோ, சந்தோஷப்பட்டாலோ அவரது குரல் பெண் குரலாக மாறிவிடுவதால், போலீசாகாமல் இருக்கிறார். இந்நிலையில், இவர்களின் குலதெய்வம் கோவிலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதற்காக போலீசாக வேண்டும் என்று வைபவ் முடிவு செய்கிறார்.

இவரது போலீஸ் முயற்சிக்கு தடங்கல் வருகிறது. அது என்ன தடங்கல்? பிரச்சனையை சமாளித்து வைபவ் போலீஸ் ஆனாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் வைபவ், காமெடி, ஆக்ஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். தனக்கே உரிய இளமை துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். யோகிபாபுவின் காமெடி படத்திற்கு பலம். வைபவ் - யோகிபாபு கூட்டணி சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.
வைபவிற்கு அப்பாவாக வரும் பாண்டியராஜன், அம்மா உமா ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். சைலண்ட் கில்லராக வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ஹரிஷ் பெராடி.

போலீஸ் கதையை எடுத்து, அதில் பாரம்பரியம், காதல், காமெடி என்று கொடுத்திருக்கிறார் இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி. குறிப்பாக இதில் டேட்டா பேஸ் மற்றும் டேட்டா எக்ஸ்சேஞ் என தனிமனித ரகசிய தகவல்களை திருடுதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். ஒரு சில இடங்களில் தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சிவாவின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘டாணா’ காமெடி கலாட்டா.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் இளையராஜா இசையமைப்பில் வெளியாகி இருக்கும் சைக்கோ படத்தின் விமர்சனம்.
கோவையில் பார்வையற்றவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவை ஒருதலையாக காதலித்து வருகிறார். இதே ஊரில் பெண்கள் சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது சைக்கோ கொலையாளியின் கைவரிசையாக இருக்கலாம் என தெரியவந்தது.
கொலையாளியை போலீசார் தேடி வரும் நிலையில், நாயகி அதிதி ராவ் அதே பாணியில் கடத்தப்படுகிறார். மற்ற பெண்களை கொலை செய்த நபர்தான் அதிதியையும் கடத்தியிருப்பது உதயநிதிக்கு தெரிய வருகிறது.

இறுதியில் சைக்கோ கொலையாளியிடம் இருந்து அதிதி ராவை உதயநிதி உயிருடன் மீட்டாரா? சைக்கோ கொலையாளி யார்? எதற்காக பெண்களை கொலை செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் உதயநிதி, தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பார்வையற்றவராக இவரின் நடிப்பு கவனிக்க வைத்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் அதிதி ராவ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சக்கர நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டு நடிப்பால் மிரட்டி இருக்கிறார் நித்யா மேனன். துணிச்சலான கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். உதயநிதிக்கு கண்ணாக அவருடனே பயணித்திருக்கும் சிங்கம் புலியின் நடிப்பு சிறப்பு.

தனக்கே உரிய கிரைம், திரில்லர் பாணியில் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், அனைவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுத்து, சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். வழக்கமான மிஷ்கின் படம் என்றாலும் மற்ற படங்களை விட சுவாரஸ்யம் குறைவு என்றே சொல்லலாம். அடுத்தடுத்து வரும் காட்சிகளை யூகிக்க முடிகிறது. அடுத்து என்ன நடக்க போகிறது என்றும் முன்பே தெரிந்து விடுவதால் அதிகமாக ரசிக்க முடியவில்லை.
படத்திற்கு பலம் இளையராஜாவின் இசை. பாடல் மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. அதுபோல் தன்வீர் மிரின் ஒளிப்பதிவும் அருமை.
மொத்தத்தில் ‘சைக்கோ’ திரில்லிங் குறைவு.
சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சரயு, நந்தனா, சிருஷ்டி டாங்கே, இர்பான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ராஜாவுக்கு செக் படத்தின் விமர்சனம்.
சேரன் - சரயு தம்பதி மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நந்தனா என்ற மகள் இருக்கிறார். போலீஸ் அதிகாரியான சேரனுக்கு தூங்கும் வியாதி இருக்கிறது. மகள் நந்தனாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சேரனிடம் ஒப்புதல் கேட்கிறார் மனைவி சரயு. ஆனால் சேரன், தனது மகள் 10 நாட்கள் தன்னுடைய வீட்டில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்.

இதற்கு சம்மதம் தெரிவிக்கும் சரயு, மகளை சேரனின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். 10 நாட்கள் சந்தோஷமாக தந்தை வீட்டில் வசிக்கும் நந்தனா, கடைசி நாளன்று கடத்தப்படுகிறார். சேரன் மீதான கோபத்தில், அவரது மகளை வில்லன் இர்பான் கடத்திவிடுகிறான். மகள் சீரழிக்கப்படுவதை வீடியோ லைவ்வில் பார்க்கவேண்டும் என்று சேரனை, வில்லன் டார்ச்சர் செய்கிறான். தூங்கும் வியாதியை மீறி வில்லனிடம் இருந்து மகளை சேரன் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அன்பான மகளை காப்பாற்றப் போராடும் தந்தையின் கதை தான் இது. சேரன், பாசமிகு தந்தையாக நடித்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சேரனுக்கு ஜோடி மலையாள ஹீரோயின் தான் என முடிவு செய்துவிட்டார்கள் போல இருக்கிறது. மலையாள நடிகை சரயு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
நடிகை சிருஷ்டி டாங்கேவிற்கு சிறிய கதாபாத்திரம் தான். சேரனின் மகளாக நடித்துள்ள நந்தனா, கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இர்பான் வில்லத்தனத்தால் மிரட்டுகிறார்.

இயக்குனர் சாய் ராஜ்குமார், திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்துள்ள விதம் சிறப்பு. இருப்பினும் மகள் சீரழிக்கப்படுவதை வீடியோ லைவ்வில் தந்தையை வில்லன் பார்க்க வைப்பது போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். மற்றபடி பெரும் பொருட்செலவு இல்லாமல், சிம்பிளான கதைகளத்தில் படமாக்கியிருக்கிறார்.
ஓர் இரவில் நடக்கும் கதை என்பதால், எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. வினோத் எஜமான்யாவின் இசையில் பாடல்கள் எதுவும் எடுபடாவிட்டாலும், பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார்.
மொத்தத்தில் ”ராஜாவுக்கு செக்” பாசப் போராட்டம்.
சுசி ஈஸ்வர் இயக்கத்தில், சஞ்சய், மேக்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'தேடு' படத்தின் விமர்சனம்.
நாயகன் சஞ்சயும், நாயகி மேக்னாவும் காதலித்து வருகிறார். இவர்களின் காதல் மேக்னாவின் வளர்ப்பு தந்தைக்கு பிடிக்காமல் போகிறது. இதனால், சஞ்சயை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார். இதே சமயம், மேக்னாவை மற்றொரு இளைஞர் காதலிக்கிறார். அவரின் காதலை ஏற்காததால் மேக்னாவை கடத்த திட்டமிடுகிறார்.
இறுதியில் சஞ்சய், மேக்னா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சஞ்சயை மேக்னாவின் வளர்ப்பு தந்தை தீர்த்து கட்டினாரா? மேக்னாவை ஒருதலையாக காதலிப்பவரின் நிலைமை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சஞ்சய், தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மேக்னா ஏற்கனவே படங்களில் நடித்திருப்பதால், இதில் கொஞ்சம் ஆறுதலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வில்லனாகவும், நாயகியின் வளர்ப்பு தந்தையாகவும் வரும் சிவகாசி முருகேசன், பிரபாகரன், ராணி, கமலா, சுவாமி தாஸ், காமராஜ், கல்கி ஜெகவீரபாண்டியன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கும் சுசி.ஈஸ்வர், அதில் செல்பி மோகத்தால் ஏற்படும் விளைவுகளையும், ஒரு தலை காதலால் ஏற்படும் விளைவுகளையும் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். திரைக்கதை தெளிவு இல்லாததால் அது பெரியதாக எடுபட வில்லை.

டி.ஜே.கோபிநாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் கவனம் செலுத்தி இருக்கலாம். சபரியின் ஒளிப்பதிவு பெரியதாக கவரவில்லை.
மொத்தத்தில் ‘தேடு’ தேட முடியவில்லை.
ஸ்டீபன் ககனின் இயக்கத்தில் ராபர்ட் டவ்னி ஜூனியர், மரியோன் கோடில்லார்ட் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டூ லிட்டில்’ படத்தின் விமர்சனம்.
மிருகங்களிடம் பேசும் அபூர்வ திறமையை கொண்ட டாக்டர் டூ லிட்டில், தன்னுடைய மனைவியின் மரணத்திற்கு பின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இதனால் வெளி உலகத்தோடு தொடர்பில்லாமல் தன்னுடைய பிரம்மாண்டமான அரண்மனையில் மிருகங்களுடன் முடங்கி கிடக்கிறார். திடீரென நாட்டுடைய ராணி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவரை காப்பாற்ற வருமாறு டாக்டர் டூ லிட்டிலிற்கு அழைப்பு வருகிறது.

பின்னர் ராணியை பரிசோதனை செய்யும் டாக்டர் டூ லிட்டில், அவருடைய உடலில் விஷம் கலந்திருப்பதை அறிகிறார். ஒரு அபூர்வ பழத்தின் மூலம் தான் ராணியை காப்பாற்ற முடியும் என்பதால், அந்த பழத்தை தேடி டாக்டர் டூ லிட்டில், அவருடன் அரண்மனையில் இருக்கும் மிருகங்களுடன் செல்கிறார். இந்த பயணத்தின் போது அவருக்கு அந்த அபூர்வ பழம் கிடைத்ததா? இல்லையா? ராணிக்கு விஷம் வைத்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ராபர்ட் டவ்னி ஜூனியர், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். இதனால் டூ லிட்டில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் இப்படத்தில் அவரது நடிப்பு எதிர்பார்த்த அளவு இல்லாதது ஏமாற்றம் தான். காமெடி காட்சிகள் ஓரிரு இடங்களில் ஒர்க் அவுட் ஆனாலும், பெரும்பாலான இடங்களில் எடுபடாமல் போனது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ். படம் பார்ப்பவர்களுக்கு நம்ம அயர்ன் மேன் ஏன் இப்படி பண்ணினார்னு கேட்கும் அளவுக்கு அமைந்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் படம் பலமாக இருந்தாலும், ஸ்டீபன் ககனின் மோசமான திரைக்கதை சோர்வை ஏற்படுத்துகிறது. மேலும் கதாபாத்திரங்களின் தேர்விலும் கவனம் செலுத்தி இருக்கலாம். இப்படத்தில் வரும் டுவிஸ்ட்டுகளும் பார்த்து பழகியது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. டேனி எல்ஃப்மேனின் பின்னணி இசையும், குயிலெர்மோ நவாரோவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கின்றன.
மொத்தத்தில் ’டூ லிட்டில்’ ஏமாற்றம்.
யூன் வூ பிங் இயக்கத்தில் டோனி ஜா, மேக்ஸ் ஜாங் நடிப்பில் அதிரடி சண்டைக்காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் மாஸ்டர் இசட்: ஐபி மேன் லெகசி படத்தின் விமர்சனம்.
தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் மேக்ஸ் ஜாங், ஒருவரிடம் ஏற்பட்ட தோல்வியால் தற்காப்பு கலையை விட்டுவிட்டு ஒரு கடை வைத்துக் கொண்டு மகனுடன் வாழ்ந்து வருகிறார். இனி யாரிடமும் சண்டை போடக் கூடாது என்று இருக்கும் மேக்ஸ் ஜாங், ஒருநாள் தன் மகனுக்காக பரிசு வாங்கிக் கொண்டு செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு கேங்கிடம் சண்டை ஏற்படுகிறது.

இந்த சண்டையில் அவர்களை அடித்து நொறுக்குகிறார் மேக்ஸ் ஜாங். இதன்பின் கோபமடையும் அந்த கேங், மேக்ஸ் ஜாங்கை பழிவாங்க நினைக்கிறார்கள். மேலும் மேக்ஸ் ஜாங்கிற்கு பல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இறுதியில் மேக்ஸ் ஜாங் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? யாரிடமும் சண்டை போடக்கூடாது என்ற முடிவு அவர் மாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மேக்ஸ் ஜாங், சண்டைக்காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகனுக்காக சண்டைப்போடுவது, தயங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். வில்லனாக வரும் பட்டிஸ்டா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் டோனி ஜா.

தற்காப்பு கலையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் யூன் வூ பிங். ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் பிரம்மாண்டமாகவும் ரசிக்கும் படியாகவும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக மேக்ஸ் ஜாங் - டோனி ஜா, மேக்ஸ் ஜாங் - பட்டிஸ்டா சண்டைக்காட்சிகள் சிறப்பு. டே டையின் இசையும், டேவிட்டின் ஒளிப்பதிவும் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மாஸ்டர் இசட்: ஐபி மேன் லெகசி’ அதிரடி.
துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்சாடா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பட்டாஸ்’ படத்தின் விமர்சனம்.
குப்பத்து பகுதியில் வாழ்ந்து வரும் நாயகன் தனுஷ், சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார். அதே பகுதியில் இருக்கும் நாயகி மெஹ்ரின் பிர்சாடா அதிகமாக சம்பாதிப்பதால் அந்த ஏரியாவையே அராத்து பண்ணி வருகிறார். இவருடைய ஆட்டத்தை அடக்க திட்டம் போடும் தனுஷ், நவீன் சந்திரா நடத்தும் கிக் பாக்ஸிங் கிளப்பில் மெஹ்ரின் பிர்சாடா வேலை செய்வதை அறிந்துக் கொள்கிறார்.
கிக் பாக்ஸிங் கிளப்பிற்கு சென்று அங்கு இருக்கும் பொருட்களை திருடி மெஹ்ரினை சிக்க வைக்கிறார் தனுஷ். இதனால் மெஹ்ரினின் வேலைக்கு ஆபத்து வருகிறது. ஒரு கட்டத்தில் தனுஷிடம் கிக் பாக்ஸிங்கில் இருக்கும் சர்ட்டிபிகேட் ஒன்றை எடுத்து வரும்படி மெஹ்ரின் உதவி கேட்க, அவரும் அங்கு செல்கிறார்.

இதே சமயம் ஜெயில் இருந்து வரும் சினேகா, கிக் பாக்ஸிங் கிளப்பின் உரிமையாளர் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார். அப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதிலிருந்து சினேகாவை காப்பாற்றுகிறார் தனுஷ். மேலும் தனுஷை பார்த்தவுடன் சினேகா அதிர்ச்சியடைகிறார்.
இறுதியில் சினேகா ஏன் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார். தனுஷை கண்டு சினேகா அதிர்ச்சியடைய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் தனுஷ், இரட்டை வேடத்தில் அசத்தி இருக்கிறார். தந்தை, மகன் என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். முதல் பாதியில் புள்ளிங்கோ ஸ்டைலில் துறுதுறு இளைஞனாகவும், பிற்பாதியில் அடிமுறை என்னும் தற்காப்பு கலை சொல்லி தரும் ஆசானாகவும் பளிச்சிடுகிறார். குறிப்பாக முதற்பாதியில் காமெடியில் கலக்கி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிக மெனகெட்டிருக்கிறார்.
சினேகாவிற்கு படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமில்லாமல் சண்டைக் காட்சியிலும் கவனிக்க வைத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் மெஹ்ரின் பிர்சாடா அழகு பதுமையாக வருகிறார். கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். முனிஸ்காந்த் மற்றும் தனுஷின் நண்பராக வருபவரின் காமெடி கைக்கொடுத்திருக்கிறது. அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் நாசர். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் நவீன் சந்திரா.

அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில் குமார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். நம்மிடம் இருந்து தோன்றிய கலைகள் பிரிந்து வேறொரு பெயரில் உருவாகி பிரபலமாகி இருக்கிறது. நம்மிடம் இருக்கும் கலையை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். இத்துடன் திரைக்கதைக்கு தேவையான காதல், காமெடி, ஆக்ஷன் கலந்து ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.
விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் ஓம் பிரகாஷின் கேமரா சிறப்பாக விளையாடி இருக்கிறது.
மொத்தத்தில் ‘பட்டாஸ்’ சிறப்பான வெடி. ரேட்டிங் 3/5.






