என் மலர்tooltip icon

    தரவரிசை

    வைபவ், வாணி போஜன், வெங்கட் பிரபு, ஈஸ்வரி ராவ், பூர்ணா, நடிப்பில் வெளியாகி இருக்கும் லாக்கப் படத்தின் விமர்சனம்.
    இன்ஸ்பெக்டரான மைம் கோபி கழுத்தறுத்து கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க தற்காலிகமாக போலீஸ் அதிகாரி ஈஸ்வரி ராவ் நியமிக்கப்படுகிறார். அந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வெங்கட் பிரபு, கொலைகாரன் என ஏற்கனவே ஒருவரை பிடித்து வைத்திருக்கிறார். இந்த வழக்கை ஈஸ்வரி ராவ் விசாரிக்கும் நேரத்தில், பூர்ணா தற்கொலை செய்ததாக சடலம் கிடைக்கிறது. 

    மைம் கோபி கொலைக்கும், பூர்ணாவின் இறப்புக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுகிறார் ஈஸ்வரி ராவ். இறுதியில் மைம் கோபியை கொலை செய்தது யார்? பூர்ணா எப்படி இறந்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

    லாக்கப் விமர்சனம்

    படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மைம் கோபியின் எதார்த்தம், ஈஸ்வரி ராவ்வின் திமிரான நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. ஒருநாள் வேலை பார்த்தாலும் என் வேலையை ஒழுங்கா பார்ப்பேன் என்று கெத்து காட்டியிருக்கிறார் ஈஸ்வரி ராவ். சப் இன்ஸ்பெக்டராக வரும் வெங்கட் பிரபு வில்லத்தனத்தில் கவர்ந்திருக்கிறார். கான்ஸ்டேபிளாக நடித்திருக்கும் வைபவ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். வாணி போஜனுக்கு அதிகமாக வேலை இல்லை. வீட்டு வேலைக்காரியாக வரும் பூர்ணா, அலட்டல் இல்லாத நடிப்பு. 

    லாக்கப் விமர்சனம்

    இரண்டு மரணங்கள் தொடர்பான மர்மக் கதையை சில திருப்பங்களோடு, 'கொலையை யார் செய்தது' என்ற சஸ்பென்ஸை கடைசிவரை நீட்டித்து, படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ். முதல் படம் என்று தெரியாதளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார். படத்தில், நிரபராதிய கொல்றதுக்கு நாங்க ஓண்ணும் போலீஸ் இல்லையே?, என்ற ஒரு சில வசனங்கள் பலம் கூட்டியிருக்கிறது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை.

    லாக்கப் விமர்சனம்

    இசையமைப்பாளர் ஆரோல் கரோலியின் பின்னணி இசையும், சந்தானம் சேகரின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘லாக்கப்’ விறுவிறுப்பு.
    பிஜி.முத்தையா தயாரிப்பில், எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டேனி’ படத்தின் விமர்சனம்.
    தஞ்சாவூரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி, அம்மா, தங்கையுடன் வாழ்த்து வருகிறார். இந்நிலையில், மர்மான முறையில் ஒரு பெண் தீ வைத்து கொலை செய்யப்படுகிறார். பெண்ணின் கணவர்தான் கொலை செய்திருக்க கூடும் என்று எல்லோரும் நம்பும் நிலையில், போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் குற்றாவாளிகளை திறமையாக கண்டுபிடிக்கும் டேனியை (நாய்) வைத்து கணவர் கொலை செய்ய வில்லை என்று கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி.

    கொலையாளிகளை பற்றி தீவிரமாக விசாரிக்கும் நிலையில், வரலட்சுமியின் தங்கை அனிதா சம்பத்தும் அதேபோல் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வரலட்சுமிக்கு கிடைக்கிறது. இறுதியில் அந்த கொலைகளை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? வரலட்சுமி எப்படி கண்டு பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    டேனி விமர்சனம்

    படத்தின் மொத்த பளுவையும் தூக்கி சுமக்கிறார் நடிகை வரலட்சுமி. மிடுக்கான தோற்றத்துடனும் ரப்பான முகத்துடனும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். தங்கை மீது பாசம், கொலையாலிகளை பிடிக்க வேண்டும் என்ற வெறி என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.

    களவாணி 2 படத்தில் நடித்த துரை சுதாகர் இந்த படத்தில் போலீசாக வருகிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் வினோத் கிஷன் இதற்கும் முன் இது போன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் பெரியதாக தெரியவில்லை.

    டேனி விமர்சனம்

    சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிகிறார் அனிதா சம்பத். வேலா ராமமூர்த்தி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். துப்பறிவாளனாக வரும் டேனி சிறப்பு. இன்னும் நிறைய காட்சிகள் டேனிக்கு வைத்திருக்கலாம். 

    கிரைம் திரில்லர் கதையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் எல்.சி.சந்தானமூர்த்தி. தேவையற்ற காட்சிகளை வைக்காமல் 1 மணி நேரம் 35 நிமிடத்தில் படத்தை முடித்திருப்பது சிறப்பு. கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். 

    டேனி விமர்சனம்

    சந்தோஷ் தயாநிதி, சாய் பாஸ்கர் இசையில் பாடல்கள் கதையோடு ஒன்றி பயணிக்கிறது. பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவை ரசிக்கலாம். 

    மொத்தத்தில் ‘டேனி’ மிதமான வேகம்.
    விஜய முருகன் இயக்கத்தில் யோகிபாபு, ராஷ்மி கோபிநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் காக்டெய்ல் படத்தின் முன்னோட்டம்.
    சோழர் காலத்து ஐம்பொன் முருகன் சிலை அரசு அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போகிறது. மைம் கோபி இந்த சிலையை திருடி வைத்திருக்கிறார். சில தினங்களுக்கு பிறகு போலீஸ் அதை கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையான சிலை கிடையாது. இவ்வாறு செய்தி வெளியிட்டால், காணாமல் போன சிலை ஏதாவது ஒரு வகையில் கிடைக்கும் என திட்டமிட்டு போலீஸ் இவ்வாறு செய்கின்றனர்.  

    இது ஒருபுறம் இருக்க, சென்னையில் சலூன் கடை வைத்திருக்கும் யோகிபாபுவுக்கு மூன்று நண்பர்கள் உள்ளனர். அதில் அன்பு என்பவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. இதற்காக யோகிபாபு உள்ளிட்ட நண்பர்களுக்கு, அன்பு, வீட்டில் பார்ட்டி கொடுக்கிறார். அப்போது, அவர்கள் அனைவரும் என்ன நடந்தது என தெரியாத அளவுக்கு குடிக்கின்றனர். மறுநாள் எழுந்து பார்த்தால் அங்கு ஒரு பெண் இறந்த நிலையில் கிடக்கிறார்.  

    காக்டெய்ல்

    இதைப்பார்த்து ஷாக்கான யோகிபாபுவும் அவரது நண்பர்களும், அந்த பிணத்தை மறைக்க திட்டமிடுகின்றனர். பின்னர் அந்த பெண் யார்?, அவர் எப்படி இங்கே வந்தார்?, அவரை யார் கொன்றது?, முருகன் சிலை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    காமெடி வேடங்களில் கலக்கி வந்த யோகிபாபு, இந்த படத்தில் கொஞ்சம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார். இவரது டைமிங் காமெடி ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் மொக்கை காமெடி எடுபடவில்லை. நாயகி ராஷ்மி கோபிநாத் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மற்ற கதாபாத்திரங்கள் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார்கள். 

    காக்டெய்ல்

    கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பிரபலங்களை பயன்படுத்தியது நல்ல ஐடியா. இவர்கள் இருப்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பது போன்று உணர்வு வராமல் இருப்பதற்காக இயக்குனர் மெனக்கெட்டிருக்கிறார். 

    காமெடியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் விஜய முருகன், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். கதாபாத்திர தேர்வு, அவர்களை கையாண்ட விதம் ஆகியவற்றை பாராட்டலாம். சாய் பாஸ்கரின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ரவீனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது. 

    மொத்தத்தில் 'காக்டெய்ல்' மைல்டான போதை.
    அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெண்குயின் படத்தின் விமர்சனம்.
    நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான ரிதம் (கீர்த்தி சுரேஷ்), கணவன் கவுதமுடன் (மாதம்பட்டி ரங்கராஜ்) வாழ்ந்து வருகிறார். ஆனால் அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி அஜய் (அத்வைத்) என்றொரு குழந்தை உண்டு. அந்தக் குழந்தை சிறுவயதில் காணாமல் போனதால், முந்தைய கணவனுடன் (லிங்கா) விவாகரத்து செய்துவிட்டு, கவுதமை திருமணம் செய்துகொண்டிருக்கிறாள் ரிதம். 

    இந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு, காணாமல் போன குழந்தை அஜய் கிடைத்துவிடுகிறேன். ஆனால், அவன் எதையும் பேச முடியாத நிலையில் இருக்கிறான். அஜய்யை கடத்தியவன் முகமூடி அணிந்தவாறு வந்து மீண்டும், மீண்டும் மிரட்டுகிறான். அந்தக் கடத்தல்காரன் யார், அவன் எதற்காக குழந்தையைக் கடத்துகிறான் என்பதை ரிதம் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பெண்குயின்

    ரிதம் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ். காணாமல் போன தனது குழந்தை மீண்டு வருவான் என்ற நம்பிக்கையில் தவிப்பதாகட்டும், தனது குழந்தையை எப்படியேனும் மீட்க துணிவதாகட்டும், ஒட்டுமொத்த படத்தையும் தனது அபார நடிப்பால் தோளில் சுமந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கர்ப்பிணி பெண்ணுக்கான உடல்மொழி உள்ளிட்டவற்றை நேர்த்தியாக செய்துள்ளார்.

    மற்ற கதாபாத்திரங்களான மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா, குழந்தை அத்வைத் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கின்றனர். குறிப்பாக டாக்டராக வரும் மதியின் நடிப்பு அட்டகாசம்.

    பெண்குயின்

    படம் ஆரம்பத்தில் மெல்ல நகர்ந்தாலும் போகப்போக வேகமெடுக்கிறது. ஆங்காங்கே வரும் டுவிஸ்ட்டுகள் படத்தை மேலும்  சுவாரஸ்யமாக்குகின்றன. பெண்களின் வலிமை அசாத்தியமானது, தாய் பாசத்திற்கு நிகர் எதுவும் இல்லை என்பதை கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் மூலம் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். வலுவான திரைக்கதை படத்திற்கு பலம். 

    பெண்குயின்

    இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் படத்தின் ஹீரோ என்றே சொல்லலாம். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். இசையின் மூலம் திரில்லர் காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, மலைபிரதேசத்தை அழகாகவும், படத்துக்கு தேவையான மர்மமான தன்மையுடனும் திறம்பட காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    மொத்தத்தில் 'பெண்குயின்' திரில்லர்.
    அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் விமர்சனம்.
    2004ஆம் ஆண்டு ஊட்டியில் சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஜோதி என்ற பெண் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீஸ், என்கவுண்டர் செய்து கேசை முடிக்கிறார்கள். 15 வருடங்கள் கழித்து இந்த கேசை தூசிதட்டி எடுக்கிறார் ஜோதிகா. 

    சைக்கோ கொலைகாரி என்று பட்டம் சூட்டப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஜோதிக்கு ஆதரவாக களம் இறங்குகிறார். இதனால் ஜோதிகாவுக்கு பல இன்னல்களும் பிரச்சனைகளும் வருகிறது. இந்தப் பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்? அந்த கேசில் எப்படி வெற்றி பெற்றார்? அந்தக் கேசின் உண்மை நிலவரம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பொன்மகள் வந்தாள்

    படத்தில் ஜோதிகா வெண்பா என்ற கதாபாத்திரத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குழந்தைகளுடன் விளையாடும் போது குழந்தையாகவும், தந்தை பாக்யராஜுடன் பேசும்போது கேசில் வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பும், கோர்ட்டில் வாதாடும்போது கம்பீரமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். பெண்களின் வலியை நடிப்பால் உணர்த்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து அதோடு வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

    தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பாக்யராஜ். ஜோதிகா சோர்ந்து போகும் போது உற்சாகம் கொடுப்பவராக நடிப்பில் பளிச்சிடுகிறார். சிறிதளவே வந்தாலும் மனதில் நிற்கிறார் தியாகராஜன். பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். 

    பொன்மகள் வந்தாள்

    தனக்கே உரிய நக்கல் நையாண்டி நடிப்பை கொடுத்திருக்கிறார் பார்த்திபன். ஜோதிகாவிற்கு பிறகு அதிக அளவு கவனத்தை ஈர்த்திருக்கிறார். சுப்பு பஞ்சு நடந்ததை சொல்லும்போது அந்த இடத்தில் பார்த்திபன் தன்னைக் கற்பனை பண்ணி பார்க்கும் காட்சி சிறப்பு. எதிர்பார்க்காத இடைவேளையும், யூகிக்க முடியாத இறுதி காட்சியும் ரசிக்க வைக்கிறது. 

    பெண்களுக்கு நடக்கும் அநீதிகளையும் பாலியல் வன்கொடுமைகளையும் மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக். 

    பொன்மகள் வந்தாள்

    மற்றவர்களுக்கு நடந்ததை செய்தியாக பார்க்காமல், தனக்கு நடந்ததாக உணர்ந்தால் அவர்களின் வலியும் வேதனையும் புரியும் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். பெண் குழந்தைகளுக்கு, ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை சொல்வதைப்போல, பெண்களை எப்படி பார்க்க வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை ஆண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார். 

    கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கதையோடு ஒன்றி பயணிக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு கச்சிதம்.

    மொத்தத்தில் 'பொன்மகள் வந்தாள்' ஏஞ்சல்
    ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அசுரகுரு’ படத்தின் விமர்சனம்.
    கொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள். விக்ரம் பிரபுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. தலைவலி வரும் போதேல்லாம் வெளியில் சென்று பெரிய தொகையை திருடிவிட்டு வருகிறார்.

    அப்படி ஒருநாள் ஹவாலா பணத்தை திருடுகிறார். இந்த விஷயம் போலீசுக்கு போகாமல் டிடெக்டிங் ஏஜென்சியில் பணி புரியும் மகிமா நம்பியாரிடம் செல்கிறது. அவரும் தீவிர விசாரணையில் இறங்குகிறார். வங்கியில் திருடிய பணத்திற்காக விக்ரம் பிரபுவை போலீஸ் ஒரு பக்கம் தேடுகிறது.

    அசுரகுரு விமர்சனம்

    ஒரு கட்டத்தில் மகிமா, ஹவாலா பணத்தை கொள்ளையடித்தது விக்ரம் பிரபு என்று தெரிந்துக் கொள்கிறார். இறுதியில் விக்ரம் பிரபுவை போலீசில் மகிமா சிக்க வைத்தாரா? கொள்ளையடித்த பணத்தை விக்ரம் பிரபு என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு, தனக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மெனகெட்டிருக்கிறார். நாயகியாக வரும் மகிமா, துணிச்சலான கதாபாத்திரத்தை அழகாக கையாண்டிருக்கிறார். நண்பராக வரும் ஜெகன், இரண்டு மூன்று காட்சிகளில் மட்டும் வரும் யோகி பாபு, இருவரும் கொடுத்த வேலை செய்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் சுப்பராஜ் நடிப்பில் பளிச்சிடுகிறார்.

    அசுரகுரு விமர்சனம்

    நாயகன்கள் கொள்ளையடித்து பணம் சேர்க்கும் படங்களின் வரிசையில் இப்படமும் அமைந்திருக்கிறது. கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராஜ்தீப். திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால், கூடுதலாக ரசித்திருக்கலாம். ஜெகன், யோகிபாபு ஆகியோரை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம்.

    கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்களையும், பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘அசுரகுரு’ அசத்தல் குறைவு.
    கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், தன்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் தாராள பிரபு படத்தின் விமர்சனம்.
    பாட்டி அம்மாவுடன் வாழ்ந்து வரும் ஹரீஷ் கல்யாண் விளையாட்டு வீரராக இருக்கிறார். ஸ்போர்ட் கோட்டாவில் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாயகி தன்யாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். காதலை சொல்லி இருவரும் காதலித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, டாக்டராக இருக்கும் விவேக், குழந்தை வேண்டும் என்று வரும் தம்பதியருக்கு குழந்தையை கொடுக்க ஆரோக்கியமான விந்தணு உள்ள டோனரை தேடி அலைகிறார். அப்போது ஹரீஷ் கல்யாணை சந்திக்கும் விவேக், அவரிடம் சம்மதிக்க வைத்து டோனராக்குகிறார்.

    தாராள பிரபு விமர்சனம்

    இந்நிலையில், தன்யாவிற்கும் ஹரீஷ் கல்யாணுக்கும் திருமணம் நடக்கிறது. தன்யாவிற்கு குழந்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக ஒரு குழந்தையை தத்தெடுக்கிறார்கள். அதன்பின் இவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிகிறார்கள். 

    இறுதியில் பிரச்சனை முடிந்து இருவரும் ஒன்றுசேர்ந்தார்களா? அது என்ன பிரச்சனை? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தாராள பிரபு விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரீஷ் கல்யாண், தனக்கே உரிய பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி தன்யா, ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவாக நடித்து கவனிக்க வைத்திருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார் நடிகர் விவேக். இவரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். பல காட்சிகளை மிகவும் எளிதாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். காமெடியும் நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

    தாராள பிரபு விமர்சனம்

    விந்தணு முக்கியத்துவத்தையும், தாம்பத்திய வாழ்க்கையின் ஆரோக்கியத்தையும் சொல்லும் விதமாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து. ரீமேக் படம் என்றாலும் அதை சிறப்பாக எடுக்க திறமை வேண்டும். அதை அனைவரும் பாராட்டும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆபாசம் இல்லாமல் திரைக்கதை உருவாக்கி இருக்கிறார்.

    இப்படத்திற்கு அனிருத், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபீர் வாசுகி, மேட்லி புளூஸ், ஓர்கா, சான் ரோல்டன், விவேக் மெர்வின் என பலர் இசையமைத்திருக்கிறார்கள். இவர்கள் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். செல்வகுமாரின் ஒளிப்பதிவு அருமை.

    மொத்தத்தில் ‘தாராள பிரபு’ ரொம்ப தாராளம்.
    ஐ.கணேஷ் இயக்கத்தில் எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கயிறு’ படத்தின் விமர்சனம்.
    கிராமத்தில் வசிக்கும் நாயகன் குணா, தந்தை வழியில் பூம் பூம் மாட்டுக்காரராக வந்து குறி சொல்லி வருகிறார். அவர் தவறாக சொல்லிவிட்டதாக ஊர் தலைவர் நாயகனை கண்டிக்கிறார். இதை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லுமாறு கூறுகிறார். இதனால் மனமுடையும் நாயகன், தனது பூம் பூம் மாட்டுடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி, வேறு ஊருக்கு செல்கிறார்.

    செல்லும் இடத்தில், அங்கு பூ வியாபாரம் செய்து வரும் காவ்யா மாதவ் நாயகன் மீது காதல் வயப்படுகிறார். இவர்களின் காதலுக்கு நாயகியின் தாயார் எதிர்க்கிறார். மகளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையை பார்க்கிறார். ஆனால் நாயகியோ அவரை திருமணம் செய்ய மறுக்கிறார். 

    கயிறு படக்குழு

    பின்னர் நாயகியின் காதலுக்கு அவரது தாயார் நிபந்தனையுடன் சம்மதம் தெரிவிக்கிறார். நாயகன் பூம் பூம் மாட்டுக்கார தொழிலை கைவிட்டு, வேறு தொழில் செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை நாயகன் குணா ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் எஸ்.ஆர்.குணா, பூம் பூம் மாட்டுக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். தன் மாடு மீது அவர் வைத்திருக்கும் பாசம், ‘கந்தா...கந்தா...’ என்று அழைக்கும் அன்பு, மாட்டை காணாமல் தவிக்கும் உருக்கம் என நடிப்பில் ஜொலிக்கிறார். அவருடன் சேர்ந்து அந்த மாடும் நடித்து இருக்கிறது. நாயகி காவ்யா மாதவ், கிராமத்து பெண் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஹலோ கந்தசாமி அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கிறார். 

    கயிறு படக்குழு

    இயக்குனர் ஐ.கணேஷ் கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. வித்தியாசமான கதையை மிக அழகாக கையாண்டுள்ள இயக்குனருக்கு பாராட்டுகள். கிராமத்து யதார்த்தங்களை தன் கதைக்குள் வெகு இயல்பாக கொண்டு வந்து இருக்கிறார். யதார்த்தமான காட்சிகளுடனும், விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் படத்தில், வேகத்தடை போட்டது போல் டூயட்டை வலுக்கட்டாயமாக புகுத்தி இருக்கிறார்.

    கயிறு படக்குழு

    பாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்து விடுகிறார் இசையமைப்பாளர் பிரித்வி. ஜெயன் ஆர் உன்னிதனின் ஒளிப்பதிவு கச்சிதம். கிராமத்து அழகை திரையில் பிரதிபலித்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘கயிறு’ சிறந்த படைப்பு.
    அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், ஷிரின் காஞ்வாலா, நட்டி நட்ராஜ், சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வால்டர்’ படத்தின் விமர்சனம்.
    கும்பகோணத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் நாயகன் சிபிராஜ். இவரும் நாயகி ஷிரின் காஞ்வாலாவும் காதலித்து வருகின்றனர். இதே ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரகனியை சிபிராஜ் தலைமையிலான டீம் என்கவுண்டர் செய்கிறது.

    சில நாட்களில் பிறந்த குழந்தைகள் ஊரில் காணாமல் போகிறது. இதையறிந்த சிபிராஜ் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்குகிறார். கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை ஒன்று வீட்டிற்கு சென்றவுடன் இறக்கிறது. மீண்டும் இதே போல் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இதே நேரத்தில் சமுத்திரகனி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் சிபிராஜ் மீது விபத்தை ஏற்படுத்துகிறார் நட்டி.

    ஷிரின் காஞ்வாலா, சிபிராஜ்

    இந்த விபத்தில் உயிர் பிழைக்கும் சிபிராஜ், தன் மீது விபத்தை ஏற்படுத்திய நட்டி யார் என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இறுதியில் நட்டி யார் என்பதை சிபிராஜ் கண்டுபிடித்தாரா? குழந்தைகளை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ், மிடுக்கான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார். நாயகியாக வரும் ஷிரின் காஞ்வாலா அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

    ஷிரின் காஞ்வாலா, சிபிராஜ்

    நட்டி வில்லனாக மிரட்டி இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். இவர் கதாபாத்திரத்தின் டுவிஸ்ட் ரசிக்க வைக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் சமுத்திரகனி. ரித்விகா, சனம் ஷெட்டி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    மெடிக்கல் கிரைம் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அன்பரசன். இதுபோன்ற கதைகள் பல வந்திருந்தாலும் இப்படம் முற்றிலும் மாறுப்பட்டு வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. மெடிக்கல் கிரைம் பற்றி மிகவும் ஆழமாக சொன்ன விதமும், திருப்பங்கள் கொடுத்த விதமும் அருமை. 

    ஷிரின் காஞ்வாலா, சிபிராஜ்

    தர்ம பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் ஸ்கோர் செய்திருக்கிறார். ராசாமணியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘வால்டர்’ கர்ஜனை.
    பிரவீன் சட்டரு இயக்கத்தில் சித்து, நரேஷ், ரேஷ்மி கவுதம், ஸ்ரத்தா தாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘இம்சை அரசி’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் சித்து, நரேஷ் இருவரும் மருந்து கடையில் வேலை பார்க்கிறார்கள். நரேஷ் மனைவியை பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்குமே சம்பளம் குறைவு என்பதால், அவ்வப்போது சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்கிறார்கள்.

    யாராவது ஊருக்கு செல்வது இவர்களுக்கு தெரிய வந்தால், அந்த வீட்டில் நுழைந்து அங்கு சந்தேகம் வராத பொருட்களை, சின்ன சின்ன பொருட்களை மட்டும் திருடி எடைக்கு போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பிழைப்பை ஓட்டி வருகிறார்கள். இந்த நிலையில், சித்து வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வரும் ரேஷ்மி கவுதம் மீது சித்துவுக்கு காதல் வருகிறது.

    இந்த நிலையில், ஒருநாள் திருட செல்லும் போது ஒரு வீட்டில் இருந்து சித்துக்கு 5 லட்சம் பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது காதலியுடன் செட்டிலாகி விட நினைக்கிறார். அதேபோல் மற்றொரு வீட்டில் திருட செல்லும் நரேஷுக்கு லட்சக் கணக்கில் பணம் கிடைக்கிறது. இருவருமே இதை ஒருவருக்கொருவர் தெரியாமல் மறைக்கின்றனர்.

    இதற்கிடையே சித்து, நரேஷ் திருடிய பொருள் ஒன்றில் முக்கியமான பொருள் இருப்பதால், அவர்களிடம் இருந்து அந்த பொருளை மீட்பதற்காக ரவுடி கும்பல் ஒன்று அவர்களை தேடுகிறது. அதே நேரத்தில் போலீசும் இவர்களை தேடுகிறது.

    இம்சை அரசி விமர்சனம்

    கடைசியில், சித்து, நரேஷ் இருவரும் போலீசில் சிக்கினார்களா? ரவுடி கும்பல் அவர்களை கடத்தியதா? அந்த பணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    காதல், திருட்டு போன்ற காட்சிகளில் சித்து தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஸ்ரத்தா தாஸுடன் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் சிரிப்பை அள்ளுகிறார். நரேஷ் குருவாக வர, சித்து அவருக்கு சிசியனாக படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் பங்காற்றியிருக்கின்றனர். நரேஷ் காமெடியால் சிரிக்க வைக்கிறார்.

    ரேஷ்மி கவுதம் காதலுடன் கவர்ச்சியையும் தூவிவிட்டு சென்றிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    இம்சை அரசி விமர்சனம்

    காதல், காமெடி, கவர்ச்சி இவை மூன்றையுமே பொருளாக கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீன் சட்டரு. முதல் பாதி சற்றே மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் படம் வேகமெடுக்கிறது. அடல்ட் காமெடி ஜானரில் இயக்குநர் கதையில் காட்டிய முக்கியத்துவத்தை திரைக்கதையிலும் கொஞ்சம் காட்டியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.

    ஸ்ரீ சரண் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ராம் ரெட்டி ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `இம்சை அரசி' குறைவான இம்சை.
    வ.கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி, நிதிஷ் வீரா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘எட்டுத்திக்கும் பற’ படத்தின் விமர்சனம்.
    தன்னைவிட தாழ்ந்த சாதி பையனை காதலிக்கும் சாந்தினி அவருடன் சென்னைக்கு ஓடிவருகிறார். பிளாட்பார வாசியான நிதிஷ் வீராவுக்கும் அவரது காதலிக்கும் மறுநாள் திருமணம் நடக்க இருக்கும் சூழலில் வெளியில் சுற்றுகின்றனர். ஆதரவற்ற வயதானவர்கள் இருவர் தங்கள் வாழ்க்கையில் இணைய மறுநாளை தேர்ந்தெடுக்கிறார்கள். 

    தனது மகன் உயிரை காப்பாற்ற 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதால் அதற்காக முனீஸ்காந்த் அலைகிறார். போலீஸ் என்கவுண்டரில் இருந்து தனது இயக்க தோழர்களை காப்பாற்ற சமுத்திரக்கனி முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார். 

    எட்டுத்திக்கும் பற விமர்சனம்

    இந்த ஐந்து கதையையும் ஒன்றாக இணைக்கிறது சூழ்நிலைகள். இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

    5 வெவ்வேறு கதைகள், அவற்றை இணைக்கும் ஒரு மையப்புள்ளி என ஆந்தாலஜி வகையில் கதையை சொல்ல கீரா முயற்சித்துள்ளார். அவரது முயற்சி சுவாரசியமாக இருக்கிறது. 

    எட்டுத்திக்கும் பற விமர்சனம்

    வக்கீல் அம்பேத்கராக வரும் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். சாந்தினியின் கண்களில் தெரியும் மிரட்சியே அவரது நடிப்புக்கு சாட்சி. நிதிஷ் வீரா பிளாட் பாரவாசிகளின் பரிதாப நிலையை கண்முன் கொண்டு வருகிறார். முனீஸ்காந்தின் குணச்சித்திர நடிப்பும் அசத்தல். முத்துராமன் சமகால அரசியல்வாதியை பிரதிபலிக்கிறார். 

    ஆணவக்கொலை என்பதை மையமாக எடுத்துக்கொண்ட கீரா அதை விறுவிறுப்பான திரில்லராக சொல்ல முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். திரைக்கதையில் இன்னும் சிறிது கவனம் செலுத்தி இருந்தால் முக்கிய படங்கள் வரிசையில் சேர்ந்து இருக்கும்.

    எட்டுத்திக்கும் பற விமர்சனம்

    எம்.எஸ்.ஸ்ரீகாந்த் இசையும் சிபின் சிவன் ஒளிப்பதிவும் படத்துக்கு திகிலை கூட்டுகின்றன. 

    மொத்தத்தில் ‘எட்டுத்திக்கும் பற’ இன்னும் பறந்திருக்கலாம்.
    மனோஜ் குமார் நடராஜன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜாய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வெல்வெட் நகரம்’ படத்தின் விமர்சனம்.
    நடிகையாக இருக்கும் கஸ்தூரி, மலை வாழ் மக்களின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்கள் மலையில் கம்பெனி தொடங்குவதற்காக அங்கு தீ வைத்து அங்கு வாழும் மக்களை விரட்ட முயற்சிக்கிறார்கள். இந்த தீ இயற்கையாக வந்தது இல்லை, செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அறிந்த கஸ்தூரி, அதற்கான ஆவணங்களை தயார் செய்து ரிப்போர்ட்டராக இருக்கும் வரலட்சுமியிடம் கொடுக்க நினைக்கிறார்.

    இந்நிலையில், மர்ம நபரால் கஸ்தூரி கொலை செய்யப்படுகிறார். இதையறிந்த வரலட்சுமி, கஸ்தூரி சொன்ன ஆவணங்களை கைப்பற்றி மலை வாழ் மக்களுக்கு தீர்வு காணவும், கஸ்தூரியை கொலை செய்தது யார் என்பதையும் கண்டறிய முயற்சி செய்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக பணம் பறிக்கும் கும்பலிடம் வரலட்சுமி சிக்குகிறார். 

    வெல்வெட் நகரம் விமர்சனம்

    இறுதியில் பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து வரலட்சுமி தப்பித்தாரா? ஆவணங்களை கைப்பற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் ரிப்போர்ட்டராக நடித்திருக்கும் வரலட்சுமி, தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக இல்லாமல் மற்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் அர்ஜாய். 

    காமெடி நடிகராக வலம் வந்த ரமேஷ் திலக் இப்படத்தில் நல்லவரா, கெட்டவரா என்று சிந்திக்க வைத்திருக்கிறார். பாடகியான மாளவிகா சுந்தர், இந்த படத்தில் நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    வெல்வெட் நகரம் விமர்சனம்

    வித்தியாசமான கதையை கையில் எடுத்த இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன், முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்களை உட்கார வைத்திருக்கிறார். மெதுவாக தொடங்கும் திரைக்கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் இறுதியில் ஒரு இடத்தில் கச்சிதமாக நிற்கிறது.

    பகத் குமாரின் ஒளிப்பதிவும், சரண் ராகவனின் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் துணையாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘வெல்வெட் நகரம்’ சுமாரான நகரம்.
    ×