என் மலர்
சினிமா செய்திகள்

திரைத்துறையில் இன்பநிதி - மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட்
- எப்போதும் ஒரு படத்தில் கமிட்டாகும் போது கதாநாயகனிடம் கதை சொல்லி தான் கமிட்டாவேன்.
- முதலில் கதையை ரெடி செய்த பிறகு தான் கதாநாயகனிடம் சொல்லி ஓகே வாங்குவேன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதனிடையே, 'பைசன்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்து உதயநிதியின் மகன் இன்பநிதியை கதாநாயகனாக வைத்து படம் எடுக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாயின. இருப்பினும் இத்தகவல் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், உதயநிதியின் மகன் இன்பநிதியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'பைசன்' படம் வெளியான பிறகு தனுஷை வைத்து தான் தன் அடுத்த படத்தை தொடங்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து இன்பநிதி மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதன்மூலம் இன்பநிதி திரைத்துறைக்கு வருவது உறுதியாகி உள்ளது.
மேலும் மாரிசெல்வராஜ் கூறுகையில், எப்போதும் ஒரு படத்தில் கமிட்டாகும் போது கதாநாயகனிடம் கதை சொல்லி தான் கமிட்டாவேன். ஒரு படத்தில் கமிட்டான பிறகு கதையை யோசிக்கலாம் என்று இருக்க மாட்டேன். முதலில் கதையை ரெடி செய்த பிறகு தான் கதாநாயகனிடம் சொல்லி ஓகே வாங்குவேன். கமிட்டாகிவிட்டு அதன் பிறகு நான் சொன்ன கதை அந்த கதாநாயகனுக்கு பிடிக்கவில்லை என்றால் எனக்கு கஷ்டமாக இருக்கும் என்றார்.
உதயநிதி கடைசியாக நடித்த 'மாமன்னன்' படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தான் இன்பநிதியின் முதல் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






