search icon
என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    திருமணத்துக்குப்பின் படங்களில் நடிக்காமல் இருந்த லதா, 10 ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் நடித்தார்.
    திருமணத்துக்குப்பின் படங்களில் நடிக்காமல் இருந்த லதா, 10 ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் நடித்தார். லண்டனில் இருந்து லதா திரும்பியபின், பல பட அதிபர்கள் அவரை மீண்டும் நடிக்க அழைத்தனர். ஆனால், "இனி நடிப்பதாக இல்லை'' என்பதையே பதிலாக சொல்லி வந்தார்.

    ஆனால், நடிகரும் டைரக்டருமான ராஜ்கிரண் கேட்டபோது லதாவால் மறுக்க முடியவில்லை. அவர் இயக்கிய "பொன்னு விளையும் பூமி'' படத்தில் நடித்தார் லதா. இதன் மூலம் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார்.

    சினிமாவில் தனது மறுபிரவேசம் குறித்து லதா கூறியதாவது:-

    "குடும்ப வாழ்க்கைக்குள் வந்த பிறகு நடிப்பு பற்றி நான் நினைத்துப் பார்க்கவில்லை.

    2 மகன்களுக்கு அம்மா என்ற முறையில் அவர்களின் மகிழ்ச்சி, அவர்களின் கல்வி, கணவரின் தேவையறிந்து செயல்படுவது என்றே முழு நாட்களும் ஓடின.

    இந்த சமயத்தில்கூட, டைரக்டர் கே.பாக்யராஜ் என் லண்டன் முகவரியைத் தெரிந்து கொண்டு என்னிடம் தொடர்பு கொண்டார். அப்போது அவர், எம்.ஜி.ஆரும் நானும் நடித்து பாதியில் நின்றுபோன "அண்ணா நீ என் தெய்வம்'' படத்தை கொஞ்சம் மாற்றி "அவசர போலீஸ்'' என்ற பெயரில் எடுக்கவிருப்பதாகவும், அதன் சில காட்சிகளில் நான் நடித்துத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    நான் அவரிடம், "நடிப்பை அடியோடு மறந்து விட்டேன். அதனால் தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்'' என்று தெளிவாக கூறி, நடிப்புக்கு வைத்த முற்றுப்புள்ளியை உறுதி செய்தேன்.

    லண்டனில் இருந்து எப்போதாவது ஊருக்கு வரும்போது, எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் `வீனஸ் ஸ்டூடியோ'வில் நடக்கும் படப்பிடிப்பு கண்ணில் படும். "நாமும் இந்த சினிமாவில்தானே இருந்தோம். இப்போது நடிப்பு பற்றிய சிந்தனையே எழவில்லையே'' என்று நினைத்துக் கொள்வேன்.

    இப்படியாக நடிப்பதில்லை என்ற முடிவுடன்தான் வெளிநாட்டில் நான் இருந்த 10 வருடங்களும் ஓடிற்று. அம்மாவுக்காக ஊர் வந்தபோது இங்கேயே நிரந்தரமானேன்.

    தங்கையின் திருமணத்தையும் முடித்த நேரத்தில் ஒருநாள் மஞ்சுளாவின் பிறந்த நாளுக்காக அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

    "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்த நாளில் இருந்தே நானும் மஞ்சுளாவும் நல்ல தோழிகளாகி விட்டோம். அந்த நட்பு இன்றைக்கும் அதே நிலையில் தொடர்கிறது.

    நான் மஞ்சுளாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ராஜ்கிரண் அங்கே வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், அப்போது அவர் இயக்கி நடிக்கவிருந்த "பொன்னு விளையும் பூமி'' படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.

    அப்போதும், "நான் நடிப்பதில்லை. நடிப்பையெல்லாம் விட்டு வருஷக்கணக்காச்சே'' என்றேன்.

    ஆனால் அவர் விடவில்லை. "எம்.ஜி.ஆருடன் நடித்த நட்சத்திரம் நடிப்பை விடுவதாக சொன்னால் எப்படி?'' என்றார்.

    அவர் பேச்சில் எப்படியும் என்னை நடிக்க வைத்துவிடவேண்டும் என்கிற குறிக்கோள் பிரதானமாக இருந்தது.

    அன்றைக்கு `முடியாது' என்று மறுத்துவிட்டாலும், ஒரு மாதம் அவர் என்னை விடவில்லை. "படத்தின் கதையைக் கேளுங்கள். மறுக்காமல் நடிப்பீர்கள்'' என்று வற்புறுத்தி வந்தார். ஒருநாள் என்னை சந்தித்து கதையும் சொன்னார்.

    எம்.ஜி.ஆர். ஹீரோயினை எப்படியாவது நமது படத்தில் நடிக்க வைத்துவிடவேண்டும் என்ற அவரது ஆவல் தெரிந்தது. மஞ்சுளாவும் என்னிடம், "இவ்வளவு தூரம் உனக்காக காத்திருப்பவரை இனியும் `முடியாது' என்று சொல்லி நோகடிக்காதே. நல்ல கேரக்டராகத்தானே இருக்கிறது. நடியேன்'' என்றார்.

    ஒரு வழியாக இப்படி 1997-ல் நான் ஒப்புக்கொண்டு நடித்து வெளியான படம் "பொன்னு விளையும் பூமி.''

    கைதட்டல்

    இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. முதன் முதலாக வயதான மேக்கப் போட்டு நடிக்க வைத்தார்கள். காமிரா முன் நிற்கும்வரை கூட, "எப்படி நடிக்கப்போகிறேனோ'' என்ற உதறல் இருந்தது. ஆனால் டைரக்டர் "ரெடி... டேக்'' என்றபோது எப்படித்தான் நடித்தேன் என்பதே தெரியாது. ïனிட் ஆட்கள் கரகோஷம் செய்தபோதுதான் நடிப்பு மறுபடியும் எனக்கும் ஒட்டிக்கொண்டு விட்டதை உணர்ந்தேன்.

    தொடர்ந்து மளமளவென படங்கள் வந்தன. எனக்குப் பிடித்த கேரக்டர்களை மட்டும் ஏற்று நடித்தேன்.''

    இவ்வாறு நடிகை லதா கூறினார்.

    சென்னைக்கு வந்ததும் `ஏரோபிக்ஸ்' வகுப்புக்கு போகத்தொடங்கியிருந்தார், லதா. இப்படி ஒருநாள் காலை வகுப்புக்கு காரில் போனபோது, விபத்தில் சிக்கினார்.

    அதுபற்றி லதா கூறியதாவது:-

    "காலை 6 மணிக்கே எழுந்து `ஏரோபிக்ஸ்' கிளாசுக்கு புறப்பட்டேன். காரை நானே `டிரைவ்' செய்தேன்.

    கார் `டிரைவ் இன் உட்லண்ட்ஸ்' ஓட்டலைத் தாண்டும்போது, நான் கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக ஓட்டல் சந்தில் இருந்து ஒரு ஆட்டோ மெயின் ரோட்டுக்கு திரும்பியது. ஆட்டோ வந்த வேகத்தில் என் கார் மீது உரசி விடும் என்று புரிந்து கொண்டு, ஸ்டியரிங்கை கொஞ்சம் வேகமாக வலப்பக்கம் ஒடித்தேன். கார் என் கட்டுப்பாட்டை மீறி, பிளாட்பார மேடையில் மோதி கவிழ்ந்து விட்டது.

    அது காலை நேரம் என்பதால், ரோட்டில் வாகனப் போக்குவரத்து இல்லை. தலைகீழாக கிடந்த காருக்குள் முகத்தில் ரத்தம் கொட்டிய நிலையில் அரை மயக்கத்துடன் நான் கிடந்தேன். அப்போது, எங்கிருந்தோ வந்த இன்னொரு ஆட்டோ டிரைவர் ஓடிவந்து காருக்கு வெளியே நான் வர உதவினார்.

    அதே வேகத்தில் அவரது ஆட்டோவிலேயே என்னை, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்த்தார். முகமெல்லாம் ரத்தம் கொட்டிய நிலையில் இருந்த என்னை யாரென்றே அவருக்குத் தெரியாது! அப்படியிருந்தும் எனக்கு உதவி செய்த அவருடைய மனித நேயம் என்னால் மறக்கவே முடியாது.

    ஆஸ்பத்திரியில் இருந்து அவர் புறப்படும்போதுகூட, "உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டுப் போங்கள்'' என்றேன். அவரோ, "அதெல்லாம் இருக்கட்டும்மா'' என்று சொல்லி விட்டுப்போய்விட்டார்.

    5 மணி நேரம் அப்பல்லோவில் ஆபரேஷன் நடந்தது. கண் பக்கத்தில் ஸ்டியரிங் இடித்ததில் கொஞ்சம் தவறினாலும், கண் போயிருக்கும். தெய்வாதீனமாக தப்பியதாகத்தான் இப்போதும் நினைக்கிறேன்.

    தெய்வம் போல் அந்த நேரத்தில் வந்து உதவிய ஆட்டோ டிரைவர் யாரென்றும் தெரியவில்லை. ஆனால் சமயத்தில் உதவிய அந்த அன்பை என்னால் மறக்கவே முடியாது.''

    இவ்வாறு லதா கூறினார்.
    ஒரு கட்டத்தில் படங்களில் நடித்தது போதும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது லதா திருமணம் செய்து கொண்டார். கணவர் சபாபதி, சிங்கப்பூரில் பிஸினசில் இருந்ததால் கணவருடன் அங்கே போனார்.
    ஒரு கட்டத்தில் படங்களில் நடித்தது போதும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது லதா திருமணம் செய்து கொண்டார். கணவர் சபாபதி, சிங்கப்பூரில் பிஸினசில் இருந்ததால் கணவருடன் அங்கே போனார். கணவரின் பிஸினஸ் லண்டன், பிரான்ஸ், மலேசியா என்று விரிவுபடுத்தப்பட, 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளிலேயே இருந்தார்.

    லதா தம்பதிகளுக்கு 2 மகன்கள். லதா கணவருடன் வெளிநாடுகளில் இருக்க நேர்ந்தாலும் மகன்கள், சென்னையில் பாட்டி வீட்டில் தங்கி படித்தார்கள். சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் பிளஸ்-2 வரை படித்த கார்த்திக், அதன் பிறகு மேல் படிப்புக்காக லண்டன் போனார்.

    அதே பள்ளியில் பத்தாவது வரை படித்து விட்டு சீனிவாஸ் மேற்படிப்புக்காக லண்டன் போனார். மூத்தவர் கார்த்திக் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கணித நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்து விட்டு இரண்டாண்டுகள் `பேங்கிங்' படிப்பை தொடருகிறார்.

    இளையவர் `லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் கல்லூரியில்' இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பை தொடர்ந்து வருகிறார்.

    இப்படி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் லதாவின் அம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் `கேன்சர்' என்பது உறுதியானதும் லதாவுக்கு தகவல் பறக்க, அடுத்த விமானத்தில் பறந்து சென்னை வந்தார் லதா.

    மீண்டும் சென்னை விஜயம் பற்றி லதா கூறியதாவது:-

    "கணவரின் தொழில், பிள்ளைகளின் படிப்பு என்று வெளிநாட்டு வாழ்க்கை 10 வருடமாக தொடர்ந்தது. இடையிடையே ஊருக்கு வந்து போவதுண்டு. ஆனால் அம்மாவுக்கு கேன்சர் என்றதும் மனம் தாங்காமல் சென்னை வந்துவிட்டேன்.

    இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நான் சென்னை வந்த நேரத்தில் எம்.ஜி.ஆரும் சிகிச்சை முடிந்து பூரண சுகம் பெற்று சென்னை திரும்பியிருந்தார். சென்னைக்கு வந்ததும் என் அம்மாவின் உடல்நிலை அவருக்கு சொல்லப்பட, உடனே அம்மாவை பார்க்க ஆஸ்பத்திரிக்கே வந்து விட்டார். அப்போது அவர் மூன்றாவது முறையாக முதல்-அமைச்சர் ஆகியிருந்தார்.

    என்னைப் பார்த்ததும், "அம்மாவுக்கு இப்படி இருப்பதை என்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை?'' என்று கேட்டார். நான் லண்டனில் இருந்து சென்னை வந்ததே அம்மாவை கவனித்துக் கொள்ளத்தான் என்பதை சொன்னேன். சிகிச்சை முறைகளை டாக்டர்கள் மூலம் தெரிந்து கொண்டவர், சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார். அமெரிக்க சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு சரியாக பேச்சு வராத நேரம். அப்படியிருந்தும் அக்கறை எடுத்துக்கொண்டு நேரில் வந்து அம்மாவை பார்த்த அவரது அன்பை இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்குகின்றன.

    கேன்சர் முற்றிவிட்டதால், அம்மா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதனால் என் கடைசித் தங்கைக்கு நான் தாயாகும் நிலை ஏற்பட்டது.

    அம்மா இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக என் தங்கை தேவி திருமணத்தை நடத்தி வைப்பார்களோ, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அவள் திருமணத்தை நடத்தி வைக்க விரும்பினேன். தங்கைக்கேற்ற வரன் தேடியபோது ஓட்டல் பார்க் ஷெரட்டன் அதிபரின் மகன் கவுரவ் கோயல் கிடைத்தார். திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தேன். அன்றைய தினம் அவள் தாய்போல நான் மன நிறைவு பெற்ற நாள்.

    என் தம்பிகளில் ராஜ்குமார் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். நான் படித்த ஹோலிகிராஸ் கான்வென்ட் பெண்களுக்கானது என்றாலும், முதல் ஐந்து வகுப்புகளில் மட்டும் ஆண் -பெண் சேர்ந்து படித்து வந்தனர். இந்த வகையில் தம்பி ராஜ்குமார் ஹோலிகிராஸ் கான்வென்டில் சேர்ந்தான்.

    நான் நடிக்க வந்த நேரத்தில் ராஜ்குமார் முழு எம்.ஜி.ஆர். ரசிகனாகவே மாறிவிட்டான். ஒருமுறை அவன் வீட்டில் இருந்த நேரத்தில் டெலிபோன் ஒலித்திருக்கிறது. எடுத்துப் பேசியபோது, "நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்'' என்று எம்.ஜி.ஆர். சொல்ல, அவரிடம் பேசி முடித்துவிட்டு அன்று முழுக்க அவன் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

    அப்போது, "ரிக்ஷாக்காரன்'' படம் ரிலீசாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. ராஜ்குமாரின் வகுப்பாசிரியர் அன்று மாணவர்களிடம், "எதிர்காலத்தில் யார் யார் என்னென்னவாக வரப்போகிறீர்கள்?'' என்று கேட்டிருக்கிறார். மாணவர்களில் பலரும் "டாக்டராவேன்'', "என்ஜினீயராவேன்'', "பைலட்டாவேன்'' என்று சொல்ல, ராஜ்குமார் முறை வந்தபோது அவன் எழுந்து, "நான் ரிக்ஷாக்காரன் ஆவேன் சார்'' என்றிருக்கிறான்.

    மாணவர்கள் குபீரென சிரித்து வகுப்பறையை அலற வைத்திருக்கிறார்கள். ஆசிரியரும் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதால், "ஏன் அப்படி?'' என்று கேட்டிருக்கிறார். அப்போது, ரிக்ஷாக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் கேரக்டர் அந்த அளவுக்கு ஒரு நல்ல கேரக்டராக ராஜ்குமார் மனதில் பதிந்திருப்பதை ஆசிரியர் தெரிந்து கொண்டார்.

    மறுநாள் படப்பிடிப்பில், பள்ளியில் `ரிக்ஷாக்காரன்' ஆக விரும்பிய தம்பியின் எதிர்கால ஆசை பற்றி எம்.ஜி.ஆரிடம் சொன்னேன். ஆச்சரியமாக கேட்ட எம்.ஜி.ஆர், "பார்த்தியா லதா! இதுதான் நம் உழைப்புக்கான மரியாதை. ரிக்ஷா ஓட்டுபவர் தனது நேர்மையான கேரக்டர் மூலம் உன் தம்பி மனதில் பதிந்திருக்கிறார். ஒரு கேரக்டர் மக்கள் மனதில் நல்லவிதமாய் பதிய வேண்டும் என்பதற்காகத்தானே அவ்வளவு கஷ்டப்படுகிறோம். அதற்கு கிடைத்த பலன்தான் உன் தம்பியின் மனதில் பதிந்த `ரிக்ஷாக்காரன்' ஆசை'' என்று விளக்கம் தந்தார்.

    ராஜ்குமார் பின்னாளில் நடிகராகி, நடிகை ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொண்டு 2 பிள்ளைகளுக்கு அப்பா ஆனாலும், இப்போதும் எம்.ஜி.ஆர். ரசிகன்தான்.''

    இவ்வாறு லதா கூறினார்.
    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சர் ஆன பிறகு, படங்களில் நடிக்கவில்லை. அதன் பிறகு மற்ற நடிகர்கள் படங்களில் லதா பிஸியானார். கமல், ரஜினி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.
    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சர் ஆன பிறகு, படங்களில் நடிக்கவில்லை. அதன் பிறகு மற்ற நடிகர்கள் படங்களில் லதா பிஸியானார். கமல், ரஜினி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.

    கமல், ரஜினி படங்களில் நடித்த அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "கமலுடன் எனக்கு வாய்ப்பு வந்த முதல் படமே "வயநாடு தம்பான்'' என்ற மலையாளப்படம்தான். படத்தை வின்சென்ட் இயக்கினார். இந்தப்படம் மலையாளத்தில் பெரிய `ஹிட்' ஆனது.

    இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த புதிய அனுபவம் மேக்கப் போடாமல் நடித்ததுதான். மலையாளப் படங்களில் பொதுவாகவே மேக்கப்புக்கு அதிக முக்கியத்துவம் தரமாட்டார்கள். கேரக்டர்கள் இயல்பாக இருக்கவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

    தமிழ்ப் படங்களில் மேக்கப் போட்டே பழகிய எனக்கு, `மேக்கப் அவசியமில்லை' என்று டைரக்டர் வின்சென்ட் சொன்னதும் என்னவோ போலிருந்தது. அதன் பிறகு கேரக்டருடன் ஒன்றத் தொடங்கிய பிறகு சரியாகி விட்டது. படத்தைப் பார்த்தபோது, பிரமிப்பாக இருந்தது.

    இந்த அனுபவம், இதற்கு முன்பே மலையாள இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் எம்.ஜி.ஆரை இயக்கிய "நாளை நமதே'' படத்திலும் எனக்கு ஏற்பட்டது. மேக்கப் போட்டாலே அவருக்கு ஆகாதே. "எதற்காக இப்படி மேக்கப் போடவேண்டும்'' என்று கேட்பார். அதுவரை மேக்கப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததால், அவரது கேள்வி அந்த நேரத்தில் எரிச்சலாகக் கூட இருந்தது.

    கமலுடன் தமிழில் நான் நடித்த "நíயா'' படம் ரொம்பவே முக்கியமானது. இதில் கமலுடன் சேர்ந்து 5 ஹீரோக்கள்! டைரக்டர் துரை சொன்ன கதையில் என் கேரக்டருக்கு இருந்த முக்கியத்துவம் கருதியும், கமல் ஜோடி என்பதற்காகவும் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படமும் பெரிய `ஹிட்.'

    நான் ரஜினியுடன் நடித்த முதல் படம் "சங்கர் சலீம் சைமன்.'' இந்தப்படத்தில் நடிப்பது தொடர்பாக டைரக்டர் பி.மாதவன் என்னை சந்தித்தபோது, "ரஜினின்னு ஒருத்தர் புதுசா வந்திருக்கார். நல்லாவே பண்றார். இந்தப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் வருகிறார். அவருக்குத்தான் நீங்க ஜோடியா நடிக்கறீங்க'' என்றார். நானும் ஒப்புக்கொண்டேன்.

    முதல் நாள் படப்பிடிப்பு ஒரு வீட்டில் நடந்தது. ரஜினி ஸ்கூட்டரில் என்னை ஏற்றிக்கொண்டு போவதாக காட்சி. இந்தக் காட்சி பற்றி டைரக்டர் பி.மாதவன் ரஜினியிடம் விவரித்துச் சொன்னபோது, "லதா மேடம் பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆச்சே! அவங்களை என் ஸ்கூட்டரில் ஏத்திட்டு போறதுன்னா எப்படி?'' என்று தயங்கியிருக்கிறார்.

    இதனால் டைரக்டர் பி.மாதவன் என்னை அழைத்து, "ரஜினி ரொம்ப டென்ஷனாகிறார். `எம்.ஜி.ஆர். சார் கூட நடித்த பெரிய ஆர்ட்டிஸ்ட் நீங்க என்கிற மரியாதை இப்படி அவரை டென்ஷனாக்குகிறது' என்று நினைக்கிறேன்'' என்றார்.

    உடனே நான், "சரி சார்! நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று சொல்லி விட்டு அப்போதே மேக்கப் ரூமில் இருந்த ரஜினியை சந்தித்தேன். "ஹலோ ரஜினி! எப்படி இருக்கிறீங்க?'' என்று ஆரம்பித்து ஐந்து நிமிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தேன். நான் சகஜமாக பேசியது அவருக்குள் இருந்த படபடப்பை குறைத்திருக்க வேண்டும். அடுத்து, ஸ்கூட்டர் காட்சியில் இயல்பாக நடித்தார்.

    ரஜினியுடன் அன்று ஆரம்பித்த நட்பு இன்றுவரை தொடர்கிறது. இப்போது பார்த்தாலும் அதே நட்பு பாராட்டும் ஒரு நல்ல நடிகர் அவர்.

    ரஜினிக்கு திருமணமாகியிருந்த நேரம். ஒருநாள் மைலாப்பூரில் உள்ள `நீல்கிரிஸ்' கடைக்கு போனேன். அப்போது "லதா மேடம்! லதா மேடம்!'' என்றொரு குரல். திரும்பிப் பார்த்தேன். என்னை நோக்கி வேகவேகமாய் வந்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அருகில் வந்ததும்தான் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் என்பது தெரிந்தது.

    நான் அவரிடம் "எப்படி இருக்கீங்க?'' என்று கேட்டேன். அவரோ மூச்சு விடாமல், "என் கணவர் (ரஜினி) உங்களைப்பற்றி ரொம்ப நல்லவிதமாக சொல்வார். உங்கள் மேல் அவருக்கு ரொம்ப மரியாதை'' என்றார். மகிழ்ந்து போனேன். அதுமுதல் லதா ரஜினிகாந்தும் எனக்கு ரொம்ப நெருக்கமான சிநேகிதி ஆகிவிட்டார்.

    இதன் பிறகு ரஜினி வீட்டில் நடக்கும் எந்தவொரு விசேஷத்திற்கும் எனக்கு அழைப்பு வந்து விடும். மகள் திருமணத்திற்கு அழைத்தார்கள். லேட்டஸ்ட்டாக ரஜினி நடித்த `சிவாஜி' படத்தின் பிரத்யேக காட்சிக்கு கூட அழைப்பு வந்தது. நட்பை போற்றுவதில் ரஜினி தம்பதிகள் ரொம்பவே கிரேட்!

    ரஜினியும் நானும் சேர்ந்து நடித்த படங்களில் மறக்க முடியாத ஒரு படம் "ஆயிரம் ஜென்மங்கள்.'' அதில் என் கேரக்டரின் தன்மை இரண்டு விதமாக இருக்கும். ஒன்று: இயல்பான கேரக்டர். அடுத்தது: `ஆவி' புகுந்த கேரக்டர்.

    படத்தில் விஜயகுமார்தான் ஹீரோ என்றாலும், எனக்கும் ரஜினிக்கும் எங்கள் நடிப்புக்கு சவால் வருகிற மாதிரியான கேரக்டர்கள். பெரும்பாலான படப்பிடிப்பு ஊட்டி, பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடந்தது. ஒரு காட்சியில் நடித்து விட்டு வந்ததும் "லதாஜி! சரியா பண்ணினேனா?'' என்று ஆர்வத்துடன் கேட்பார் ரஜினி. இத்தனைக்கும் அப்போது அவர் `சூப்பர் ஸ்டாராய்' வளர்ந்து விட்ட நேரம்.

    டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "வட்டத்துக்குள் சதுரம்'' படத்தில் ரஜினியுடன் நடித்தபோது, "லதாஜி! இந்த கேரக்டர் உங்களை பெரிய அளவில் பேச வைக்கும்'' என்றார். அவர் சொன்னபடிதான் ஆயிற்று. படத்தில் எனது கேரக்டரும் பேசப்பட்டது. அதோடு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் அவார்டும் எனது நடிப்புக்காக கிடைத்தது. ரஜினியுடன் "முள்ளும் மலரும்'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தும், கால்ஷீட் பிரச்சினையால் அந்த வாய்ப்பு நழுவிப்போனது. இது இன்றளவும் எனக்கு வருத்தமே.''

    இவ்வாறு லதா கூறினார்.
    டைரக்டர் ஸ்ரீதர், "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்தார். மூன்றிலும் கதாநாயகியாக லதா நடித்தார்.
    டைரக்டர் ஸ்ரீதர், "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்தார். மூன்றிலும் கதாநாயகியாக லதா நடித்தார்.

    டைரக்டர் ஸ்ரீதரின் "உரிமைக்குரல்'' படத்தில் எம்.ஜி.ஆரும், லதாவும் நடித்தார்கள். ஸ்ரீதர் மீண்டும் தனது "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தில் நடிக்க லதாவை அழைத்தார். ஒரு இளம் பெண்ணின் மன உணர்வுகளை படம் பிடித்த அந்த கதைக்கு `அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்று கவித்துவமான பெயரை சூட்டினார்.

    இந்தப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் படமானது.

    இந்த மும்மொழிப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "உரிமைக்குரல்'' படத்தில் நடித்தபோதே ஸ்ரீதரின் அற்புதமான இயக்கும் திறமையை என்னால் உணர முடிந்தது. மறுபடியும் இவரது படத்தில் நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் உள்ளூர இருந்தது. நடிகர் சிவகுமாருடன் "கண்ணாமூச்சி'' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஸ்ரீதரிடம் இருந்து அழைப்பு.

    "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' என்று ஒரு படம் எடுக்கிறேன். நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் தயார் ஆகிறது. மூன்று மொழிகளுக்கும் நீங்கள்தான் கதாநாயகி'' என்றார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.

    தமிழில் விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் என்னுடன் நடித்தார்கள். தெலுங்கில் சரத்பாபு, முரளி மோகன். கன்னடத்தில் ஸ்ரீநாத் நடித்தார். மூன்று மொழி கதாநாயகர்களுடனும் ஒரே நேரத்தில் மாறி மாறி நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

    எனக்கு தெலுங்கு சரளமாக பேச வரும். கன்னட வசனங்களை மட்டும் தமிழில் எழுதி வைத்து பேசினேன்.

    தமிழில் வெள்ளி விழா கொண்டாடிய இந்தப்படம், மற்ற 2 மொழிகளிலும் 100 நாட்கள் ஓடியது. இந்தப் படத்துக்கு பிறகு சிறிது இடைவெளிவிட்டு, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். ஹீரோவாக நடித்த "மீனவ நண்பன்'' படத்திலும் நடித்தேன். உணர்வுபூர்வமான கேரக்டர்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நின்றவர் டைரக்டர் ஸ்ரீதர்.''

    இவ்வாறு லதா கூறினார்.

    இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெற்றி பெற்ற "சஞ்சீர்'' படத்தை, தமிழிலும், தெலுங்கிலும் எடுத்தார்கள். தமிழில் எம்.ஜி.ஆர் - லதா நடிக்க "சிரித்து வாழவேண்டும்'' என்ற பெயரில் தயாரானது. தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவ் - லதா நடித்தனர்.

    இரண்டு படங்களும் எஸ்.எஸ்.பாலன் டைரக்ஷனில் தயாராயின.

    இந்தப் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "இரண்டு மொழிகளிலும் நான்தான் கதாநாயகி. இரண்டு படத்தின் சீன்களுமே அடுத்தடுத்து எடுக்கப்படும். தமிழ்ப்படம் என்றால், "தமிழ் ïனிட்டெல்லாம் வாங்க'' என்று அழைப்பார்கள். தெலுங்கு படப்பிடிப்பு என்றால், தெலுங்கு ïனிட்டை தயாராக இருக்கச் சொல்லி அறிவிப்பார்கள்.''

    இரண்டிலும் நான் இருப்பேன்.

    இந்தப் படத்தில் ஒரு முக்கியமான காட்சி. பள்ளிக் குழந்தைகள் 20 பேரை வில்லன் கூட்டம் கொன்றுவிடும். கொலையாளி யார் என்பது எனக்கு மட்டும் தெரியும்.

    ரோட்டில் நின்றபடி சாணை பிடிக்கிற கேரக்டரில் நான் நடித்தேன். கொலையாளி யாரென்று தெரிந்த நிலையிலும், பயம் காரணமாக வெளியே சொல்லாமல் மவுனமாகிவிடுவேன்.

    உண்மை எனக்குத் தெரிந்தும் சொல்லாமல் இருக்கிறேன் என்பது, ஹீரோவுக்கு தெரிந்து விடும். அதன் பிறகு என்னை சந்திக்கிற ஹீரோ (எம்.ஜி.ஆர்) நேராக குழந்தைகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மார்ச்சுவரிக்கு இழுத்துப் போவார். உயிரிழந்த அந்த குழந்தைகளை காட்டி, "நல்லாப்பாரு! சாக வேண்டிய வயசா இவங்களுக்கு? இவங்கள்ல எத்தனை பேர் காமராஜர், அண்ணாவா வந்திருப்பாங்களோ? இந்தப் பிஞ்சுகளை கருக்கின பாவி பற்றி தெரிந்தும், நீ மவுனமாக இருந்தால் உன்னைவிட சுயநலவாதி யாருமில்லை'' என்கிற மாதிரி உணர்ச்சி பொங்க

    பேசுவார்.இந்த வசனத்தைப் பேசுவதற்கு முன் என்னை மார்ச்சுவரி அறை வரை கையை பிடித்து இழுத்துச் செல்லும் எம்.ஜி.ஆர்., உள்ளே என்னைப் பிடித்திருக்கும் கையை உதறிவிட்டு இப்படி பேசுவார். நான் அவர் சொல்வதை கேட்டு மனம் மாறுவது போல் காட்சி.

    மறுநாள் இதையே தெலுங்கில் எடுத்தார்கள். காட்சி படமாக்கப்பட்டபோது, கதாநாயகன் என்.டி.ராமராவ் வேகவேகமாக என் கையை பற்றிக்கொண்டு மார்ச்சுவரிக்கு இழுத்துப்போனார். அப்போதே அவர் அந்த கேரக்டருக்குள் `இன்வால்வ்' ஆகிவிட்டது தெரிந்தது.

    நேராக மார்ச்சுவரி அறையை அடைந்தவர், பிடித்துக் கொண்டிருந்த என் கையை உதறிவிட்டு குழந்தைகளைப் பார்த்து வசனம் பேசவேண்டும். ஆனால், என் கையை உதறுவதாக நினைத்துக் கொண்டு, வேகமாக தள்ளிவிட்டார். நான் கீழே விழுந்து விட்டேன்.

    ஆனால், உணர்ச்சிமயமாக நடிப்பில் மூழ்கிவிட்ட ராமராவ் அதை கவனிக்கவில்லை. உயிரற்ற குழந்தைகளைப் பார்த்து ஆக்ரோஷமாக பேசிக்கொண்டே போனார். வசனத்தை அவர் பேசி நிறுத்திய பிறகுதான், என்னை அவர் உதறிய வேகத்தில் நான் விழுந்ததை புரிந்து அதிர்ந்து போனார். என்னிடம் வருத்தம் தெரிவித்தார். பெரிய நடிகராக இருந்தும் அவர் வருத்தம் தெரிவித்தது என்னை நெகிழச் செய்தது. "அதெல்லாம் ஒன்றுமில்லை'' என்று கூறி அவரது வருத்தத்தை சரி செய்தேன்.

    தெலுங்குப் படப்பிடிப்புக்கு போனால் என்னைப் பார்த்த மாத்திரத்தில், "லதா காரு! பிரதர் நல்லாயிருக்காரா?'' என்று கேட்பார். அவர் `பிரதர்' என்று சொல்வது எம்.ஜி.ஆரை. இருவரிடமும் அப்படியொரு சகோதர பாசம் இருந்தது.

    தெலுங்கில் நாகேஸ்வரராவுடன் நான் நடித்த "அந்தால ராமுடு'' நன்றாக ஓடியது. "உலகம் சுற்றும் வாலிபன்'' படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெற்று நடித்த படம் இது.

    அதுமாதிரி `காந்தி புட்டின தேசம்' படத்தில் கிருஷ்ணம ராஜ×வுடன் சேர்ந்து நடித்தேன். இப்படத்தில் நடித்ததற்காக, ஆந்திர அரசின் விருது எனக்குக் கிடைத்தது.''

    இவ்வாறு லதா கூறினார்.
    நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.
    நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.

    இதுபற்றி லதா கூறியதாவது:-

    "15 வயதில் நடிக்க வந்து விட்டாலும் என் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் எம்.ஜி.ஆர். எனக்கு போன் செய்து வாழ்த்துவதுண்டு. என் 18-வது பிறந்த நாளன்றும் காலையிலேயே போனில் வாழ்த்தினார். "மதியம் ஆபீசுக்கு வரமுடியுமா?'' என்று கேட்டார்.

    போனேன். என்னைப் பார்த்ததும், "உங்கம்மாவுக்கு நான் பண்ணின வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். இப்ப நான் ஒண்ணு கேக்கறேன். செய்வியா?'' என்று கேட்டார்.

    அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. அவரே விளக்கினார். "லதா! உனக்கு 18 வயது பிறந்து விட்டது. இப்போது நீ மேஜராகி விட்டாய். உங்கம்மா உன் நடிப்பு தொடர்பாக முன்பு போட்டுக் கொடுத்திருந்த காண்டிராக்ட் இனி செல்லுபடியாகாது. இப்போது நான் போட்டிருக்கும் புதிய காண்டிராக்டில் கையெழுத்து போடுவாயா?'' என்று விளக்கி என் பதிலை எதிர்பார்த்தார்.

    நான் எதுவும் பேசாமல், அவரிடம் இருந்த காண்டிராக்ட் பேப்பரை வாங்கி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

    என்ன ஏதென்று கூட கேட்காமல் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது, அவருக்கு மிக ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனாலும், பட உலகத்தில் அவர் என்னை அவரது படங்களில் ஜோடியாக நடிக்க வைத்திராவிட்டால் நான் ஏது?

    ஆனால் புது ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததால், மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்க கேட்டு வந்த வாய்ப்புகளை நான் ஏற்க முடியாமல் போயிற்று. சிவாஜி படத்தில் கூட "டாக்டர் சிவா'', "அவன்தான் மனிதன்'' என்று என்னைத் தேடி வந்த 2 படங்களில் நடிக்க முடியாமல் போயிற்று.

    ஆனாலும், எம்.ஜி.ஆர். என்னிடம், மற்றவர்கள் படங்களில் நடிக்கக் கூடாது என்று ஒருபோதும் சொன்னதில்லை. "என்னிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு நடி. அப்படிச் செய்தால் படப்பிடிப்பு தேதிகள் இடிக்காமல் இருக்கும்'' என்றுதான் சொல்லியிருந்தார்.

    சிவாஜியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போதுதான் சிவாஜி நடிக்கும் "சிவகாமியின் செல்வன்'' படம் தயாராக இருந்த நேரம். படத்துக்கு 2 கதாநாயகிகள். ஒரு கதாநாயகி வாணிஸ்ரீ. இன்னொரு கதாநாயகியின் கேரக்டர் படத்தின் பிற்பகுதியில்தான் வரும் என்றார்கள். அதாவது பெரிய சிவாஜியின் மனைவி வாணிஸ்ரீ. அவரின் வாரிசாக உருவாகும் சிவாஜிக்கு யாரைப் போடலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள்.

    இந்த தகவல் என் காதுக்கு வந்ததும் இந்த கேரக்டரையாவது ஏற்று நடிப்போமே என்று தோன்றியது. அதோடு மிகக்குறைந்த நாட்களே கால்ஷீட் கேட்டார்கள். அதனால் சிவாஜி படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் அந்த கேரக்டரில் நடிக்க `ஓ.கே' சொல்லிவிட்டேன்.

    செட்டில் என்னை ரொம்ப மரியாதையாக நடத்தினார், சிவாஜி. "அண்ணனுடன் (எம்.ஜி.ஆர்) நடிக்கிறீங்க. என் கூட இது முதல் படம். நடிப்பில் எந்த மாதிரி சந்தேகம்னாலும் தயங்காம கேளுங்க'' என்று சொன்னவர், "உங்க அப்பா என்னோட நல்ல நண்பர் தெரியுமா?'' என்றும் சகஜமாக பேசி, பதட்டமில்லாமல் நடிக்க வைத்தார். ஆனாலும் தொடர்ந்து அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையாமலே போய்விட்டது.''

    இவ்வாறு லதா கூறினார்.

    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது.

    அதுபற்றி லதா கூறியதாவது:-

    "நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன்.

    இந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.

    மறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்.

    எனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது.

    நடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார். "கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும்'' என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன்.

    நிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, "நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும்'' என்று பாராட்டினார்.

    இரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது.''

    இவ்வாறு லதா கூறினார்.

    தமிழில் எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்த நேரத்தில், தெலுங்குப் படங்களில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணமராஜ×, சோபன்பாபு ஆகியோருடன் லதா நடிக்கவே செய்தார். இதில் பல படங்கள் `ஹிட்' படங்கள்.

    "சிரித்து வாழவேண்டும்'' என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த நேரத்தில், அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவுடன் சேர்ந்து நடித்தார். (மும்மொழிப் படத்தில் கதாநாயகி)

    "சிவகாமியின் செல்வன்'' படத்தில் சிவாஜியும், லதாவும். இவர்கள் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்.

    "வட்டத்துக்குள் சதுரம்'' என்ற படத்தில் சுமித்ரா, லதா
    எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.
    எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.

    "உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்புக்காக சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்ற லதா, அங்கே பள்ளி மாணவிக்கே உரிய மனநிலையில் அந்த இயற்கை சூழ்நிலையை அனுபவித்தார்.

    ஒருமுறை, இஷ்டத்துக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆரிடம் மாட்டிக்கொண்டார்.

    அந்த அனுபவம் பற்றி லதா கூறியதாவது:-

    "ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து வந்ததும் ரூமில் நானும், மஞ்சுளாவும் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அப்போது 'ஐஸ்கிரீம்' சாப்பிடலாமா என்று கேட்டார், மஞ்சுளா. எனக்கும் ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை ஆசை. எனவே, "சாப்பிடலாமே" என்றேன்.

    உடனே ரூமில் இருந்த இன்டர்காமில் ஐஸ்கிரீம் ஆர்டர் கொடுத்தேன். நான் கேட்ட 'வெண்ணிலா' ஐஸ்கிரீம் கிடைத்தது. நானும், மஞ்சுளாவும் சேர்ந்து இஷ்டத்துக்கு ஐஸ்கிரீமை வெட்டினோம்.

    இரண்டாவது நாளும் படப்பிடிப்பு முடிந்து வந்ததும், இதே கதைதான். இப்போது ஆர்டர் கொடுத்த ஐஸ்கிரீம், அறைக்கு வந்து சேர்ந்ததும், ஆர்வத்துடன் சாப்பிடத் தொடங்கினோம்.

    அப்போது பார்த்து கதவு 'தட் தட்' என தட்டப்பட்டது. திறந்து யாரென்று பார்த்தால், வெளியே எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார்!

    எனக்கு அதிர்ச்சி. எம்.ஜி.ஆரை பார்த்ததும் பயந்துபோன மஞ்சுளா, அந்த பதட்டத்திலும் ஐஸ்கிரீமை மறைத்து வைத்து விட்டார்.

    உள்ளே வந்த எம்.ஜி.ஆர், "ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறதே" என்று சொல்லி எங்கள் இருவர் முகத்தையும் பார்த்தார். நாங்கள் எதுவுமே நடக்காததுபோல் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டிருந்தோம்.

    நாங்கள் ஆர்டர் கொடுத்து, ஐஸ்கிரீம் வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை தெரிந்து கொண்டுதான் அவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார்.

    அருகில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டு உட்கார்ந்தார், எம்.ஜி.ஆர். என்னை அருகில் அழைத்தார். "என்ன லூசு! நீங்க ரூம்ல இருந்து ஏதாவது வேணும்னு ஆர்டர் கொடுத்தால், அதுக்கான பில் எங்ககிட்ட தானே வரும். எனக்கும் ஐஸ்கிரீம் அதுவும் வெண்ணிலா ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். சரி சரி! ஒளிச்சு வெச்சிருக்கிறதை எடுங்க! சேர்ந்து சாப்பிடலாம்" என்றபோது எங்கள் முகத்தில் ஈயாடவில்லை.

    இப்படி ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் எங்கள் குழந்தை மனதை தெரிந்து கொண்டவர், அவரும் குழந்தை மாதிரி எங்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதை இப்போது நினைத்தாலும் மனசுக்குள் 'ஜில்'லென்ற அனுபவமாக இருக்கிறது."

    இவ்வாறு லதா கூறினார்.

    உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக வெளிநாட்டில் முதலில் எடுத்தது 'சிரித்து வாழவேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' பாட்டுதான். இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர், நாகேஷ், வெளிநாட்டு குழந்தைகளுடன் லதாவும் ஆடிப்பாடி நடித்தார்.

    இந்தப் பாடல் காட்சியின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "நடிகர் நாகேஷ் திறமையான நடிகர். ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்பது தெரியும். ஆனால், நகைச்சுவை என்பது எப்போதும் அவரிடம் குடிகொண்டிருக்கிறது என்பதை அவருடன் பங்குகொண்ட அந்த படப்பிடிப்பின்போதுதான் அனுபவரீதியாக உணர்ந்து கொண்டேன். திடீர் திடீரென அவர் அடிக்கிற கமெண்டுகளுக்கு எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

    எம்.ஜி.ஆர் - நான் - நாகேஷ் இருக்கிற நேரங்களில் இப்படி நாகேஷ் அடிக்கிற ஜோக்குகளுக்கு நான் சத்தம் போட்டு சிரித்து விடுவேன். இரண்டொரு முறை இதை கண்டு கொள்ளாமல் விட்ட எம்.ஜி.ஆர், அடுத்த முறை நான் சிரித்தபோது, "என்ன நீ! வயசுப்பொண்ணு இப்படியா சத்தமா 'கெக்கேபிக்கே'ன்னு சிரிக்கிறது?" என்று கேட்டார். கேள்வியில் கொஞ்சம் கோபம் இருந்தது. அப்புறம் நான் ஏன் வாயை திறக்கப்போகிறேன்?

    "உலகம் சுற்றும் வாலிபன்" படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் அந்தப்படம் வெளிநாடுகளிலும் ரிலீசாகி வெற்றி பெற்றதை அறிந்தேன்.

    ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் "வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க வேண்டும். எனவே தயாராக இரு" என்றார்.

    வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் வெற்றிக்காக மறுபடியும் வெளிநாடு போகும் வாய்ப்பு என்பது எனக்கு எதிர்பாராதவிதமாக கிடைத்தது. பாரீஸ், லண்டன், சுவிட்சர்லாந்து, ரஷியா என இந்த வெற்றிப்பயணம் தொடர்ந்தது. ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர். எத்தனை அன்பு கொண்டவர் என்பதை இந்தப் பயணத்தில் கண்கூடாக உணர முடிந்தது.

    இந்தப் பயணத்தில் நான் பட்ட ஒரே சிரமம், சாப்பாட்டு கஷ்டம்தான். அதுவும் ரஷியாவில் சாப்பாடு காரமோ காரம். இங்குள்ள 'ஆந்திர உணவு'தான் நமக்கு காரமாக தெரியும். ஆனால் ரஷிய உணவை சாப்பிட்டுப் பார்த்தவர்கள் ஆந்திர உணவை 'காரம்' என்று சொல்லவேமாட்டார்கள். அந்த அளவுக்கு காரமானது ரஷிய உணவு.

    இந்த சாப்பாட்டு விஷயத்தில் 2 நாள் சமாளித்துப் பார்த்தேன். பிறகு முடியவில்லை.

    ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரிடம் சண்டைக்கே போய்விட்டேன். "போதும்! இனியும் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. என்னை ஊருக்கு அனுப்பி வெச்சிருங்க" என்று அழாத குறையாக முறையிட்டேன். என் உணர்வுகளை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், "நீ வெளியே சொல்கிறாய். என்னால் இந்த கஷ்டத்தை வெளியே சொல்ல முடியவில்லை. எனக்காக கொஞ்சம் பொறுமையாக இரு" என்று என்னை ஆறுதல்படுத்தினார்.

    ஒரு வழியாக லண்டனுக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த இந்திய உணவகத்துக்கு அழைத்துப்போன எம்.ஜி.ஆர், "இப்போது உன் சாப்பாட்டுக் கவலை தீர்ந்தது. உன் இஷ்டத்துக்கு எது வேண்டுமானாலும் சாப்பிடு" என்றார். அவரும் இந்திய உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டார்.

    சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணத்தின் போதுதான் 'தாய்மை'க் குணம் கொண்ட எம்.ஜி.ஆரை பார்த்தேன். அங்கிருந்த பனிமலையை சுற்றிப் பார்க்க எம்.ஜி.ஆருடன் செருப்பு அணிந்தபடி கிளம்பினேன். போன பிறகுதான் 'ஷூ' இல்லாமல் நடக்க முடியாது என்று தெரிந்தது. பனிமலை பயணத்தில் குளிர் தாக்கி நடுங்கவும் ஆரம்பித்து விட்டேன். உடனே அவர் போட்டிருந்த கோட்டை கழற்றி என்னை போட்டுக்கொள்ளச் சொன்னார்.

    இப்படி பாதி தூரம் கடந்த நிலையில், 'இனி என்னால் நடக்க முடியாது' என்றேன். என் நிலையை புரிந்து கொண்டவர், என்னை அலாக்காக தூக்கியபடி நடந்து, பாதுகாப்பான இடம் வந்ததும் இறக்கி விட்டார். அவர் மட்டும் அன்றைக்கு இப்படி செய்திராவிட்டால், அந்த குளிரிலேயே விரைத்துப் போயிருப்பேன்."

    இவ்வாறு லதா கூறினார்.
    சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.
    "சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.

    புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. தாயார் பர்வதம் அம்மாள்.

    இவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனினும், சொக்கலிங்கம் பிள்ளை தாசில்தாராக வேலை பார்த்ததால், ஊர் ஊராகப் போகவேண்டியிருந்தது.

    இந்நிலையில், கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலிïரில், 1906-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி புதுமைப்பித்தன் பிறந்தார்.

    புதுமைப்பித்தனுக்கு எட்டு வயதானபோது, தாயார் பர்வதம் அம்மாள் காலமானார்.

    அதன்பின், சொக்கலிங்கம் பிள்ளை மறுமணம் செய்து கொண்டார்.

    புதுமைப்பித்தன் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

    சொக்கலிங்கம் பிள்ளை 1918-ல் ஓய்வு பெற்ற பின், சொந்த ஊரான திருநெல்வேலியில் குடியேறினார்.

    புதுமைப்பித்தன், திருநெல்வேலி யோவான் கல்லூரியிலும், பின்னர் இந்துக் கல்லூரியிலும் படித்து 1931-ல் "பி.ஏ'' தேறினார்.

    மகன் அரசாங்க உத்தியோகத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொக்கலிங்கம் பிள்ளை விரும்பினார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    1931 ஜுலை மாதத்தில், புதுமைப்பித்தனுக்கும், திருவனந்தபுரத்தில் மராமத்து இலாகா அதிகாரியாக இருந்த பி.டி.சுப்பிரமணிய பிள்ளையின் மகள் கமலாவுக்கும் திருமணம் நடந்தது.

    புதுமைப்பித்தன் நண்பர்களுடன் இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடுவது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். ஆனால் மகன் வெட்டிப்பொழுது போக்கிக் கொண்டிருப்பதாக சொக்கலிங்கம் பிள்ளை நினைத்தார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறுகள்  ஏற்பட்டன.

    இந்தச் சமயத்தில், கே.சீனிவாசன் "மணிக்கொடி'' என்ற இலக்கியப் பத்திரிகையை சென்னையில் தொடங்கினார். டி.எஸ்.சொக்கலிங்கம், "வ.ரா'' ஆகியோர் அவருக்குத் துணையாக இருந்தனர்.

    "மணிக்கொடி''யில் புதுமைப்பித்தன் கதைகள் எழுதினார். மற்றும் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் "காந்தி'', சங்கு சுப்பிரமணியத்தின் "சுதந்திரச் சங்கு'' ஆகிய பத்திரிகைகளிலும் அவருடைய கதைகள் பிரசுரமாயின.

    புதுமைப்பித்தனின் சிறுகதைகள் புதிய கோணத்தில், தனித்தன்மையுடன் திகழ்வதை "வ.ரா''வும், டி.எஸ்.சொக்கலிங்கமும் பாராட்டி, புதுமைப்பித்தனுக்குக் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார்கள்.

    புதுமைப்பித்தனுக்கு இருந்த இலக்கிய மோகம் அவரைச் சென்னைக்கு இழுத்துச் சென்றது. "மணிக்கொடி''யில் எழுதியதுடன், ராய.சொக்கலிங்கத்தின் "ஊழியன்'' பத்திரிகையில் உதவி ஆசிரியர் பணியையும் கவனித்தார். எனினும், அந்தப்பதவியில் அவர் அதிக காலம்

    நீடிக்கவில்லை."மணிக்கொடி''யில் எழுதி வந்த புதுமைப்பித்தன், பின்னர் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் அழைப்பின் பேரில், "தினமணி'' நாளிதழின் துணை ஆசிரியர் பொறுப்பில் சேர்ந்தார்.

    "தினமணி'' ஆண்டு மலரைத் தயாரிக்கும் பொறுப்பு புதுமைப்பித்தனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு மலர்களைச் சிறந்த இலக்கியப் பெட்டகங்களாகப் புதுமைப்பித்தன் கொண்டு வந்தார். "நாசகாரக்கும்பல்'' போன்ற அவருடைய சிறந்த சிறுகதைகள், "தினமணி'' ஆண்டு மலரில் வெளிவந்தவைதான்.

    1943-ல் டி.எஸ்.சொக்கலிங்கம் "தினமணி''யை விட்டு விலகி, "தினசரி''யைத் தொடங்கினார். புதுமைப்பித்தனும் "தினசரி''யில் சேர்ந்தார். பிறகு சொக்கலிங்கத்துடன் மனத்தாங்கல் ஏற்பட்டு, தினசரியை விட்டு விலகினார்.

    "தினமணி''யில் புதுமைப்பித்தனுடன் பணியாற்றிய சிலர் சினிமாத்துறையில் புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். "இளங்கோவன்'' என்ற புனைப்பெயர் கொண்ட ம.க.தணிகாசலம், சினிமா வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பறந்தார். "மணிக்கொடி'' ஆசிரியராக இருந்த பி.எஸ்.ராமையா சினிமா டைரக்டராக உயர்ந்திருந்தார். "மணிக்கொடி'' துணை ஆசிரியர் கி.ரா. (கி.ராமச்சந்திரன்) ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார்.

    எனவே சினிமா துறையில் நுழைய விரும்பினார், புதுமைப்பித்தன். "காமவல்லி'' என்ற படத்திற்கு வசனம் எழுதினார். அதற்குக் கணிசமான பணமும் கிடைத்தது.

    "அவ்வையார்'' படத்தைத் தயாரிக்க முதன் முதலாக ஜெமினி திட்டமிட்டபோது, கி.ரா.வும், புதுமைப்பித்தனும் சேர்ந்து வசனம் எழுதினார்கள். (பின்னர் கே.பி.சுந்தரம்பாள் நடிக்க, ஜெமினி தயாரித்த அவ்வையார் படத்தில் புதுமைப்பித்தனின் வசனம் இடம் பெறவில்லை)

    1945-ம் ஆண்டைப் பொறுத்தவரை புதுமைப்பித்தனுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. சொந்தத்தில் சினிமாப்படம் எடுக்கத் தீர்மானித்து, தன் தாயார் பெயரில் "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்'' என்ற படக் கம்பெனியையும் தொடங்கினார். குற்றாலக் குறவஞ்சி கதையை "வசந்தவல்லி'' என்ற பெயரில் படமாக்க வேண்டும் என்பது, அவரது திட்டம்.

    இதில், கதாநாயகனாக நாகர்கோவில் மகாதேவன் நடிப்பதாக இருந்தது. மகாதேவனை, சில நண்பர்கள் புதுமைப்பித்தனிடம் அழைத்து வந்தனர். பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்து முடிந்தது.

    "கதாநாயகனுக்கு அட்வான்ஸ் கொடுங்கள்'' என்று ஒருவர் கூற, புதுமைப்பித்தன் தன்னிடம் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அட்வான்சாகக் கொடுத்தார்!

    அதன்பின், சில பத்திரிகைகளில் "வசந்தவல்லி'' பற்றி விளம்பரங்கள் வெளிவந்தன. படம் தயாரிக்கப்படவில்லை.

    அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி, சட்டத்துடன்

    2ஷி ஆண்டு காலம் போராடி, 1947 ஏப்ரலில் விடுதலையானார்.

    அவருடைய மகத்தான வெற்றிப்படங்களான "ஹரிதாஸ்'', "சிவகவி'', "அசோக்குமார்'', "அம்பிகாபதி'' முதலான படங்களுக்கு வசனம் எழுதியவர் இளங்கோவன். அவருடன் மனத்தாங்கல் கொண்டிருந்த பாகவதர், விடுதலைக்குப்பின் சொந்தமாகத் தயாரித்த ''ராஜமுக்தி'' படத்துக்கு வசனம் எழுத புதுமைப்பித்தனை அழைத்தார்.

    படப்பிடிப்பு முழுவதும், புனாவில் அகில இந்தியப் புகழ் பெற்ற பிரபாத் ஸ்டூடியோவில் நடந்தது. புனாவுக்குச் சென்று, அங்கேயே தங்கி வசனம் எழுதினார், புதுமைப்பித்தன்.

    வசனம் எழுதும் பணி முடிவடையும் தருணத்தில், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

    காசநோய் காரணமாக, அவர் உடல் நிலை வரவர மோசம் அடைந்தது. 1948 மே மாதம் முதல் வாரத்தில் மனைவி கமலா தங்கியிருந்த திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்தார். நடக்க முடியாமல் கம்பு ஊன்றி நடக்க வேண்டிய அளவுக்கு, அவர் உடல்நிலை மோசமடைந்திருந்தது.

    "ராஜமுக்தி''க்கு வசனம் எழுதியதில் ஓரளவு பணம் கிடைத்திருந்த போதிலும், முழு நேர எழுத்தாளராக வாழ்ந்த காரணத்தாலும், தந்தையுடன் சுமுக உறவு இல்லாததாலும், புதுமைப்பித்தன் இறுதிக்காலத்தில் வறுமையுடன் போராட வேண்டியிருந்தது.

    மனைவி கமலாவையும், ஒரே மகள் தினகரியையும், தமிழ்  இலக்கிய உலகையும் தவிக்க விட்டு, 30-6-1948 அன்று புதுமைப்பித்தன் காலமானார்.

    புதுமைப்பித்தன் வரலாற்றில் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சி:

    தமிழ் இலக்கியத்துக்கு இணையற்ற சேவை செய்த புதுமைப்பித்தன் வறுமையுடன் போராடி தமது 42-வது வயதில் காலமானார். இதற்கு 20 ஆண்டுகளுக்குப்பின், தமிழக அரசு லாட்டரியில் அவர் மனைவி கமலாவுக்கு ரூ.2 லட்சம் பரிசு கிடைத்தது.

    அந்த சமயத்தில், புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரிக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. "மகள் திருமணத்துக்கு, தந்தை கொடுத்த சீதனமாக இந்த பணத்தைக் கருதுகிறேன்'' என்றார், கமலா விருதாசலம்.

    தினகரி திருமணம் சிறப்பாக நடந்தது. கணவர் பெயர் சொக்கலிங்கம். இவர் என்ஜினீயர்.

    புதுமைப்பித்தன் நூல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.

    புதுமைப்பித்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
    சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.
    சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.

    "மனோரஞ்சிதம்'' திரைப்படம் வெளிவராமல் போனதால் மணிசேகரன் மனம் வருந்தினார் என்றாலும், சினிமா மோகம் அவரை  விடவில்லை.

    கீதையை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய "யாகசாலை'' என்ற நாவலை சொந்தமாக படமாக்க எண்ணினார். 1,200 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல் இது.

    "இலக்கிய உலகில் பேரும் புகழுமாக இருக்கிறீர்கள். சினிமா நமக்குத் தேவையா?'' என்று மனைவி சொன்னதை அவர் கேட்கவில்லை.

    வேகமாக வசனங்களை எழுதி முடித்தார்.

    இவருடைய நாவல்களில் மனதைப் பறிகொடுத்து, இவருக்கு நண்பரானவர் ஜெமினிகணேசன். அவருக்கு படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுக்கத் தீர்மானித்தார்.

    இதன்பின் நடந்தது பற்றி மணிசேகரன் கூறியதாவது:-

    "யாகசாலை நாவலைப் படித்துப் பாராட்டியவர், எம்.ஜி.ஆர். நான் அந்த நாவலைப் படமாக்கப்போகிறேன் என்பதை அறிந்து `இது புரட்சிகரமான நாவல். படமாக வந்தால், நாவலின் ஜீவன் கெட்டுப்போகும். படமாக்கும் முயற்சியைக் கைவிடுங்கள் என்று கூறினார்.

    நான் கேட்கவில்லை. அதாவது, என் விதி, அவர் அறிவுரையைக் கேட்க மறுத்து விட்டது!

    படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தன.

    இந்தப் படத்தின் கதாநாயகி, நல்ல குடும்பத்தில் பிறந்து, விதி வசத்தால் கற்பை இழக்க, பிறகு அதுவே தொழிலாய் போய்விட, கடைசியில் நோய்வாய்படுகிறாள்.

    இந்தக் காலக்கட்டத்தில் "சிவப்பு ரோஜாக்கள்'' படத்தில் அறிமுகமாகியிருந்த வடிவுக்கரசிக்கு, கதாநாயகி வேடம் கொடுத்தேன்.

    படத்தில் இரு கதாநாயகர்கள். ஒருவர், கீதையில் வரும் கண்ணன் பாத்திரத்துக்கு ஒப்பானவர். அந்தக் கண்ணன் தேர் ஓட்டினான். இந்த கண்ணன் குதிரை ஓட்டுபவன். இந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர் அமையவில்லை. பலபேரை பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை.

    இன்று திரை உலகிலும், அரசியலிலும் விஸ்வரூபம் எடுத்துள்ள விஜயகாந்த், அப்போதுதான் திரைப்பட உலகுக்கு வந்திருந்தார். அவரை என்னுடைய `கண்ணன்' கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்த நேரத்தில், விதி விளையாடியது.

    என் கையில் போதிய பணம் இல்லை. படப்பிடிப்புக்கு செல்ல, மேலும் ரூ.30 ஆயிரம் தேவைப்பட்டது. அப்போது ஒரு புதுமுக நடிகர் என்னிடம் வந்தார். நல்ல கதாபாத்திரம் கொடுத்தால் ரூ.30 ஆயிரம் `பைனான்ஸ்' செய்வதாகக் கூறினார். இதனால் நான் விஜயகாந்தை இழக்க நேரிட்டது. அன்று நான் அவரை பயன்படுத்தி இருந்தால், ஒரு சரித்திரத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தவனாக இருந்திருப்பேன். விதியின் சதியால், அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போயிற்று.

    படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் வெளிப்புறக் காட்சிகளை எடுக்கத் தீர்மானித்தேன். மதராந்தகத்தின் அருகேயுள்ள கோட்டைக்காடு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஒய்.ஜி.மகேந்திரன், கே.நட்ராஜ், டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தனர்.

    மேற்கொண்டு, ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டபோது, மீண்டும் பணமுடை ஏற்பட்டது. அப்போது, இப்ராகிம் என்ற தயாரிப்பாளர் என்னை நாடி வந்தார். என்னுடைய "அகிலா'' என்ற நாவல், நடிகை சுஜாதாவுக்கு மிகவும் பிடித்தமானதாகும். அவர் சொல்லி, அக்கதையை என்னுடைய இயக்கத்தில் படமாக்க விரும்பி, இப்ராகிம் வந்திருந்தார்.

    வெளிப்படங்களுக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதை அவரிடம் தெரிவித்து, "வேண்டுமானால் கதையை வாங்கிக் கொண்டு, நீங்களே தயாரியுங்கள். கூடுதலோ, குறைவோ, ஒரு தொகையை தவணை முறையில் கொடுக்காமல் மொத்தமாக கொடுத்துவிடவேண்டும்'' என்று தெரிவித்தேன்.

    அதன்படி அவர்கள் ஒரே `செக்' கொடுத்தார்கள். அந்தத் தொகை, "யாகசாலை'' படத்தை தொடர்ந்து உருவாக்க உதவியது.

    யாகசாலை தயாராகிக் கொண்டிருந்தபோதே, "அகிலா'' கதை "மீண்டும் பல்லவி'' என்ற பெயரில் படமாக வெளிவந்தது. `கதை: கோவி.மணிசேகரன்' என்று டைட்டிலில் போட்டார்கள்.

    "யாகசாலை'' 95 சதவீதம் முடிந்து விட்டது. ஜெமினிகணேசன் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் பாக்கி. இந்த நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவருடைய சம்மதத்தைப் பெற்று அந்தப் பாத்திரத்தில் பூரணம் விஸ்வநாதனை நடிக்க வைத்தேன். அவரும் நன்றாக நடித்தார்.

    படம் ரிலீஸ் தேதியை நெருங்கியபோது, ஒரு கடன்காரர் வந்து மென்னியைப் பிடித்தார். படத்தை, "அவுட்ரைட்'' முறையில் நான் விற்று விட்டதால், படம் வெளியான பின்னர் பணம் வராது என்று அவர் நினைத்து விட்டார் போலும்!

    வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த நிலத்தை விற்று, கடனை அடைத்தேன்.

    "யாகசாலை'' ரிலீஸ் ஆகியது. நான்கே நாளில் ரிசல்ட் தெரிந்து விட்டது. படம் "அவுட்!'' சென்னை எமரால்டு தியேட்டரில் மட்டும் நான்கு வாரம் ஓடியது.

    அன்றே சினிமாவுக்கு தலைமுழுகத் தீர்மானித்தேன். ஒரு சனிக்கிழமையன்று, எண்ணை வாங்கி வரச்செய்து, தலைமுழுகினேன்!

    என்னிடம் புகழ்வாய்ந்த - உறுதியான பேனா இருந்ததால், என் வாழ்க்கை தப்பியது. இல்லையென்றால், `நடுத்தெரு நாராயணன்' ஆகியிருப்பேன். நான் வணங்கும் சக்தி என்னைக் காப்பாற்றினாள்.

    தொடர்ந்து இலக்கியப்பணிகளில் ஈடுபட்டேன்.

    சென்னை தொலைக்காட்சிக்கு, புதுமுகங்களை வைத்து நான் தயாரித்த "ஊஞ்சல் ஊர்வலம்'' என்ற தொடர், பெரிய வெற்றி பெற்றது.

    அதன் பிறகு திரிசூலி, அக்னிப் பரீட்சை முதலான தொடர்களும் வெற்றி பெற்றன.

    பெரிய திரையில் வெற்றி பெறாமல் போன நான், சின்னத்திரையில் வெற்றி கண்டேன்.

    சினிமாவில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் கவனம் செலுத்தியதால், 3,571 பாடல்கள் கொண்ட "கோவி.ராமாயண''த்தை என்னால் எழுத முடிந்தது.

    நான் விதி பற்றி பல முறை குறிப்பிட்டேன். நமக்கு நல்ல வாய்ப்பு வரும்போது, விதி குறுக்கிட்டு கெடுத்து விடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்வேன்.

    இந்நாளைய இணையற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1973-ல் சினிமா உலகில் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்த சிவாஜிராவ். நான் பாலசந்தரிடம் பயிற்சி பெற்றுவிட்டு, சினிமா தயாரிக்கலாம் என்று இருந்த நேரம்.

    ரஜினியுடன் நடிப்பு பயின்ற கோபால் என்ற நண்பர், ரஜினிக்கு வாய்ப்பு கேட்டு வந்தார். படம் தொடங்கும்போது நிச்சயம் அவர் இடம் பெறுவார் என்று கூறினேன்.

    ரஜினி என் வீட்டுக்கு வருவார். சிகரெட் வித்தைகளை பிள்ளைகளிடம் காட்டி மகிழ்விப்பார்.

    இதற்கிடையே ரஜினி, "அபூர்வராகங்கள்'' படத்தில் அறிமுகம் ஆகிவிட்டார். ஏராளமான படங்களுக்கு ஒப்பந்தம் ஆனார்.

    "தென்னங்கீற்று'' படம் ஆரம்பம் ஆனதும், ரஜினியிடம் பேசினேன். "குரு! இருபது நாட்களுக்கு என்னை விட்டு விடுங்கள். அப்புறம் ஒரு வாரம் பெங்களூர் வந்து உங்கள் மனதைக் குளிரச் செய்கிறேன்'' என்றார்.

    ஆனால், படத் தயாரிப்பாளரோ இதற்கு சம்மதிக்கவில்லை. ஏற்கனவே, மற்ற நடிகர் - நடிகைகளிடம் பெற்ற `கால்ஷீட்'படி உடனே படத்தைத் தொடங்க வேண்டும் என்றார். இதனால் என் படத்தில் ரஜினி இடம் பெறவில்லை. இதை விதி என்று சொல்லாமல், வேறு எப்படி சொல்வது?

    சினிமா உலகில் நுழைந்து விடவேண்டும் என்ற ஆசை கொண்ட இளைஞர்களும், இளம் நங்கையர்களும் ஏராளம். அவர்களுக்கு ஒன்று

    சொல்வேன்:`சினிமா என்பது பல ரசவாத வித்தைக் தெரிந்த ஒரு அழகான மாயமோகினி. அந்த மோகினியிடம் சென்றால், மீள்வது அரிது. அந்த மோகினியின் வித்தையில் பாதியேனும் தெரிந்தவர்கள் தப்பித்து திரும்பி வரலாம்; அல்லது மோகினியை அடிமைப்படுத்தி, அவளைக் காதலிக்கச் செய்யலாம். அந்த வித்தை தெரியாதவர்கள் நுழைந்து விட்டால், அந்த மோகினி நம் ரத்தத்தை உறிஞ்சி, சக்கையாகத்தான்

    துப்புவாள்!''இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.

    மணிசேகரன் - சரசுவதி தம்பதிகளுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்ற மூன்று மகன்கள். பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்று ஐந்து மகள்கள்.

    மூத்த மகன் அம்பிகாபதி, இளம் வயதில் காலமாகிவிட்டார். மற்ற 7 பேரும் படித்து, பட்டம் பெற்றவர்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது
    முதல்வன் படப்பிடிப்பின்போது, திடீரென்று கலவரம் மூண்டது. சரமசப் பேச்சு நடத்தி வெற்றி கண்டார், விஜயகுமார்.
    டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய முதல் படத்தில் விஜயகுமார்தான் ஹீரோ. முதல் படத்தில் நடித்ததில் இருந்தே எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜயகுமாருக்குமான நட்பு நீடித்து வருகிறது.

    எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில், விஜயகுமாரால் மறக்க முடியாத படம் "செந்தூரப்பாண்டி.'' இந்தப்படத்தில் விஜயகாந்த் அண்ணனாகவும், விஜய் தம்பியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களின் அப்பாவாக விஜயகுமார் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் விஜயகாந்த் -விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையையும் தீர்த்து வைத்தார்.

    எஸ்.ஏ. சந்திரசேகரின் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-

    "டைரக்டர் வி.சி.குகநாதனிடம் அசோசியேட் இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரிடம் நடிப்பு ஆர்வமும் இருந்தது. அதனால் குகநாதன் இயக்கிய "ஒளிமயமான எதிர்காலம்'' படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலும் நடித்தார். 

    டைரக்டராக வேண்டும் என்று முடிவு செய்தபோது, முதல் படத்தை சொந்தமாகவே தயாரித்து இயக்கினார். இதற்காக என்னை சந்தித்தவர், "அவள் ஒரு பச்சைக்குழந்தை'' என்றொரு படம் இயக்கி தயாரிக்கிறேன். நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்று கேட்டார்.

    புது இயக்குனர்களை ஊக்குவிப்பது என்பது எப்போதுமே என் இயல்பாக இருந்தது. எனவே, `நிச்சயம் நடிக்கிறேன்' என்றேன். எனக்கு ஜோடியாக பவானி என்றொரு புதுமுகம் நடித்தார்.

    முதல் படத்தையே சரியான பட்ஜெட் போட்டு அந்த பட்ஜெட்டுக்குள் முடித்தார், எஸ்.ஏ.சந்திரசேகர். படம் ரிலீசானபோது டைரக்டராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார்.

    தொடர்ந்து விஜயகாந்தை வைத்து சில படங்களை இயக்கியவர், மகன் விஜய்யை "நாளைய தீர்ப்பு'' என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார், தொடர்ந்து ரசிகன், தேவா என்று விஜய்க்கு ஏற்ற கதையை உருவாக்கி தயாரித்து இயக்கினார்.

    அவர் இயக்கிய "செந்தூரப்பாண்டி'' படத்தில் விஜயகாந்த் அண்ணன். விஜய் தம்பி. அவர்களின் அப்பாவாக நான் நடித்தேன். இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் பிணமாக நடித்த அனுபவம் மறக்க முடியாது. செத்துப்போகிற மாதிரி நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும், கண்களை திறந்தபடி உயிர் விட்டது போல் நடித்தேன்.

    சிலருக்கு உயிர் பிரியும்போது, கண் திறந்தபடி இருக்கும். அதை மனதில் வைத்து, கண்ணை திறந்தபடி உயிர் போனதாக அந்த கேரக்டரில் நடித்தேன். ஆனால்  அந்தக் காட்சியில் அடுத்தடுத்து நடக்கப்போகிற விஷயங்கள் எனக்குத் தெரியாது. பிணத்துக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டினார்கள். எண்ணைப் பிசுக்கு போக, அரப்பு போட்டு குளிக்க வைத்தார்கள். கண்ணை திறந்தபடி இருந்ததால் கண்ணில் எண்ணையும் அரப்புமாக விழுந்து, மகா எரிச்சல். என்றாலும் கேரக்டருக்காக தாங்கிக் கொண்டேன்.

    இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில்தான் ரசிகர்களை சமாளிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

    சென்னை டெலிவிஷன் நிலையத்துக்கு அருகில் உள்ள அண்ணா அரங்கில் விழா நடந்தது. விஜயகாந்த், விஜய் என படத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள்.

    விழாவில் விஜய் பேச ஆரம்பித்தபோது, ரசிகர்கள் பக்கமிருந்து பலத்த கூக்குரல்கள். விஜய் பேச்சை தொடர முடியவில்லை. விழாவுக்கு வந்திருந்த இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் கூச்சல் போட தொடங்கினார்கள். இதை அப்படியே விட்டால் விபரீதமாகி விடும் என்று தெரிந்து, உடனே நான் எழுந்து `மைக்'கை பிடித்தேன். "முதலில் பேச விடுங்கள்.

    ஒரு ஹீரோ பேசும்போது உங்களிடம் இருந்து உற்சாகமான கரகோஷம்தான் வரவேண்டும். அதற்குப்பதிலாக கூச்சல் போடுவது நாகரீகமல்ல. நீங்கள் உங்கள் அபிமான ஹீரோவை ஆதரிக்கும் விதத்தில் இவரை எதிர்ப்பதாகவே இது தெரியும். விஜயகாந்த் சார் இந்த விழாவுக்கு வந்திருக்கிறார். நீங்கள் விஜய் பேசும்போது எழுப்பும் கூக்குரல், விஜயகாந்த் சாரை கஷ்டப்படுத்துவதாக அமையும். கலைஞர்களுக்குள்ளான ஒற்றுமையை உங்களைப்போன்ற ரசிகர்களின் செயல் மாறுபடுத்தி விடக்கூடாது என்று பேசினேன்.

    ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். அதற்குப் பிறகு அமைதி என்றால் அமைதி. அப்படி ஒரு அமைதி. முழு விழாவும் உற்சாகமாய் நடந்து முடிந்தது. விழா முடிவில் நடிகர் விஜயகாந்தும், விஜய்யின் அப்பா சந்திரசேகரும் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.''

    இப்படிச் சொன்ன விஜயகுமார், இதே மாதிரியான ஒரு சம்பவம் ஷங்கர் இயக்கிய "முதல்வன்'' படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் நடந்திருப்பதாக தெரிவித்தார்.

    அதுபற்றி அவர் கூறியதாவது:-

    "டைரக்டர் ஷங்கர் பிரமாண்டத்துக்கு பெயர் போனவர். அவரது இயக்கத்தில் "முதல்வன்'' என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன்.

    இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு குற்றாலம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் நடந்தது. அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால் சுற்றுவட்டார கிராமமே கிளம்பி வந்திருந்தது. இந்த அதிகபட்ச கூட்டம் படப்பிடிப்புக்கு இடைïறாக இருக்கக்கூடாது என்பதற்காக போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள். 

    ஆனால், திரண்டிருந்த கூட்டம் போலீசுக்கு கட்டுப்படுவதாக இல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை. இதில் சிதறி ஓடிய கூட்டத்தில் கீழே விழுந்த ஒருவரின் கை உடைந்து விட்டது. இந்த விஷயம் `காட்டுத்தீ' போல் பரவி, பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் ஆவேசமாக திரண்டு வந்துவிட்டார்கள்.

    ஆனால், இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னதாக மாலை 5 மணிக்கு டைரக்டர் ஷங்கர் சென்னைக்கு கிளம்பி விட்டார். அன்றைய காட்சியுடன் அவுட்டோர் படப்பிடிப்பு முடிவடைவதால் எடுக்கவேண்டிய மீதிக்காட்சிகளை தனது அசோசியேட் டைரக்டர் மாதேஷிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டார்.

    இந்த நேரத்தில்தான் அடிதடி, கை முறிவு என பிரச்சினை விஸ்வரூபமெடுத்து விட்டது. கூட்டத்தில் இருந்த 4 பேர் ரொம்ப ஆக்ரோஷமாக பேசி, "எங்களுக்கு நஷ்டஈடு தராவிட்டால் கேமராவை பிடுங்குவோம். படப்பிடிப்பை நடத்த விடமாட்டோம்'' என்று வரிந்து கட்டுகிறார்கள்.

    இந்த மாதிரி இடங்களில் நாமும் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லப்போனால் நிலைமை இன்னும் விபரீதமாகி விடும். அதனால் நான் முன்வந்து அந்த 4 பேரிடமும் பேசினேன். "அடிபட்டவருக்கு உரிய சிகிச்சை, நஷ்டஈடு எல்லாம் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்றேன். மொத்தக் கூட்டமும் என் வார்த்தையை நம்பி அமைதியானது.

    ஆனால் இந்த நால்வர் அணி மட்டும் நான் சொன்னதை கேட்பதாக தெரியவில்லை. இதனால் "வாங்க! பேசலாம்'' என்று சொல்லி அந்த 4 பேரையும் நாங்கள் படப்பிடிப்புக்காக தயார் செய்திருந்த `டெண்ட்'டுக்கு அழைத்து வந்தேன். அதே நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணனை அழைத்து, "நான் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் சண்டைக்காட்சியை எடுத்து முடித்து விடுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.

    மறுபடி படப்பிடிப்பு தொடங்கியது. கும்பலாக நின்ற பொதுமக்களுக்கு தெரியும். 4 பேரிடமும் நான் தனியாக பேசிக்கொண்டிருந்ததால், அவர்கள் அனுமதித்தே படப்பிடிப்பு நடப்பதாக எண்ணி அமைதியாக இருந்தார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் நால்வர் அணியிடம் நான் நடந்த சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பேசி முடித்தேன். கடைசியில் `நஷ்டஈட்டுக்கு நானாச்சு' என்பதை ஏற்று கலைந்து சென்றார்கள்.

    எல்லாம் முடிந்து சென்னை வந்தபோது டைரக்டர் ஷங்கர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார். "சார்! நான் அங்கில்லாத அன்றைய சூழலில் பிரச்சினையை மிக அருமையாக கையாண்டு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உதவியிருக்கிறீர்கள். உங்களைப் பற்றி மாதேஷ் ரொம்பவே பெருமையாக என்னிடம் சொன்னார்'' என்று சொல்லி நன்றியும் தெரிவித்துக் கொண்டார். 

    பதிலுக்கு நான் ஷங்கரிடம், "நானும் கிராமத்தில் இருந்து வந்தவன்தானே. அதனால்தான் அந்த மக்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது'' என்றேன்.

    ஒரு நடிகரை எப்படி கணிக்கிறார் என்பது சுரேஷ் கிருஷ்ணா விஷயத்தில் ஆச்சரியமாக இருக்கும். இவரது இயக்கத்தில் "பாட்ஷா'', "சங்கமம்'', "ஆஹா'' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். `ஆஹா' படத்தில் ஒரு காட்சியை என் மீது நம்பிக்கை வைத்து ஒரே ஷாட்டில் எடுத்தார். இதற்கென ஆயிரம் அடி பிலிமை பயன்படுத்தினார்.

    மகள் திருமணத்தின்போது மூத்த மகன் இறந்து விட்டதாக இளைய மகன் என்னிடம் சொல்கிற அந்த காட்சி, படத்துக்கே மகுடமாக அமைந்தது. இந்தப் படத்தை தெலுங்கில் எடுத்தபோது, தெலுங்கிலும் என்னை அதே கேரக்டரில் நடிக்க வைத்தார்.

    அர்ஜூனை நடிகராக மட்டுமே பலருக்கு தெரியும். அவர் சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கதாசிரியர், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டரும்கூட. தமிழ்ப் படங்களில் வசனங்களை எப்படிச் சொன்னால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதை அவர் சொல்லித் தருவது தனியழகு. இந்த இடத்தில் இந்த டயலாக்குக்கு ரசிகர்களின் கரகோஷம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து சொல்லி விடுவார். அவர் சொன்ன அதே காட்சிக்கு ரசிகர்கள் கை தட்டுவார்கள்.

    டைரக்டராக ஆசைப்பட்டு நடிகரானவர் பார்த்திபன். நடிப்பிலும், டைரக்ஷனிலும் தனி முத்திரை பதித்தவர். ஒரு காட்சியை இவர் படமாக்குவதை பார்த்தாலே இவரது திறமையை தெரிந்து கொண்டுவிடமுடியும்.

    இளைய தலைமுறையில் என்னைப் பெரிதும் கவர்ந்த இன்னொருவர் லிங்குசாமி. இவர் அறிமுகமான "ஆனந்தம்'' படத்தில் எனக்கு சின்ன கேரக்டர். ஆனாலும் படத்தில் அதையும் பேசப்படும் கேரக்டராக உருவாக்கியிருந்தார். காட்சிகள் இயற்கையாக வரவேண்டும் என்பதற்காக நிறையவே மெனக்கெடுவார். இவர் இயக்கிய `ஜி' படத்திலும், தயாரித்த `தீபாவளி' படத்திலும்கூட எனக்கு நல்ல கேரக்டர். தமிழ் சினிமாவில் இவருக்கும் ஒரு உன்னத இடம் இருக்கிறது.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    மனோரஞ்சிதம் படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.
    "மனோரஞ்சிதம்'' படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.

    அதுபற்றி கோவி.மணிசேகரன் கூறியதாவது:-

    "மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம்.

    ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்!

    எஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.

    4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும் சோதனைதான்!

    "ரத்தக்கண்ணீர்'' படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்!

    10 முறை படம் எடுத்தும் காட்சி "ஓகே'' ஆகவில்லை.

    நேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். "ஒன் மோர் டேக்'' என்றேன்.

    சுப்பையாவோ, "சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே'' என்றார்.

    நான் விடவில்லை. "அண்ணே! இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்!'' என்றேன்.

    ஆனால் சுப்பையா, தன் "விக்''கை கழற்றி எறிந்தார். "பிரேக்'' என்று கூறிவிட்டார்.

    படப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் "பிரேக்'' என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.

    "மிஸ்டர் சுப்பையா! `பிரேக்' சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்!'' என்றேன்.

    சுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு

    நடைபெறவில்லை.சிவாஜிகணேசன் தீர்ப்பு

    நான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப்படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.

    அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.

    இரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.

    பிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, "நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்' என்று நீங்கள் சொன்னது தவறு'' என்றார்.

    ஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.

    "வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது? தயவு செய்து நடிக்க வாருங்கள்'' என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

    நான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.

    அப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, "சுந்தர்ராஜா! நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே!'' என்றார்.

    சிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.

    சிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.

    படம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.

    மூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.

    சிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.

    மீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.

    அவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.

    நான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். "முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா?'' என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.

    மீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை

    சுற்றியது."கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது'' என்று கிருஷ்ணன் - பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.

    பட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்?

    சிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.

    மனோரஞ்சிதம் வெளிவராமல் போனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது? இதுதான் விதி!''

    இவ்வாறு மணிசேகரன் கூறினார்.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.

    "சினிமாவில் ஹீரோவாக, இன்னொரு முறை முயற்சி செய்கிறேன்'' என்று அப்பா விடம் கூறிவிட்டு சென்னைக்கு வந்த விஜயகுமார், தனியாக ஒரு அறை எடுத்து தங்கினார். 6 வருட இடைவெளியில் எஸ்.வி.எஸ்.குழுவினர் நாடகங்கள்நடத்துவது குறைந்து விட்டதால், நடிகை சந்திரகாந்தாவின் நாடகக் குழுவில் சேர்ந்தார். கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.

    நாடகம் இல்லாத நாட் களில் மறுபடியும் சினிமா வாய்ப்புக்கு முயலுவார்.போகிற கம்பெனிகளில் எல்லாமே சொல்லி வைத்தது போல் `பார்க்கலாம்'என்பதே பதிலாக இருந்தது.

    இப்படியே 11 மாதம் ஆகிவிட்டது. ஒரு மாதத்திற்குள் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஊருக்குப் போகவேண்டியதுதான். இதனால் கடைசி ஒரு மாதத்தில் வாய்ப்பு தேடும் முயற்சியை தீவிரமாக்கினார்.

    அப்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-

    "சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் சிவாஜி சார் நடித்த படத்தை மேட்னி ஷோ பார்க்கச் சென்றிருந்தேன். படம் முடிந்ததும், அறைக்குத் திரும்புவதற்காக சாந்தி தியேட்டரை ஒட்டியுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது மாலை 6 மணி இருக்கும்.

    திடீரென என்னையே கூர்மையாக பார்த்தபடி வந்த ஒருவர், "தம்பி, எங்கே இருக்கிறீங்க?'' என்று கேட்டார்.

    சினிமாவுக்கு கதை எழுதும் கதாசிரியர் பாலமுருகன்தான் அவர். ஏற்கனவே வாய்ப்பு கேட்டுப் போனதில் அவரிடமும் நான் அறிமுக மாகியிருந்தேன். ரொம்பவும் அக்கறையாக என்னை விசாரிப்பார். என் முயற்சி நிச்சயம் வெற்றி தேடித்தரும் என்று மனதுக்குள் தன்னம் பிக்கை

    விதைப்பார்.அப்படிப்பட்டவர் என்னிடம் வந்து விசாரித்ததும் என் மனதிலும் கொஞ்சம் சந்தோஷம். "நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதோடுசினிமா வாய்ப் புக்கும் முயன்று கொண்டிருக் கிறேன்'' என்றேன்.

    அவர் உடனே ரொம்பவே உரிமையுடன் "ஏன் தம்பி என்னை வந்து பார்க் காமல் இருந்தீர்கள்? டைரக்டர் பி.மாதவன் சார்புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். உங்கள் முகவரி தெரியாததால் உடனடியாக உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று'' என்றவர், "தம்பி! நாளைக்கு காலை 10 மணிக்கு தேனாம்பேட்டையில் இருக்கும் மாதவன் சார் கம்பெனிக்கு வந்திடுங்க'' என்று கேட்டுக் கொண்டார். முகவரியையும் கொடுத்தார்.

    பாலமுருகன் சொன்னபடி மறுநாள் காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை ஆபீசுக்கு போனேன். அங்கே டைரக்டர் பி.மாதவன், கேமராமேன் பி.என்.சுந்தரம் ஆகியோர் இருந்தார்கள்.

    நான் போயிருந்த நேரத்தில் கதாசிரியர் பாலமுருகனும் வந்துவிட்டார். நேராக என்னை டைரக்டர் பி.மாதவனிடம் அழைத்துச் சென்று, "சார்! நம்ம கதைக்கு 2 ஹீரோ. அதுல ஒரு ஹீரோவுக்கு இவர் சரியா இருப்பார். சிவகுமார்னு பேரு'' என்றார்.

    டைரக்டர் பி.மாதவன் என்னை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தார். பிறகு கேமராமேன் பி.என்.சுந்தரத்தை அழைத்தவர்,  "ஒரு டெஸ்ட் எடுத்திடுங்க'' என்றார்.

    மறுநாளே டெஸ்ட்! ஏவி.எம். 6-வது மாடிக்கு வரச்சொல்லி டெஸ்ட் எடுத்தார்கள். முடிவு டைரக்டர் பி.மாதவனுக்கு திருப்தியாக இருந்ததால், "தம்பி! வசனம் பேசிக் காட்டுங்க'' என்றார். பேசிக்காட்டினேன்.

    பிறகு, "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் சிவாஜி சார் நடிக்கும்போது பயன் படுத்திய உடைகளை எனக்கு தந்து நடிக்கச் சொன்

    னார்கள்.நான் நடிக்கும்போது, அதை படமாக்கினார்கள்.

    அதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் பி.மாதவன், "தம்பி! நம்ம படத்தில் நீங்க நடிக்கிறீங்க'' என்றார்.

    "கந்தன் கருணை'' படத்தில் முருகன்வேடத்துக்காக எந்த சிவகுமாருடன் போட்டி ஏற்பட்டதோ, அதே சிவகுமாரும் நானும் இந்தப் படத்தில் இரட்டை நாயகர்கள். அந்தப்படம்தான் "பொண்ணுக்கு தங்க மனசு.''

    "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி சார் சாதாரண கிராமத்து இளைஞன் ராமனாக இருந்து பின்னாளில் பிரபல நடிகராக வருவது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது. நடிகராகும்போது அவருக்கு பெயர் விஜயகுமார். அதனால் அதுவரை சிவகுமாராக இருந்த எனக்கு `விஜயகுமார்' என்ற பெயரை சூட்டினார், டைரக்டர் பி.மாதவன்.

    பஞ்சாட்சரம், சிவகுமாராகி பிறகு விஜயகுமாராக மாறியது இப்படித்தான்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்
    நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.
    நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.

    நடிகர் விஜயகுமாருக்கு ஒரே ஆண் வாரிசு அருண்குமார். சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அதனால் "எம்.பி.ஏ.'' படிக்க அமெரிக்காவுக்கு போக இருந்த திட்டத்தை கைவிட்டு, முழுநேர நடிகராகி விட்டார், அருண்குமார்.

    மகன் அருண்குமார் சினிமாவுக்கு வந்தது பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அருண்குமார் படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்துக் கொண்டிருந்தார். அவரது பள்ளி வாழ்க்கையே, பல பள்ளிகளில் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் நாடு விட்டு நாடும் தொடர்ந்தது.

    ஆரம்பப் படிப்பு சென்னை டான்போஸ்கோவில் தொடங்கியது. அதன் பிறகு `சோ'வின் சகோதரர் நடத்தி வரும் "லா சாட்டலின்'' பள்ளி. அதன் பின்னர் அமெரிக்காவில்

    2 வருடம் என உலகம் சுற்றியது. நான் நடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் 2 வருடம் ரெஸ்டாரெண்ட் நடத்திய நேரத்தில், அருண் 2 வருடமும் அமெரிக்காவில் படித்தார். அதன் பிறகு சென்னை வந்தபோது மறுபடியும் `லா சாட்டலின்' பள்ளியில் படிப்பு.

    அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்குத்தான் பெற்றோர்களின் டிரான்ஸ்பரை பொறுத்து, இப்படி ஊர்ஊராய் பள்ளிகளில் மாறி மாறி படிக்க வேண்டியிருக்கும். அருணுக்கும் இந்த மாதிரியான அனுபவம் கிடைத்தது.

    பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகு கூட, அருணுக்குள் சினிமா ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. அந்த வாய்ப்பை தேடி வந்து ஏற்படுத்திக் கொடுத்தவர் தயாரிப்பாளர் `அன்பாலயா' பிரபாகரன்.

    அருண் "பி.காம்.'' இரண்டாம் ஆண்டு படிப்பை தொடர்ந்த நேரத்தில் `அன்பாலயா' பிரபாகரன், என்னை வந்து சந்தித்தார். அவரது படத்தில் நான் நடிப்பது தொடர்பாகத்தான் பேச வந்திருக்கிறார் என்று எண்ணினேன். அவரோ வந்ததும் வராததுமாக, "ஒரு நல்ல லவ் ஸ்டோரி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். உங்க மகன் அருணை ஹீரோவாக அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்'' என்றார்.

    எனக்கு அதிர்ச்சி. சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் எந்த எண்ணமும் இல்லாத மகனுக்குள் வலுக்கட்டாயமாக சினிமாவை திணிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால் அவரிடம், "பையன் பி.காம். முடித்து விட்டு, அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்க இருக்கிறான். அதனால் சினிமா வேண்டாமே'' என்று தவிர்க்கப்பார்த்தேன்.

    ஆனால் நடந்ததை தனது அம்மா மூலம் தெரிந்து கொண்ட அருண், "நான் நடிக்கிறேன். தயாரிப்பாளர் கிட்ட `சரி'ன்னு சொல்லும்படி அப்பாகிட்ட சொல்லுங்க'' என்று கூறியிருக்கிறார்.

    மகனின் விருப்பம் அதுவென தெரிந்த பிறகு தடைபோட விரும்பவில்லை. அதோடு லவ் ஸ்டோரி, ஏ.ஆர்.ரகுமான் இசை என்று தயாரிப்பாளர் பிரமாண்டம் காட்டி விட்டுப் போவதால், "சரி; நடிக்கட்டும்'' என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் படத் தயாரிப்பு தாமதித்துக் கொண்டே போனது. தயாரிப்பாளரைக் கேட்டால், "ஏ.ஆர்.ரகுமான் 3 பாட்டுக்கு டிïன் தந்துவிட்டார். இன்னும் 2 பாட்டுக்கு டிïன் தந்து விட்டால் படத்தை முழு வீச்சில் தொடங்கி முடிக்க ஏதுவாக இருக்கும்'' என்று சொன்னார்.

    எனக்கு நம்பிக்கை குறைந்தது. அவசரப்பட்டு சரி சொல்லிவிட்டோமோ என்று கூட நினைத்தேன்.

    இந்த நிலையில் திடுமென ஒரு நாள் வந்து நின்றார், தயாரிப்பாளர். ரகுமான் இசை தாமதமாவதால் வேறு ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறேன். சுந்தர் சி. இயக்குகிறார். படத்துக்கு "முறை மாப்பிள்ளை'' என்று பெயர் வைத்திருக்கிறேன். முதலில் அருண் இந்தப் படத்தில் நடிக்கட்டும். அடுத்து ரகுமான் பாட்டை முடித்துக் கொடுத்ததும் `லவ் ஸ்டோரி' எடுக்கலாம்'' என்றார்.

    சரி! நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து சினிமாவுக்குள் அருண் காலெடுத்து வைத்தாயிற்று. இனி பின்வாங்கினால் சரியாக இருக்காது. நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்றபடி "முறை மாப்பிள்ளை'' படத்துக்கு அருணை ஹீரோவாக்க சம்மதித்தேன்.

    படத்தின் பூஜை ஏவி.எம். ஸ்டூடியோ பிள்ளையார் கோவிலில் நடந்தது. நண்பர் ரஜினி வந்து அருணுக்கு பொட்டு வைத்து வாழ்த்தி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அப்போது அவர், "என் இனிய நண்பர் விஜயகுமாரின் மகன் அருண் சினிமாவுக்கு வருவதை வாழ்த்துகிறேன். அவர் நல்லா வரவேண்டும். நல்லா வருவார்'' என்று வாழ்த்தினார்.

    அவர் வாழ்த்து பலித்தது. "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் அருண் நிலையான ஹீரோ ஆனார். தொடர்ந்து "பிரியம்'', "காத்திருந்த காதல்'', "கங்கா கவுரி'', "துள்ளித்திரிந்த காலம்'', "கண்ணால் பேசவா'', "அன்புடன்'', "பாண்டவர் பூமி'', "முத்தம்'', "இயற்கை'', "ஜனனம்'', "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது'' என தொடர்ந்து இப்போது ரிலீசான "தவம்'' வரை நடிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இப்போதும் "வேதா'', "துணிச்சல்'' என திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் படங்களும் உண்டு.''

    இப்படிச் சொன்ன விஜயகுமார், நடிகர் அர்ஜ×ன், அருணை வைத்து தயாரித்த "தவம்'' படம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து
    கொண்டார்.

    "அர்ஜ×ன் சார் என்னிடம் அடிக்கடி அருண் பற்றி கேட்பார். "நன்றாக நடிக்கவும் செய்கிறார். `பைட்'டும் சூப்பரா போடறார். பிறகு ஏன் விஜய், அஜித் மாதிரி இன்னும் அருண் பேசப்படவில்லை?'' என்று கவலை தெரிவிப்பார்.

    "எல்லாத்துக்குமே நேரம்னு ஒண்ணு இருக்கே'' என்பேன் நான்.

    ஒருநாள் திடுமென என்னை சந்தித்த அர்ஜ×ன், "அருண் விஷயத்தில் நீங்கள் சொன்ன `நேரம்' இப்போது வந்து விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். நான் அருணை ஹீரோவாகப்போட்டு ஒரு படம் தயாரிக்கிறேன். `தவம்' என்பது படத்துக்கு பெயர்'' என்றார்.

    எனக்கு ஆனந்த அதிர்ச்சி. தமிழ் சினிமாவில் ஒரு முதல் தர நடிகர்; `ஆக்ஷன் கிங்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் மாதிரி ஹீரோக்கள் தொடர்ந்து படம் எடுத்து தங்களை வளர்த்துக் கொள்ளவே நினைப்பார்கள். மாறுபட்டு என் மகனை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்கப்போகிறேன் என்று சொல்கிறாரே! இப்படியும் ஒரு அபூர்வ மனிதரா?'' என்ற வியப்புதான் ஆனந்த

    அதிர்ச்சியாகியிருந்தது.சொன்னபடியே `தவம்' படத்தை தயாரித்து ரிலீஸ் பண்ணி அருணுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுத்த தயாரிப்பாளராகவும் எனக்குள் நிலைத்து விட்டார்.

    படத்தில் அருணை வித்தியாசமான கதைக் களத்தில் நடிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தற்கொலைக்கு முயலும் கதாநாயகியை, "எங்கே என் கண்ணைப் பார்த்து சொல்லு'' என்று அருண் கேட்கிறபோது, அருணின் அப்பா, ஒரு நடிகர் என்பதையெல்லாம் நான் மறந்து ஒரு ரசிகனாக அந்தக் காட்சியில் அருணின் நடிப்போடு ஒன்றிவிட்டேன்.

    அருண்குமார் இந்தப்படம் முதல் `அருண் விஜய்' என்று, பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். புதிய பெயரில் வெற்றியும் அவரோடு கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை.

    அர்ஜ×ன் என் மகன் அருண் விஜய்யை ஹீரோவாக்கியது என்னை ரொம்பவே நெகிழ்ச்சியாக்கி விட்டது. இதன் விளைவு `தவம்' பட பாடல் கேசட்டு வெளியீட்டு விழாவின்போது என்னில் எதிரொலித்தது. அந்த விழாவில், "இனி நானும் வருஷம் 2 படம் தயாரிப்பேன். அதில் ஒரு படத்தில் அருண் விஜய் நடிப்பார். அடுத்த ஆண்டு முதல் தயாரிப்பு தொடங்கும்'' என்று கூறினேன். சொன்னபடி அடுத்த ஆண்டு படத்தயாரிப்பு தொடர்பான வேலைகளை இப்போதே தொடங்கி விட்டேன்.

    அருண் விஜய்யிடம் நான் அடிக்கடி சொல்லும் வாசகம்: "எப்போதும் `பிரஷ்' ஆகவே இரு! எந்தப்படம் பண்ணினாலும் அதை முதல் படமாக நினைத்து சிரத்தையோடு பண்ணு! உழைப்பு இருக்கிறது; தொழில் அக்கறை இருக்கிறது. இதோடு முழு ஈடுபாடும் கலந்து கொள்ளும்போது வெற்றியும் உன்னுடன் பின்னிப் பிணைந்திருக்கும்'' என்பதுதான்.

    சினிமா மீதான அவரது `தவம்' தொடர்ந்து நல்லவிதமாகவே கைகூடும் என்பது அவரது அப்பாவாக என் நம்பிக்கை.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    ×