தொழில்நுட்பச் செய்திகள்
10 நிமிடங்களில் உங்கள் வீடு தேடி வரும் உணவு- ஜொமேட்டோ தொடங்கவுள்ள புதிய சேவை
உணவு டெலிவரியை விரைவு படுத்த வேண்டும் என பணியாட்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படாது என்றும், ஒருவேளை தாமதமாக டெலிவரி செய்தால் அவர்களது சம்பளம் பிடிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
ஜொமேட்டோ நிறுவனம் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் சேவையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதிகம் உணவு டெலிவரி செய்யப்படும் இடங்களில் மட்டும் இந்த சேவை தொடங்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மக்கள் உணவு ஆர்டர் செய்ய வேண்டும் என திட்டமிடுவதில்லை, திடீரென ஆர்டர் செய்கிறார்கள். அவர்கள் காத்திருக்கவும் விரும்பவில்லை. அதனால் 10 நிமிடங்களில் அவர்கள் விரும்பிய உணவை டெலிவரி செய்யும் சேவை தொடங்கப்படவுள்ளது.
உணவு அதிகம் டெலிவரி செய்யப்படும் இடங்களில் எந்தெந்த உணவுகள் அதிகம் ஆர்டர் செய்யப்படுகின்றன, எந்த உணவகங்களில் அதிகம் ஆர்டர் செய்கிறார்கள், எந்த வாடிக்கையாளர்கள் அதிகமாக அர்டர் செய்கிறார்கள் என்பது போன்ற தரவுகளின் அடிப்படையில் இந்த 10 நிமிட டெலிவரி சேவை தொடங்கப்படும்.
அதேசமயம் உணவு டெலிவரியை விரைவு படுத்த வேண்டும் என பணியாட்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படாது, ஒருவேளை தாமதமாக டெலிவரி செய்தால் அவர்களது சம்பளம் பிடிக்கப்படாது.
இவ்வாறு தீபிந்தர் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.