தொழில்நுட்பம்
பி.எஸ்.என்.எல்.

ஊரடங்கு சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கு கை கொடுக்கும் பி.எஸ்.என்.எல்.

Published On 2020-03-31 07:10 GMT   |   Update On 2020-03-31 07:10 GMT
நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.



பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது மொபைல் வாடிக்கையாளர்களின் வேலிடிட்டி காலத்தை ஏப்ரல் 20 வரை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இன்கமிங் அழைப்புகள் வரும். இந்த சலுகை மார்ச் 22 ஆம் தேதிக்கு பின் வேலிடிட்டி நிறைவுற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேலிடிட்டி நீட்டிப்பு தவிர ஊரடங்கின் போது டாக்டைம் தீர்ந்து போன வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 இலவச டாக்டைம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் சிம் கார்டு சேவை ஏப்ரல் 20 வரை நிறுத்தப்பட மாட்டாது, மேலும் ரூ. 10 இலவச டாக்டைம் இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் ஏழை மற்றும் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியும்" என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.



ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், தொழில்நுட்ப சந்தையின் முன்னணி நிறுவனங்களான ஒன்பிளஸ், ரியல்மி மற்றும் ஹூவாய் உள்ளிட்டவை தங்களது சாதனங்களுக்கான வாரண்டி சலுகை காலம் நீட்டிக்கப்படும் என அறிவித்தன. மேலும் தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்டவை கொரோனா வைரஸ் சந்தேகங்களை போக்கிக் கொள்ள புதிய சேவையை துவங்கின.

முன்னதாக பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் "Work@Home" சலுகையின் பேரில் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக அறிவித்தது. இந்த சலுகை வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்காக அறிவிக்கப்படுவதாக தெரிவித்தது.
Tags:    

Similar News