தொழில்நுட்பம்
ஃபேஸ்புக் எஃப்8

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஃபேஸ்புக் டெவலப்பர் நிகழ்வு ரத்து

Published On 2020-02-28 05:29 GMT   |   Update On 2020-02-28 05:29 GMT
ஃபேஸ்புக் நிறுவனத்தின் 2020 எஃப்8 டெவலப்பர்கள் நிகழ்வு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.



ஃபேஸ்புக் நிறுவனத்தின் 2020 எஃப்8 டெவலப்பர்கள் நிகழ்வு கொரோனா வைரஸ் பாதிப்பு சார்ந்த அச்சம் காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. 2020 ஃபேஸ்புக் எஃப்8 நிகழ்வு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் மே 5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற திட்டமிட்டு இருந்தது. 

அடுத்த மாதம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கேமிங் நிகழ்வினை அந்நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்தது. எனினும், மே மாத வாக்கில் சியாட்டில் நகரில் தனது டெவலப்பர் நிகழ்வில் நடத்த தொடர்ந்து திட்டமிட்டு வருகிறது.



எஃப்8 நிகழ்வுக்கு மாற்றாக உள்ளூர் நிகழ்வுகள், வீடியோக்கள் மற்றும் நேரலையில் தகவல் பரிமாற்றங்களை நடத்த ஃபேஸ்புக் திட்டமிட்டு வருவதாக அந்நிறுவனத்தின் பிளாட்ஃபார்ம் கூட்டணிகளுக்கான நிர்வாக இயக்குனர் கான்ஸ்டான்டினோஸ் பாபமில்டியாடிஸ் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள சீனா, தென் கொரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு அலுவல் ரீதியிலான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அந்நிறுவன அதிகாரிகளுக்கு ஃபேஸ்புக் அறிவுறுத்தி இருப்பதாக ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக ஃபேஸ்புக் மட்டுமின்றி பல்வேறு இதர நிறுவனங்களும் தங்களது நிகழ்வுகளை ரத்து செய்வதாக தொடர்ந்து அறிவித்து வருகின்றன. முன்னதாக பார்சிலோனாவில் நடைபெற இருந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News