தொழில்நுட்பம்
ஏர்டெல்

தொலைதொடர்பு துறைக்கு ரூ.10,000 கோடி நிலுவை தொகையை செலுத்தியது ஏர்டெல்

Published On 2020-02-17 11:03 GMT   |   Update On 2020-02-17 11:03 GMT
மத்திய தொலைதொடர்பு துறைக்கு ஏர்டெல் வழங்க வேண்டிய நிலைவை தொகையில் ரூ. 10,000 கோடியை அந்நிறுவனம் செலுத்தியது.



பாரதி ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு உரிமம் கட்டணம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணம் உள்பட கிட்டத்தட்ட ரூ.35,586 கோடி நிலுவை தொகையை பாக்கி வைத்திருக்கிறது. நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு தொலைதொடர்புதுறை கடந்த 14-ந்தேதி உத்தரவிட்டு இருந்தது. 

இதையடுத்து பிப்ரவரி 20-ந்தேதிக்குள் ரூ.10,000 கோடியையும் மீதுமுள்ள நிலுவை தொகையை மார்ச் 17-ந்தேதிக்குள் செலுத்துவதாக ஏர்டெல் பதில் அளித்து இருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு விதித்த காலக்கெடு மீது சுப்ரீம் கோர்ட்டு எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் தொலைதொடர்பு துறைக்கு ரூ.10,000 கோடி நிலுவை தொகையை ஏர்டெல் நிறுவனம் இன்று செலுத்தியது.



மத்திய அரசுக்கு பாரதி ஏர்டெல், பாரதி ஹெக்ஸ்காம் மற்றும் டெலினார் சார்பாக மொத்தம் ரூ.10,000 கோடி செலுத்தப்பட்டது. பாரதி ஏர்டெல் (டெலினார் உள்பட) ரூ.9,500 கோடியையும், ஹெக்ஸ்காம் ரூ.500 கோடியை அளித்தது.

நிறுவனத்தின் சுய மதிப்பீட்டு கணக்கை விரைவாக முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றும், சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த விசாரணைக்கு முன்னர் அல்லது விசாரணை முடிந்தவுடன் மீதமுள்ள நிலுவை தொகையை செலுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் ஏர்டெல் தெரிவித்து உள்ளது.

இதுதவிர நிறுவனத்தின் சுய மதிப்பீட்டு கணக்கை முடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த வோடபோன், இன்று ரூ. 2500 கோடியையும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் (பிப்ரவரி 21) ரூ. 1000 கோடியை செலுத்துவதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. எனினும், வோடபோன் நிறுவன கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. 
Tags:    

Similar News