தொழில்நுட்பம்
மடிக்கக்கூடிய டிரோன் உருவாக்கும் பணிகளில் சாம்சங்
சாம்சங் நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் அந்நிறுவனம் மடிக்கக்கூடிய டிரோன் ஒன்றை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. #Samsung #drones
சாம்சங் நிறுவனம் சிறிய ரக ஆளில்லா பறக்கும் ஊர்திகளை (டிரோன்) உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் தென்கொரிய நிறுவனம் மடிக்கக்கூடிய டிரோன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இதில் கேமரா, கைரோஸ்கோப், அக்செல்லோமீட்டர் மற்றும் பாரோமீட்டர் போன்றவை இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த டிரோன் பெருமளவு உற்பத்திக்கு எப்போது தயாராகும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய வகையில் புதிய டிரோன் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த டிரோனின் இறக்கையை மடிக்கவும், நீட்டிக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
புகைப்படம் நன்றி: USPTO | Samsung
இந்த டிரோன் இரண்டு பிரிவுகளை கொண்டிருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் போது டிரோன் பறக்க தயாராகி விடும். இந்த ஆண்டு மட்டும் டிரோன் தயாரிப்பது பற்றி சாம்சங் பதிவு செய்துள்ள ஐந்தாவது காப்புரிமை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாம்சங் டிரோனின் ஒரு பகுதியில் வயர்லெஸ் தகவல் பரிமாற்றம் செய்யும் சர்கியூட், மற்றொரு பகுதியில் வெளிப்புற கண்ட்ரோலர், நேவிகேஷன் சர்கியூட் போன்ற பாகங்கள் பொருத்தப்படுவதாக சாம்சங் காப்புரிமைகளில் தெரிகிறது.
மேலும் இந்த டிரோன் வழக்கமான டிரோன்களை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் இதனை ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது கணினி உள்ளிட்டவற்றை கொண்டு இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. கூடுதலாக சாம்சங் டிரோன் கொண்டு மற்ற மின்சாதனங்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.