மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு நவம்பரில் 5ஜி அப்டேட்
- மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வெளியிடுவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
- ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போன்றே டெலிகாம் நிறுவனங்களும் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.
ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் வரிசையில் மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்குவது பற்றி அறிவித்து இருக்கிறது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ (SA), ஏர்டெல் மற்றும் வி (NSA) 5ஜி மோட்களை தனது 5ஜி ஸ்மார்ட்போன்களில் மோட்டோரோலா வழங்க இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது வலைதளத்தில் மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி வசதியை வழங்குவது பற்றி இதுவரை எந்த தகவலையும் தனது வலைதளத்தில் தெரிவிக்கவில்லை. எனினும், மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 30 அல்ட்ரா மற்றும் எட்ஜ் 30 பியுஷன் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த வாரமே 5ஜி அப்டேட் வழங்கப்படும் என மோட்டோரோலா அறிவித்து உள்ளது.
இதைத் தொடர்ந்து வரும் வாரங்களில் மற்ற மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் அப்டேட் வழங்கப்படும். நவம்பர் 2022 மாதத்தின் முதல் வாரத்திற்குள் அனைத்து 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் 5ஜி அப்டேட் வழங்க மோட்டோரோலா திட்டமிட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் அதிக 5ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக மோட்டோரோலா விளங்குகிறது. மேலும் பயனர்கள் 4ஜி-யில் இருந்து 5ஜி நெட்வொர்க்கிற்கு மாற அனைத்து வசதிகளையும் விரைந்து மேற்கொள்வதாக மோட்டோரோலா தெரிவித்துள்ளது.