- பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப்
புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகம்உ டையவர் சேரும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
ஒரு பாகத்தில் உமாதேவியை வைத்துக் கொண்டு, நஞ்சினையும், அகன்ற படத்தையும், பிளந்த வாயையும் உடைய நாகத்தை அணிகலனாய் பூண்டு, நள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! உன்னை மனதில் நினைத்து, இன்பம் அடையும் புண்ணியர்களான அடியவர்கள் விளங்கும் கூடல் ஆலவாயின்கண் விரும்பி தங்குவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!