புதுச்சேரி

பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற வீட்டை படத்தில் காணலாம்.

இளம்பெண்ணை கட்டி போட்டு திருட முயற்சி

Published On 2023-03-21 14:43 IST   |   Update On 2023-03-21 14:43:00 IST
  • துணிகளை மொட்டை மாடியில் காய வைத்துவிட்டு வீட்டுக்குள் வரும்போது 2 நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.
  • இந்நிலையில் திடீரென பவித்ராவுக்கு போன் வந்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்‌.

புதுச்சேரி:

தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 54). இவருக்கு ஒரு மனைவி 3 மகள்கள் உள்ளனர்.

இவரது மூத்த மகளை கல்பாக்கம் பகுதியில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அறிவழகன் அவரது மனைவி மற்றும் இளைய மகள் ஆகிய 3 பேரும் மூத்த மகளை பார்க்க சென்று விட்டனர். மற்றொரு மகளான பவித்ரா (வயது 22) வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் துவைத்த துணிகளை மொட்டை மாடியில் காய வைத்துவிட்டு வீட்டுக்குள் வரும்போது 2 நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.

பின்னர் அந்தப் பெண்ணை கையும் காலும் கட்டி வாயில் துணியை வைத்து அழுத்தி கட்டிலுக்கு அடியில் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்த செயினை பறித்த போது அது கவரிங் நகை என்று தெரிந்தவுடன் அதை போட்டு விட்டனர்.

பின்னர் வீடு முழுக்க நகை, பணம் ஏதாவது வைத்து இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்துள்ளனர்.

ஆனால் நகை, பணம் ஏதும் இல்லை. இந்நிலையில் திடீரென பவித்ராவுக்கு போன் வந்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்த பவித்ரா சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது பவித்ரா கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை அப்பகுதி மக்கள் மீட்டனர். பின்னர் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்.

வீடுகளுக்கு மத்தியில் கடற்கரை ஓரமாக உள்ள வீட்டில் பட்டப்பகலில் பெண்ணை கட்டிப்போட்டு திருட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News