புதுச்சேரி

வங்கி மேலாளர் பேசுவது போல் நடித்து கூலித்தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி

Published On 2022-11-08 04:17 GMT   |   Update On 2022-11-08 04:17 GMT
  • வங்கி மேலாளர் பேசுவது போல் நடித்து கூலித்தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
  • மேட்டுப்பாளையம் போலீசில் கூலித்தொழிலாளி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

புதுச்சேரி:

புதுவை குரும்பாபேட் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 44). கூலித்தொழிலாளி. இவரது செல்போன் எண்ணுக்கு தேசிய மாயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து மானேஜர் பேசுவதாக ஒருவர் கூறினார்.

அவர், ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டதாகவும், அதை புதுப்பிக்க அண்ணாதுரை செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதை தெரிவிக்கும் படியும் கூறியுள்ளார்.

அதை நம்பி அண்ணாதுரை அவரது செல்போன் எண்ணுக்கு பலமுறை வந்த ஓ.டி.பி.யை அந்த நபரிடம் கூறினார்.

அடுத்தடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.96 ஆயிரத்து 250 எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாதுரை, தனது வங்கிகணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுத்ததை அறிந்தார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News