புதுச்சேரி

மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஊர்வலம்- நாராயணசாமி உள்பட 200 பேர் கைது

Published On 2022-08-05 09:38 GMT   |   Update On 2022-08-05 09:38 GMT
  • டெல்லியில் ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடந்தது.
  • ஊர்வலத்தில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி பங்கேற்றார். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

அரிசி, பால், தயிர் போன்ற உணவு பொருட்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்களுக்கு ஏமாற்றம் என மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது.

இதற்காக மிஷன் வீதி மாதா கோவிலில் இருந்து காங்கிரசார் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

ஊர்வலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீலகங்காதரன், கார்த்திகேயன், அனந்தராமன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் கருணாநிதி, தனுசு, ரகுமான், சரவணன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழரசி, கலைவாணன், சடகோபன், வக்கீல் சாமிநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஆம்பூர் சாலைக்கு வந்தனர். அங்கு போலீசார் பேரிகார்டுகளை அமைத்து அவர்களை தடுத்தனர்.

அங்கு போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பேரிகார்டுகளின் மீது ஏறி தடையை தாண்டி செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைதுசெய்தனர். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி பங்கேற்றார். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னாள் அமைச்சர் கந்தசாமியும் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News