புதுச்சேரி

புதுவையில் மூச்சு திணறல் ஏற்பட்டு 8-ம் வகுப்பு மாணவன் மரணம்

Published On 2023-01-21 14:27 IST   |   Update On 2023-01-21 14:27:00 IST
  • மூச்சு திணறல் ஏற்பட்டு 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்து போனார்.
  • சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் மேட்டுதெருவை சேர்ந்தவர் சீனிவாசன். தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது சித்தி பரமேஸ்வரி. இவரது மகன் விசித்திரன் (வயது13). கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரமேஸ்வரி இறந்து விட்டார். அவரது கணவர் சுந்தரமூர்த்தியும் பிரிந்து சென்று விட்டதால் விசித்திரனை சீனிவாசன் தனது பராமரிப்பில் வளர்த்து வந்தார்.

விசித்திரன் ராம்பாக்கம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது. இதனால் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் காண்பித்த போது அந்த நோய்க்கான உபகரணங்கள் தற்போது ஆஸ்பத்திரியில் இல்லை என்றும், உபகரணங்கள் வந்த பின்னர் தகவல் தெரிவிப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விசித்திரனை சீனிவாசன் கண்காணித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் விசித்திரன் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினான். சிறிது நேரத்தில் மூச்சு பேச்சியின்றி விசித்திரன் கிடப்பதை கண்டு சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விசித்திரனை நெட்டப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு விசித்திரன் வரும் வழிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News