போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோர கடைகள்
- கழிவுநீர் கால்வாய் மேல் 10-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு மீன் விற்பனை செய்யப்படுகிறது.
- வாகனங்களும் செல்வதற்கு வழி இல்லாமல் நீண்ட நேரம் சாலையிலேயே காத்துக் கிடக்கின்றன.
புதுச்சேரி:
விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்காக மதகடிப்பட்டில் இருந்து எம்.என். குப்பம் வரை பல்வேறு பகுதிகளில் சாலையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதனால் விழுப்புரத்தில் இருந்து புதுவை செல்லும் வாகனங்களுக்காக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
தற்போது வாகனங்கள் இந்த சர்வீஸ் சாலை வழியாகவே சென்று வருகின்றன. இந்த சர்வீஸ் சாலையை ஒட்டி கழிவுநீர் வாய்க்கால் அமைக்க ப்பட்டு முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதகடிப்பட்டு கடைவீதி பகுதியில் இந்த சர்வீஸ் சாலை அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் மேல் 10-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு மீன் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் கடைக்கி வரும் பொதுமக்கள் சர்வீஸ் சாலையிலேயே தங்களது வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் விழுப்புரத்திலிருந்து புதுவை வரும் அனைத்து வாகனங்களும் செல்வதற்கு வழி இல்லாமல் நீண்ட நேரம் சாலையிலேயே காத்துக் கிடக்கின்றன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. மேலும் மீன் கழிவுகளை சாலையிலேயே கொட்டுவதால் அந்த பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது.
பொது மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை ஓரங்களில் மீன் கடைகளை வைத்து விற்பனை செய்யும் கடைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி கடைவீதிக்கு அருகாமையில் உள்ள சந்தை பகுதியில் எந்தவித இடையூறும் இன்றி மீன்கள் விற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.