புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
- மறைந்த ப.கண்ணன் உடல் நேற்று இரவு புதுவை வைசியாள் வீதியில் உள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.
- ப.கண்ணன் உடலுக்கு இன்று மாலை 4 மணிக்கு இறுதி சடங்கு நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவை அரசியலில் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்தவர் ப.கண்ணன். சபாநாயகர், அமைச்சர், ராஜ்யசபா எம்.பி. என அரசின் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
2021 சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதாவிலிருந்த அவர் அதன் பிறகு அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகியிருந்தார். மணிப்பூர் கலவரத்தின்போது பா.ஜனதாவிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
கடந்த 1-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக ப.கண்ணன் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு சுவாச கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9.51 மணியளவில் அவர் மரணமடைந்தார். மறைந்த ப.கண்ணனுக்கு வயது 74.
மறைந்த ப.கண்ணன் உடல் நேற்று இரவு புதுவை வைசியாள் வீதியில் உள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. ப.கண்ணன் இறந்த தகவல் கிடைத்தவுடன் புதுவை மாநிலம் முழுவதும் உள்ள அவரின் ஆதரவாளர்கள் ப.கண்ணன் வீட்டில் குவிந்தனர்.
இன்று காலை முதல் ப.கண்ணன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு முதலமைச்சர் ரங்கசாமி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்கட்சித்தலைவர் சிவா, மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் இருந்து வந்த தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ப.கண்ணன் உடலுக்கு இன்று மாலை 4 மணிக்கு இறுதி சடங்கு நடக்கிறது. பின்னர் ப.கண்ணன் உடல் அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கருவடிக்குப்பத்தில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.