- தனியார் கம்பெனி ஊழியர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
புதுச்சேரி:
வீடு கட்டுமான பணியில் அதிக கடன் ஏற்பட்டதால் தனியார் கம்பெனி ஊழியர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலாப்பட்டு அடுத்த சின்னகாலாப்பட்டு திடீர் நகர் நாகவள்ளியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் செல்வம்.
இவரது மூத்த மகன் முருகன் திருமணம் ஆகவில்லை. காலாப்பட்டு உள்ள பிரபல தனியார் கம்பெனியில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வந்தார். முருகனின் சகோதரிக்கும், தம்பிக்கும் திருமணமான நிலையில் பெற்றோரை இவர் கவனித்து வந்தார். கடந்த சில மாதங்களாக இவரது இடத்தில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். வீடு கட்டுவதற்காக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. வீடு கட்டுமான பணியின் போது கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்க தொடங்கியதால் அந்த கடனை அடைப்பதற்கு வேறொரு இடத்தில் கடன் கேட்டுள்ளார். யாரும் கடன் கொடுக்க முன் வராததால் இவருக்கு கடன் சுமை அதிகமானது.
கடந்த ஒரு வாரமாக யாரிடமும் அதிகம் பேசாமல் வீட்டில் இருந்த முருகன் நேற்று வீட்டின் அறையில் இருந்த பேனில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.