பாலமுருகன் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்ட காட்சி.
பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர செடல் உற்சவம்
- புதுவை அருகே காலாப்பட்டு பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது.
- அதேபோன்று 101 அடி உயரத்தில் கிரேன் மூலம் பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு பாலமுருகனின் கோபுர கலசத்திற்கு அணிவித்தனர்.
புதுச்சேரி:
காலாப்பட்டு பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. கடந்த 27-ந் தேதி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனையும் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து 4-ந் தேதி இரவு முதல் சாமி வீதி உலா நிகழ்சிகளும் அன்னதான நிகழ்ச்சிகளும் நடந்தது. முக்கிய நிகழ்வான இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முருகன் கோவில் குளத்திலிருந்து 101 வேல் காவடி, மயில் காவடி ஏந்தி கிழக்கு கடற்கரை சாலை, பிள்ளையார் கோவில் தெரு, தேரோடும் வீதி ஆகிய பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர்.
100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் காவடி எடுத்துச் சென்றனர். பிரம்மாண்டமான செடல் உற்சவத்தில் நடந்தது.
இதில் பக்தர்கள் பொக்லைன் எந்திரம், ராட்சத கிரேன் எந்திரம், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அலகு குத்திக்கொண்டு முக்கிய வீதிகளில் பக்தர்கள் இழுத்துச் சென்றனர். அதேபோன்று 101 அடி உயரத்தில் கிரேன் மூலம் பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு பாலமுருகனின் கோபுர கலசத்திற்கு அணிவித்தனர்.
அதேபோன்று பல்வேறு பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கோவிலின் எதிரே அலகு குத்திக்கொண்டு ராட்டினம் இழுத்தனர், நிகழ்ச்சியைட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தடை செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருவிழாவில் காலாப்பட்டு,
சின்ன காலப்பட்டு, பிள்ளைசாவடி, கனகசட்டிகுளம், தமிழகப் பகுதியான மாத்தூர், கீழ்ப்புத்துப்பட்டு, கோட்டகுப்பம், கூனிமேடு, மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர், அதனை தொடர்ந்து 4 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.
நாளை தெப்பல் உற்சவம் நடக்கிறது. கோவிலை சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் அன்னதானம், மோர் உள்ளிட்டவை வழங்கினார்கள். பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி காலாப்பட்டு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.