- பெண் கடத்தப்பட்டதாக தந்தை போலீசில் புகார் கூறியுள்ளார்.
- குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பட்டதாரி பெண் கடத்தப்பட்டதாக தந்தை போலீசில் புகார் கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராமன் குமார் (வயது 53) இவர் கடந்த 20 ஆண்டுகளாக அரியாங்குப்பம் பெரிய இருசாம்பாளையம் ரோட்டில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
ராமன்குமார் ஒரு தனியார் கம்பெனியில் பொருப்பாளராக வேலை செய்து வருகிறார். இவரது இளைய மகள் பிட்டு குமாரி (வயது 24) இவர் புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பி.காம் படித்து முடித்து விட்டு கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வந்தார்.
ராமன்குமார் தனது மனைவி ரேணுதேவி மற்றும் மகள்களுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் பார்த்த போது தூங்கிக் கொண்டிருந்த பிட்டுகுமாரி காணாமல் போனது கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பிட்டு குமாரியை பல இடங்களில் சென்று தேடினர். ஆனால் எங்கும் பிட்டுகுமாரி இல்லை. இதையடுத்து ராமன்குமார் தனது மகள் மாயமானது குறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
புகாரில் தனது மகள் பிட்டுகுமாரியை செஞ்சியை சேர்ந்த சிவக்குமார் என்ற வாலிபர் கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.