புதுச்சேரி

மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்த கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற காட்சி.

ஏமாற்று மாயாஜால பட்ஜெட்-நாராயணசாமி ஆவேசம்

Published On 2023-03-14 10:55 IST   |   Update On 2023-03-14 10:55:00 IST
  • மத்திய பா.ஜனதா அரசு பொதுத்துறை நிறுவனங்களை அதானி குடும்பத்துக்கு தாரை வார்ப்பதை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடந்தது.
  • பிரதமர் மோடி, அதானி உருவ படங்களை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி:

மத்திய பா.ஜனதா அரசு பொதுத்துறை நிறுவனங்களை அதானி குடும்பத்துக்கு தாரை வார்ப்பதை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடந்தது.

வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை சதுக்கத்தில் தொடங்கிய ஊர்வலத்துக்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பி ரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ. வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கட்சியின் மூத்த துணைத்தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலன், கார்த்திகேயன், அனந்தராமன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, வக்கீல் அணி மருதுபாண்டியன், பொதுச்செயலாளர்கள் தனுசு, இளையராஜா, திருமுருகன், சங்கர், வேல்முருகன், மாவட்ட தலைவர்கள் வேல்முருகன், கோபி, முத்துராமன், பிசிசி உறுப்பினர்கள் ராஜாகுமார், செல்வநாதன், வட்டார தலைவர்கள் ஆறுமுகம், கிருஷ்ணராஜ், ஜெரால்ட், ராஜ்மோகன், ஏம்பலம் தொகுதி மோகன்தாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் அண்ணாசாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக மாதா கோவில் வீதியை அடைந்தது. ஆம்பூர் சாலை அருகே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடுப்பை மீறி செல்ல முயன்றதால் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் காங்கிரசார் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரதமர் மோடி, அதானி உருவ படங்களை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு நிலவியது.

இதைத்தொடர்ந்து மகளிர் காங்கிரசார் எல்லைபிள்ளை சாவடியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். ரெட்டியார்பாளையம் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

போராட்டத்தின் முடிவில் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:-

ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு புதுவை பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. சம்பளம், ஓய்வூதியம், மின்சாரம் வாங்குவது உட்பட செலவுகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடி வருகிறது. மீதம் உள்ளது ரூ.2 ஆயிரத்து 600 கோடிதான். 3 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டருக்கு ரூ.300 மானியம், இத்திட்டத்துக்கு மட்டும் ரூ.120 கோடி செலவாகும். பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கும் திட்டத்துக்கு எங்கிருந்து நிதி வரும்? இதற்கு ரூ.100 கோடி தேவைப்படும். ஏற்கனவே நிதி பற்றாக்குறை உள்ளது. இந்நேரத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த நிதி எங்கிருந்து வரும். இது ஏமாற்று பட்ஜெட், மாயாஜால பட்ஜெட்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News