மதுபார்கள், கடற்கரையில் இருந்து வெளியேறிய கிரிக்கெட் ரசிகர்கள்
- அகண்ட திரையில் ரசிகர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- இந்தியா கலக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.
புதுச்சேரி:
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியை புதுவை கடற்கரைச்சாலையில் அகண்ட திரையில் ரசிகர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் பல மது பார்களில் ரசிகர்கள் போட்டியை பார்க்க பெரிய திரையில் பார்க்க வசதி செய்யப்பட்டிருந்தது.
எல்லைப்புற பகுதிகளிலும் அகண்ட திரையில் போட்டியை காண ஏற்பாடு செய்திருந்தனர். ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட் செய்தது. அதில் சீராக விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தாலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் பந்து வீச்சில் இந்தியா கலக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து இந்திய அணி பவுலிங்கில் முதலில் கலக்கியது. ஷமி, பும்ரா ஆகியோர் 3 விக்கெட்டுகளை 50 ரன்களுக்குள் கழற்றியவுடன் ரசிகர்கள் குதூகல மானார்கள். ஆனால் அதன்பிறகு தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இயல்பாக விளையாடத் தொடங்கியது.
விக்கெட் இழப்பின்றி சீராக ரன்களை குவித்ததால் கடற்கரை, மதுபார்களில் குவிந்திருந்த ரசிகர்கள் சோகமானார்கள். ஒருக்கட்டத்தில் இந்திய அணி வெல்ல வாய்ப்பில்லை என்று உணர்ந்த பின்பு கடற்கரை, பார்களில் இருந்து வெளியேறினர்.