கோப்பு படம்.
தேர் இழுக்கும் தகராறில் விழாக்குழு நிர்வாகி மீது தாக்குதல்
- புதுவை அருகே முருங்கப்பாக்கத்தில் மயான கொள்ளை தேர் இழுக்கும் தகராறில் விழாக்குழு நிர்வாகியை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த ஆண்டு நன்கொடை வசூலித்தது போலவே இந்த ஆண்டும் வசூல் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
புதுச்சேரி:
முருங்கப்பாக்கத்தில் மயான கொள்ளை தேர் இழுக்கும் தகராறில் விழாக்குழு நிர்வாகியை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திட்டு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது50). இவர் டிரைவர் வேலை செய்து வருகிறார். மேலும் திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா குழு செயலாளராக இருந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை விழாவில் தேர் இழுத்து செல்லும் போது அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் மற்றும் ராஜி ஆகியோருக்கும் நாராயணனுக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்த வர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று காலை திரவுபதியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
அப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் நன்கொடை வசூலிப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நாராயணன் பேசும் போது, கடந்த ஆண்டு நன்கொடை வசூலித்தது போலவே இந்த ஆண்டும் வசூல் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
பின்னர் நாராயணன் வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த போது அங்கு வந்த மகேந்திரன், ராஜி மற்றும் இவர்களது நண்பர் ப்ரீத்தி ஆகியோர் ஏற்கனவே கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறை மனதில் வைத்து நாராயணனிடம் பிரச்சினை செய்தனர்.
மேலும் தகாத வார்த்தை களால் திட்டி அவரை தாக்கினர். அங்கிருந்த வர்கள் நாராயணனை தாக்கியவர்களை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர்.
இந்த தாக்குதலில் நாராயணனுக்கு காது, கன்னம், உதடு மற்றும் தொண்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.