புதுச்சேரி
null

புதுவைக்கு கூடுதல் நிதி கிடைக்கும்- அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்

Published On 2022-08-23 09:30 GMT   |   Update On 2022-08-23 12:46 GMT
  • நாட்டிலேயே சுகாதாரத் துறைக்கு பட்ஜெட் நிதியில் 9 சதவீதம் நிதி ஒதுக்கிய முதல் மாநிலம் என்ற சிறப்பு புதுவைக்கு உண்டு.
  • ஏழை எளிய மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் ஒரு சிறப்பம்சம் உள்ள பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:

நாட்டிலேயே சுகாதாரத் துறைக்கு பட்ஜெட் நிதியில் 9 சதவீதம் நிதி ஒதுக்கிய முதல் மாநிலம் என்ற சிறப்பு புதுவைக்கு உண்டு. மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி புதுவைக்கு வரும்போது மாநிலம் மேலும் மேலும் வளர்ச்சி பெறும். முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது.

அதற்கான தொகை உடனடியாக வழங்கப்படும். நடப்பு ஆண்டுக்கு கல்வித்துறைக்கு தேவையான கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் ஒரு சிறப்பம்சம் உள்ள பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார்.

அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும், காகிதம் இல்லா அரசு துறைகளை உருவாக்க பட்ஜெட்டில் அறிவித்துள்ளது சிறப்பு வாய்ந்தது. அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், கடந்த 5 ஆண்டு கஷ்டங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும் பட்ஜெட் உள்ளது.

மக்களை நேரடியாக சென்றடையும் திட்டங்களை தீட்டுவதன் மூலம் மக்களின் நுகர்வோர் சக்தி அதிகரிக்கும். மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் விமானநிலைய விரிவாக்க நிதி, புதிய சட்டசபைக்கான நிதி, இந்திராகாந்தி சிலை மேம்பாலம் கட்ட நிதி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி ஆகியவை ஒதுக்கப்படும்.

இவை பட்ஜெட்டில் சேர்க்காதது. மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக ஊக்குவிப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளதால், பட்ஜெட் தொகையுடன் கூடுதலாக நிதி கிடைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News