புதுச்சேரி

தீர்த்தவாரி மண்டபம் அமைக்க முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் பொதுமக்கள் மனு அளித்த காட்சி.


மூலநாதர் கோவிலில் தீர்த்தவாரி மண்டபம் அமைக்க வேண்டும்

Published On 2023-10-26 13:59 IST   |   Update On 2023-10-26 13:59:00 IST
  • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் பொதுமக்கள் மனு
  • பாகூர் மூலநாதர் கோவிலுக்கு தென்பெண்ணையாற்றங் கரையில் ஏற்கனவே இருந்தபடி தீர்த்தவாரி மண்டபம் அமைக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலம் பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தீர்த்தவாரி மண்டபம் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆற்று திருவிழாவின் போது, மூலநாதர் இந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த ஜுலை மாதம் விழுப்புரம்- –நாகப்பட்டினம் புறவழிச்சாலை பணிக்காக தீர்த்தவாரி மண்டபத்தை, நெடுஞ்சாலை துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர்.

தீர்த்தவாரி மண்டபம் இருந்த இடம் சோரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள செடல் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்றும், இழப்பீடு தொகை தங்களுக்கு தான் சேர வேண்டும் என அந்த கிராம மக்கள் உரிமைக்கோரி வருகின்றனர். மேலும், அந்த இடத்தில் புதியதாக தீர்த்தவாரி மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மற்றொருபுறம், ''பாகூர் மூலநாதர் கோவிலின் பயன்பாட்டில் இருந்து வந்த தீர்த்தவாரி மண்டபம் சட்ட விரோதமாக, சோரியாங்குப்பம் கோவிலுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக பாகூர் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும், தென்பெண்ணை ஆற்றில் ஏற்கனவே இருந்தபடி பழமை மாறாமல், புதியதாக தீர்த்தவாரி மண்டபம் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாகூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் நேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பாகூர் தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். அதில் பாகூர் மூலநாதர் கோவிலுக்கு தென்பெண்ணையாற்றங் கரையில் ஏற்கனவே இருந்தபடி தீர்த்தவாரி மண்டபம் அமைக்க வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட தீர்த்தவாரி மண்டப இடத்தை மூலநாதர் கோவிலின் பெயரில் மாற்றம் செய்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News