புதுவையில் 3,200 ஸ்மார்ட் வகுப்பறைகள் -அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
- மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா ந டந்தது.
- அமைச்சர் நமச்சிவாயம் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா நிர்வாகிகள் தமிழ்மணி, ராஜா, சுந்தரமூர்த்தி, கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, முதன்மை கல்வி அலுவலகர் தனசெல்வன் நேரு, பள்ளி தலைமை ஆசிரியர் ரூபன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் 3 ஆயிரத்து 416 வகுப்பறைகள் உள்ளது. இதில் கடந்த காலங்களில் 216 மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டது. மீதமுள்ள 3 ஆயிரத்து 200 வகுப் பறைகளும், ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 1 ரூபாய் பஸ் இனி இலவசமாக இயக்கப் படும்.
மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். அரசு பள்ளியின் சுற்றுச்சூழல் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து மாணவர்களின் கல்வித்திறனை அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்தும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் இனி பாடம் கற்பிக்காமல். நல்ல ரிசல்ட் கொடுக்காமல் இருக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.