வழிபாடு
சதுரகிரி செல்லும் பக்தர்களின் உடைமைகளை மலை அடிவாரத்தில் போலீசார் சோதனையிட்டனர்.

பிரதோஷத்தை முன்னிட்டு இன்று சதுரகிரியில் திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2022-05-27 07:26 GMT   |   Update On 2022-05-27 07:26 GMT
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்தக் கோவிலுக்கு இன்று வைகாசி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு 5 நாட்கள் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பிரதோஷ தினமான இன்று மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டிருக்கும் முன்பு குவிந்தனர்.

காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பிரதோச சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News