வழிபாடு
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு

Published On 2021-12-20 09:25 IST   |   Update On 2021-12-20 09:25:00 IST
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழனி முருகன் கோவிலின் உப. கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாத திருவாதிரை 10 நாட்கள் கொண்டாடப்படும். கடந்த 11-ந் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி நேற்று இரவு பெரியநாயகி அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

சன்னதி முன்பு உள்ள மண்டபத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பொன்னூஞ்சலில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிவகாமி அம்மன், சிவபெருமானுக்கு தீபாராதனை நடைபெற்றது.

10ம் நாளான இன்று நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடத்தப்பப்டது.

பின்னர் சிவபூதகண வாத்தியங்கள் முழங்க நடராஜர், சிவகாமியம்மன் 4 ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கொரோனா விதிகளை கடைபிடித்து பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலை 4 மணி முதல் நடந்த இந்த பூஜையில் கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Similar News