செய்திகள்
கோவில் முன்பு பக்தர்கள் வழிபட்டுச் சென்ற காட்சி.

கோவில் அடைப்பு: ஆடிப்பூர நாளில் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்

Published On 2021-08-11 10:40 IST   |   Update On 2021-08-11 10:42:00 IST
ஆடிப்பூர நாளான இன்று கோவில்கள் அரசு உத்தரவுப்படி மூடப்பட்டிருந்தது. இருப்பினும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காலையிலேயே வந்தனர்.
மதுரை :

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் ஐப்பசி பூர விழா, ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு இந்த 2 விழாக்களும் உள் திருவிழாவாக நடைபெற்றது.

இந்த ஆண்டும் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆடிப்பூர திருவிழா கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடத்தப்பட்டது.

இதையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகைக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து கோவர்த்தனாம்பிகை எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆடிப்பூர நாளான இன்று கோவில்கள் அரசு உத்தரவுப்படி மூடப்பட்டிருந்தது. இருப்பினும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காலையிலேயே வந்தனர். அவர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாமல் பூட்டப்பட்டிருந்த வாசல் முன்பு தீபம் ஏற்றி வழிபட்டுச் சென்றனர்.

இதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் ஆடிப்பூர நாளில் அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தனர். கோவில் நடை மூடப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து கோவில் முன்பு அவர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் சென்றனர்.

Similar News