செய்திகள்

ஆடி அமாவாசை: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Published On 2018-08-12 04:59 GMT   |   Update On 2018-08-12 04:59 GMT
மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் இந்த மாத ஆடி அமாவாசை விழா நேற்று இரவு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாத ஆடி அமாவாசை விழா நேற்று இரவு நடந்தது.

அமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது.

விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தங்க கவச அலங்காரத்தில் அம் மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதனை தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 11.40 மணிக்கு அங்கிருந்து உற்சவ அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் வைத்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அப்போது பூசாரிகள் பக்திப்பாடல்களை பாடினார்கள்.



நள்ளிரவு 12.45 மணியளவில் அம்மனுக்கு அர்ச்சனையும், அதனை தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரி சனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

விழாவுக்கான ஏற் பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News