செய்திகள்

பாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது

Published On 2019-06-17 13:27 IST   |   Update On 2019-06-17 14:31:00 IST
உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இம்ரான் கான் கூறிய அறிவுரையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது நிராகரித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். சிறந்த ஆல்ரவுண்டரான அவர் 1992-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

உலக கோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இம்ரான்கான் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார்.

கடைசி பந்து வரை போராடும் படியும், டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யுமாறும், அவர் கேட்டு இருந்தார்.

ஆனால் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது இம்ரானின் அறிவுரையை நிராகரித்தார். டாஸ் வென்ற அவர் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆடுகளம் முதல் 10 ஓவரில் பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்தார்.

ஆனால் பாகிஸ்தான் வீரர்களால் முதல் 10 ஓவர்களில் இந்திய விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை.

விராட் கோலியும், பந்துவீச்சைத் தான் நாங்கள் முதலில் தேர்வு செய்து இருப்போம் என்று கூறி இருந்தார்.

Similar News