செய்திகள்

பாகிஸ்தானுக்கு 308 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா: முகமது அமிர் 5 விக்கெட் சாய்த்தார்

Published On 2019-06-12 13:51 GMT   |   Update On 2019-06-12 13:51 GMT
டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானுக்கு 308 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால் 9.5 ஓவரில் ஆஸ்திரேலியா 50 ரன்னைத் தொட்டது. அதன்பின் ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.



பிஞ்ச் 63 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய டேவிட் வார்னர் 51 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 22.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது, பிஞ்ச் 84 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய டேவிட் வார்னர் 107 ரன்கள் குவித்தார்.

அதன்பின் வந்த ஸ்மித் (10), மேக்ஸ்வெல் (20), ஷான் மார்ஷ் (23), கவாஜா (18), அலெக்ஸ் ஹேரி (20) கவுல்டர் நைல் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 49 ஓவரில் 307 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.



ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 42 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. முகமது அமிரின் அபார பந்து வீச்சால் கடைசி 48 பந்தில் 39 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து பின்னடைவை சந்தித்தது.

பின்னர் 308 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News