செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட்- பாகிஸ்தான் அணியை 105 ரன்களில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2019-05-31 11:51 GMT   |   Update On 2019-05-31 11:51 GMT
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி 105 ரன்களில் சுருட்டியது.
நாட்டிங்காம்:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் ஹோல்டரின் இந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

துவக்க வீரர் இமாம் உல் ஹக் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பகார் ஜமான்-பாபர் ஆசம் இருவரும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்த முயற்சி செய்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த ஜோடியை ரஸல் பிரித்தார். பகார் ஜமான் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபாபர் ஆசமும் 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.


ஹாரிஸ் சோகைல் (8), சர்பிராஸ் அகமது (8), இமாத் வாசிம் (1), சதாப் கான் (0), ஹசன் அலி (1) என அடுத்தடுத்து அவுட் ஆகினர். சரிவில் இருந்து மீட்டெடுக்க கடுமையாகப் போராடிய முகமது ஹபீஸ் 16 ரன்களும், வகாப் ரியாஸ் 18 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால், 21.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 105 ரன்களில் சுருண்டது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தாமஸ் 4 விக்கெட்டுகளும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், ரஸல் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.
Tags:    

Similar News