உலகம்

இளைஞர்கள் அதிகளவு மது குடிக்க வேண்டும்- ஜப்பான் அரசு அறிவிப்பால் சர்ச்சை

Published On 2022-08-20 06:45 GMT   |   Update On 2022-08-20 09:53 GMT
  • 2011-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் வரி வருவாயில் 3 சதவீதம் மது விற்பனையில் இருந்து வந்துள்ளது. இது 2020-ம் ஆண்டு 1.7 சதவீதமாக சரிந்தது.
  • கொரோனாவுக்கு முன்பு பெரும்பாலானோர் பார்களுக்கு சென்று மது அருந்தி வந்தனர்.

டோக்கியோ:

ஜப்பானில் கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இளைஞர்களிடம் மது அருந்தும் பழக்கம் குறைந்து உள்ளது.

மூத்த தலைமுறையினரோடு ஒப்பிடும் போது இளைஞர்கள் குறைவாகவே மது அருந்துகின்றனர். இதனால் அரசுக்கு வரி வருவாயில் அதிகளவு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு இளைஞர்கள் மது அருந்துவதை குறைந்ததுதான் காரணம் என்பதை அந்நாட்டின் தேசிய வரி முகமை அமைப்பு கண்டறிந்தது.

ஜப்பானில் 1995-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 100 லிட்டர் மது அருந்தி வந்துள்ளார். 2020-ம் ஆண்டுக்கு ஒரு நபர் ஆண்டு 75 லிட்டர் மது அருந்தி உள்ளார்.

இதையடுத்து வரி வருவாயை பெருக்க இளைஞர்கள் அதிகளவு மது குடிக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இதற்காக சேக் விவா என்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரசாரம் மூலம் குடிப்பழக்கத்தை இளைஞர்களிடம் பிரபலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

20 முதல் 39 வயதுள்ள ஜப்பானியர்களிடம் குடிப்பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என யோசனைகள் கேட்கப்பட்டு உள்ளன. மது விற்பனை அதிகரிக்க புதிய யோசனைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த யோசனைகள் வழங்குபவர்களுக்கு பரிசு, விருது வழங்கப்படுகிறது. இப்போட்டி செப்டம்பர் 9-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.

2011-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் வரி வருவாயில் 3 சதவீதம் மது விற்பனையில் இருந்து வந்துள்ளது. இது 2020-ம் ஆண்டு 1.7 சதவீதமாக சரிந்தது. கொரோனாவுக்கு முன்பு பெரும்பாலானோர் பார்களுக்கு சென்று மது அருந்தி வந்தனர்.

கொரோனாவுக்கு பிறகு வீட்டில் இருந்தே பணிபுரிந்ததால் வெளியில் சென்று மது அருந்துவது குறைந்தது. அந்த நிலை இளைஞர்களிடம் தொடர்ந்து வருகிறது. இதனால் இளைஞர்களிடம் மது குடிப்பதை அரசு ஊக்குவிக்கிறது.

பல நாடுகளில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரி வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மதுவை ஊக்குவிக்கும் ஜப்பான் அரசின் இந்தஅறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த முடிவுக்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News